ஞாயிறு, 11 மே, 2025

சாதி மறுப்புத் திருமண தம்பதியர்கள் ஒன்று கூடும் மாநில மாநாடு - பாசறை முரசு

 

30.03.2025 திராவிட இயக்கப் போராளி பாசறை மு.பாலன் அவர்கள் தலைமையில் சாதி மறுப்புத் திருமண தம்பதியர்கள் ஒன்று கூடும் மாநில மாநாடு சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு மலரும் வெளியீடு செய்யப்பட்டது. மலரில் இடம்பெற்ற எனது கட்டுரை. 




சாதியற்றோரை கொண்டாடு; சமத்துவமே பண்பாடு..!

                        - சோலச்சி


 ஒருமைப்பாட்டின் அடையாளமாய் திகழும் இந்தியாவை உலகமே கொண்டாடி மகிழ்கின்றது. பெரும் மக்கள் தொகையில் உலகின் முதல் நாடாக விளங்கும் இந்நாட்டிற்கு பாரம்பரியமிக்க வரலாறு உண்டு. பலதரப்பட்ட இனங்களையும் பழமையான மொழிகளையும் கொண்டது. ஆறுகள் , பெரும் கடல்கள் , மலைகள் , பீடபூமிகள் , பள்ளத்தாக்குகள் , காடுகள் என நிறைந்து காணப்படும் பெரும் நிலப்பரப்புதான் இந்தியா. இயற்கை வளங்களாம் கனிம வளங்களும் கடல் சார் வளங்களும் குவிந்து கிடக்கின்றது. அதனால்தான், உலக நாடுகள் பெரும்பாலும் இந்தியா மீது தனிக்கவனம் செலுத்த முனைகின்றன. இயற்கை சக்தியும் மனித சக்தியும் நிறைந்து கிடந்தாலும் இந்திய விடுதலைக்குப் பின் இப்போது வரை வளரும் நாடாகவே இருப்பதுதான் நம்மை பலவாறு சிந்திக்க வைக்கிறது.

   வளர்ந்த நாடாக மாறுவதற்கு எந்த சக்தி குறிக்கே நிற்கின்றது..? உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பெரும்பாலானோர் முதன்மையாக இருந்தாலும் வறுமையும் வாழ்வியல் நோயும் மிகவும் உச்சத்தில் இருக்கின்றது. ஏழ்மையை ஒழித்து வளமையை மேலோங்க செய்ய எண்ணற்ற திட்டங்களை தீட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், திட்டங்கள் திட்டங்களோடுதான் இருக்கிறது பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. முட்டுக்கட்டைகான மூல காரணம் எது என்று தெரிந்தும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையால மறுப்பதுதான் வேதனையின் உச்சம்.

  உலகத் தமிழனை மதம் பிரிக்கிறது

  உள்ளூர் தமிழனை சாதி பிரிக்கிறது

  எல்லாத் தமிழனையும் சுயநலம் பிரிக்கிறது...! என்பார் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள். நாம் மொழியால் இனத்தால் வேறுபட்டு கிடைக்கின்றோம் என்பதை உணர்ந்தும் அதை சீர் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் வெளிச்சத்திற்கான வாய்ப்புகளே வரக்கூடாது என்று தடுப்பணைகள் போட்டு தடுத்துக் கொண்டே இருக்கின்றோம். ஒருவரை ஒருவர் சமத்துவ உணர்வோடு வாழ்ந்து விடக் கூடாது என்பதில் மத குருமார்களும் மதிப்புமிகு அரசியல் அதிபர்களும் மிக தெளிவாக உணர்ந்து காய்களை மிக நேர்த்தியாக நகர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

