ஞாயிறு, 12 ஜூலை, 2020

சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" நூல் குறித்து கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்



                   சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" நூல் குறித்து 
                    கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்





கவிமதி சோலச்சி அவர்களின்
காட்டு நெறிஞ்சி ஓர் அறிமுகம்…


இனிய நந்தவனம் பதிப்பகம்
பக்கங்கள் 128

முனைவர் எழில் சோம. பொன்னுசாமி அவர்களின் வாழ்த்துரையோடும், கவிஞர் சோலச்சியின் என்னுரையோடும்
புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில்
அழகு வர்ணனை எதுகை மோனை என்பதை எல்லாம் தாண்டி சமுதாயத்தோடு கலந்து நிற்கும் பிரச்சனைகளை சாட்டையடியாக தன் கவிதைகளில் தந்துள்ளார் கவிஞர். ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது காதல் கவிதைகள்.

நாம் சந்திக்கும் மனிதர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளை எளிய தமிழில் பல கவிதைகளில் கேள்வியாக நம்மிடம் கேட்பது  கவிஞரின் சமுதாய உணர்வை படம்பிடித்துக் காட்டுகிறது.
அப்படி இத்தொகுப்பில் நான் ரசித்து மகிழ்ந்த கவிதைகளை
தாங்களும் ரசித்து மகிழ இங்கே பதிவிடுகிறேன்.

சுதந்திரமாம் சுதந்திரம் என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள வரிகள்…

"சுதந்திரமாய்
வாழுது
வறுமையும்
வரதட்சணை கொடுமையும்
விண்ணையும்
தாண்டிவிட்டது
விதவிதமாய்
ஊழல்கள்"

இப்படி சமுதாயத்தின் அவலத்தை
பேசிய கவிஞர் இக்கவிதையின் முடிவில்....

அந்தரமா நிற்குது
அப்பாவி வாழ்க்கை
எப்ப மலருமோ
ஏங்கி வெடிக்குது
கண்ணீரே காணிக்கை"

-என்று நம்மை கண்ணீர் வடிக்க வைக்கிறார் கவிஞர்.

விழுதொன்று கண்டேன்
என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் உணர்வுகளின் உச்சம்.

"திருடுவதற்கு
ஒன்றுமில்லை
காலியாகவே
சனநாயகம்
சுரண்டப்பட்டது
மண்வளம் மட்டுமல்ல
மனிதவளமும் தான்"

மேலும் இதே தலைப்பில்

"கொள்ளையடிக்கப்பட்ட விடுதலையால்
பாரதியும் தாகூரும்
கண்ணீரால் கைகோர்த்தபடி வங்கக்கடலில்"
என்ன ஆழமான வரிகள்.

உயர்வு என்ற தலைப்பில் அவர் எழுதிய உயர்ந்த சிந்தனை.

"நன்றாகவே உயர்ந்திருக்கிறது
இந்தியா
விலைவாசியில்"

நாகரீகம் என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் உண்மையிலும் உண்மை.

"விலைக்கு வாங்கினேன்
விலையுயர்ந்த வியாதியை
நாகரீகத் தொட்டிலில் நான்"

பாரதி என்ற தலைப்பில் கவிஞர் சோலச்சி எழுதிய எழுச்சி வரிகள்…

"ஓ.. பாரதியே…
சாதிகளை கடந்தாய்
சாஸ்திரங்களை களைந்தாய்
நொறுக்கப்பட்ட
இனத்தின் மீசையும்
முறுக்கி விடப்பட்டது
உன் வரவால் தான்"

கவிஞர், இரங்கல் என்ற தலைப்பில் எழுதிய கவிதை நெஞ்சில் நிலைக்கிறது.

"ஏதோ ஒரு வாகனத்தால் நிகழ்ந்திருக்கக்கூடும்
இந்தப்படுகொலை….
பாராமுகமாய் பலரும்…
ஈக்களும் வண்டுகளுமே
இரங்கல் தெரிவித்தபடி
குடல் கிழிந்து
தலைநசுங்கி கிடந்தது
சாலையின் மையத்தில்
அந்தத்தெருநாய்"

மனதை நெகிழச் செய்த வரிகள்.

இப்படி இந்தப் புத்தகம் முழுவதும்
பொதுவுடைமை வாதியாய் பொங்கி எழுந்த கவிஞர் சோலச்சி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

காட்டு நெறிஞ்சி... இது நம் நாட்டிற்கான நாட்டு விதை!

கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி.. இன்றைய சூழலை அப்படியே படம் பிடித்து காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம். நிச்சயம் நாம் தாராளமாய் படிக்கலாம். வாசித்து மகிழ்வீர்…

விலை 110/-
நூல் தேவைக்கு
இனிய நந்தவனம் பதிப்பகம்
9443284823 

நூலாசிரியர் சோலச்சி 9788210863


நன்றி


ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்

9710513097