   மனிதனின் தோற்றமும் வளர்ச்சியையும் உற்று நோக்கினால் பிற விலங்குகளைப் போல்தான் மனிதனும் உடைகள் இன்றி ஒப்பற்ற பழக்கவழக்கங்கள் இன்றி காடுகள் மலைகளில் ஒளிந்து திரிந்து வாழ்ந்து வந்தான். சக்கரம் கண்டுபிடித்தான்; நெருப்பின் பயனை உணர்ந்தான்; நிலையான வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தான். நிலையாக ஓரிடத்தில் வாழ தொடங்கிய மனிதனிடத்தில் உடைகளை பேணுவதிலும் உணவு முறைகளை உற்பத்தி செய்வதிலுமே சிந்தனை மேலோங்கி இருந்தது. அவனிடத்தில் எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஒரே இனமாக கூடி வாழ்ந்து மகிழ்ந்தார்கள். வேறு நிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவர்களை காலம் தாழ்த்தி சேர்த்துக் கொண்டாலும் அவர்களிடத்திலும் அன்பையே செலுத்தினார்கள் என்பதுதான் உண்மை. எதற்காக காலம் தாழ்த்தி சேர்த்துக் கொண்டார்கள் என்றால் வந்தவர்களின் பழக்க வழக்கங்கள் அங்கு பூர்வீகமாக வாழ்ந்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களைப் பற்றிய முழுமையான புரிதலை உணர்ந்து கொண்ட பிறகே தங்களுடைய குழுக்களில் அவர்களை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களிடத்தில் மொழியின் வளர்ச்சி மட்டுமே மேலோங்கி இருந்தது. ஒருவரை ஒருவர் உணர்வுகளால் பகிர்ந்து கொள்வதற்கு மொழியை வளமை படுத்த முனைந்தார்கள். மொழியை வளமை படுத்த நினைத்த அவர்களிடத்தில் எவ்வித வேறுபாடுகளும் நுழையவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

   வேறு கண்டங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்களால் இந்த பெரும் நிலப்பரப்பாம் இந்திய துணைக்கண்டத்தில் எண்ணற்ற பிரிவுகள் காலூன்ற தொடங்கியது. அதில் பிழைப்பு தேடி வந்தவர்களின் நயவஞ்சக சூழ்ச்சியால் ஒற்றுமை சிதைந்து பிழைப்பு தேடி வந்தவர்கள் முதன்மையானவர்களாக தங்களை மாற்றிக் கொண்டார்கள். பூர்விகமாக வாழ்ந்த மக்களை சிதைத்து அவர்களுக்குள் பாகுபாட்டை விளைவித்து பிழைப்பு தேடி வந்த நயவஞ்சக கூட்டம் தன்னுடைய வயிறை நிரப்பி கொண்டது. ஏதும் அறியாத அப்பாவிகளாய் வாழ்ந்த மக்கள் இப்போது வரை ஏதோ ஒன்றைப் பிடித்து சுய பெருமை பேசுவதிலும் மற்றவர்களை அடக்கி ஆள்வதிலுமே தன்னை முன்னிலைப்படுத்தி பிழைப்பு தேடி வந்தவர்களுக்கு கொத்தடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொத்தடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று உலகத் தலைவர்கள் ஆபிரகாம் லிங்கன், இத்தாலியின் தந்தை கரிபாலிட்டி, லெனின், காரல் மார்க்ஸ், அம்பேத்கர், தந்தை பெரியார், ஆப்பிரிக்காவின் அறிவுச் சுடர் நெல்சன் மண்டேலா என சான்றோர் பலரும் போராடினர். ஆனால் இப்போது வரை இந்த சாதிய கொத்தடிமை முறை ஒழிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

1916 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாதிகள் என்கிற உயரிய கட்டுரையை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உலக மக்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றார். அதில் இந்தியாவில் நிகழும் சாதிய கொடுமைகளையும் சாதிய முறைகளையும் சாதி ரீதியான அச்சுறுத்தல்களையும் சாதிய வன்கொடுமைகளையும் படம்பிடித்து காட்டியிருப்பார்கள். பெரும்பாலான உலக நாடுகளில் மதத்தை வைத்து சண்டை செய்வார்கள். சில நாடுகளில் மனிதனின் நிறத்தை வைத்து சண்டை செய்வார்கள். சில நாடுகளில் நிலத்தை வைத்து சண்டையிடுவார்கள். ஆனால், இந்தியாவின் சாபக்கேடு சாதியை வைத்து சண்டையிடுவதுதான் அவமானம். வன்கொடுமைகள் மதம், இனம், நிறம் ,நிலம் என எந்த வகையில் தலை தூக்கினாலும் அவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இந்தியாவில் சாதிகள் என்கின்ற கட்டுரை இப்போது வரை பெரும் தாக்கத்தையே ஏற்படுத்துகின்றது. அந்த சாதிகளில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து கதவுகளையும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் திறந்தே வைத்திருக்கின்றார்கள்.





  திருமண சடங்குகளில் மாற்றத்தை கொண்டு வருவதில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். ஒரே இனத்திற்குள் திருமணம் முறை மாறி பரவலாக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபட விளக்குகின்றார். அப்படி விரும்பியவருடன் திருமணம் என்கிற முறை மலருமேயானால் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சமத்துவம் மேலோங்கும்.‌ சாதி, மதம் ,இனம் நிறம், நிலம் இவற்றை வைத்து வயிறு வளர்க்க வேண்டும் என நினைக்கும் அரசியலில் ஊடுருவியிருக்கும் பிழைப்பு வாதிகள் வன்முறையை தூண்டி வசதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தன்னை நம்பி வந்த மக்களை நட்டாற்றில் தள்ளி, எள்ளி நகையாடுகின்றார்கள்.

  கேள்வி கேட்காத சமுதாயம் உருப்படாது என்கின்றார் மனித குல மாமேதை சாக்ரடீஸ்; உழைக்கும் வர்க்கமே ஒன்று கூடுங்கள் என்று உரக்க அறைகூவல் விடுக்கின்றார் காரன் மார்க்ஸ்; நானே சொல்லி இருந்தாலும் உன் அறிவுக்கும் புத்திக்கும் சரி என்று தோன்றுவதை செய் என்கின்றார் தந்தை பெரியார்; அதிகாரம் கைக்கு வந்தால் மட்டுமே தலை நிமிர்ந்து வாழ முடியும் அதற்காக படி படி கல்வியால் மட்டுமே அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்கின்றார் அண்ணல் அம்பேத்கர்; கல்விதான் ஒருவனை முழு மனிதனாக மாற்றுகிறது என்கின்றார் புரட்சியாளர் சுவாமி விவேகானந்தர்.

    மதத்தாலும் சாதியாலும் எண்ணற்ற மூட நம்பிக்கைகள் வேரூன்றி நிற்கின்றது. குடி பெருமை பேசியே பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றது. சில சமூக விரோதிகள் அரசியலில் நுழைந்து அரசியல் ஆதாயத்திற்காக மதத்தையும் சாதியையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். வருங்கால சந்ததியினர் மதங்களற்றவர்களாகவும் சாதிகள் அற்றவர்களாகவும் மனித நேயத்தையும் மனிதத்தையும் கொண்டவர்களாகவும் வாழ வகை செய்ய வேண்டியது நம்முடைய கடமை. சாதி மறுப்பு திருமணம் செய்தோரின் பெயர் பட்டியல் நீளும். சாதி மறுப்பு திருமணத்தால் சமூக கட்டமைப்பு வளர்ச்சி மாறுகின்றது. மறுமலர்ச்சி மிக்க சமுதாயம் உருவாகுவதற்கு சாதி மறுப்பு திருமணம் மிகவும் துணையாக இருக்கின்றது.

    சாதிகளைத் துறந்து மதங்களை வேரறுத்து மனிதனாக வாழ வேண்டும் என்று பலரும் துணிந்து விட்டனர். ஒரே இனத்திற்குள் மணம் புரிவதை கைவிட்டு மனம் விரும்பும் ஒருவரை மணப்பதற்கு தயாராகி விட்டனர். ஆனால் அவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமத்துவத்தை கேலிக்கூத்தாக்குகிறது. 150 கோடியை மக்கள் தொகையில் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வேளையில் மனிதத்தை இழந்து வெற்று சடலமாக வாழ்வது வீண் என்பதை பலரும் உணர்ந்து விட்டனர். அப்படி வாழ துணிந்தவர்களுக்கு பாதுகாப்பு என்கின்ற மாபெரும் அரண் தேவைப்படுகின்றது.

   இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைவரையும் சமம் என்கின்றது. அனைவருக்குமான இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகின்றது; வகைப்படுத்துகின்றது. அந்த வகையில் மதத்தை துறந்தவர்களை சாதியை துறந்தவர்களை சாதிகள் அற்றவர்களாக அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களாட்சி நாடாகிய இந்திய ஒன்றியத்திற்கு இருக்கின்றது. சாதியற்றவர்களுக்கான பாதுகாப்பையும் இட ஒதுக்கீட்டையும் மாநில அரசுகள் தாமாக முன்வந்து சட்டமன்றங்களில் சட்டமாக இயற்றி அங்கீகரித்து ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.



  அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்று வையகத்து புகழ் மாணிக்கம் வள்ளலாரின் நெறி மெய்ப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. சாதிய வன்கொடுமைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் இந்தியா முழுவதும் நீண்டு கொண்டே இருக்கின்றது. சாதியற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அளிப்பதன் மூலம் கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்வதால் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் உறுதி செய்யப்படும். சாதியற்றவர்கள் பெரும்பான்மை சமூகமாக வலுப்பெறும் பொழுது சாதியையும் மதங்களையும் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருப்பவர்களின் கரங்கள் தானாக விலகிவிடும். மாறுபட்ட மண் மாறுபட்ட கலாச்சாரம் மாறுபட்ட பழக்கவழக்கம் கொண்ட இந்நாட்டில் ஒரே நாடு ஒரே மொழி என்கின்ற நயவஞ்சக சூழ்ச்சியில் மக்களை வீழ்த்த காத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் சமூக நீதியை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அயோத்திதாச பண்டிதர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் கண்ட கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றால் இக்காலத்திலேயே இந்த இட ஒதுக்கீடை சாத்தியமாக்க வேண்டியது அவசியமாகின்றது.

   தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் 69% விழுக்காடு இட ஒதுக்கீடுகளைச் சத்தியமாக்கிய இத்தமிழ் நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்யும் சாதியற்றோருக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி உலக வரலாற்றில் ஒப்பற்ற இடத்தை பிடிப்போம் என நம்புகின்றோம்.

         ************

மாநாட்டு சிறப்பு மலர் தேவைப்படுவோர் 

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 

பாசறை முரசு ஆசிரியர் மு.பாலன்

98417 81220

திங்கள், 5 மே, 2025

நாள் பூரா நானும் உன்ன பாக்கனும் - சோலச்சியின் காட்டு வெறிச்சி நூலிலிருந்து

 நாள் பூரா நானும் உன்ன பாக்கனும்

நான் சாய உன் மடியும் பூக்கனும்


உன் நீளமான கூந்தல்

என் நெற்றியிலே வருடனும்.!

உன்ன நான் முழுசா திருடனும்.!


உன் உள்ளத்துல பூத்தப் பூ

மெல்ல உதட்டோரம் சிரிக்குது.!

உரிமையோடு என் இடுப்ப

ஒரு மாதிரியா அணைக்குது.!


உன்ன நெனச்சாலே பனியாறு

எம்மனசில் ஓடுது.!

நீ நெருங்க குளிரும்

இன்னும் கொஞ்சம் கூடுது.!


வாடைக்காத்து என்ன வந்து

தொட்டது இல்ல!- உன்

ஓரப்பார்வை என் உசுர

குடையுது புள்ள.!


ராத்திரியில் நான் தூங்கமுடியல.!

காத்திருக்கும் இரு மனசும்

ஒன்னு சேர பொழுதும் விடியல.!


நீ பூத்த அந்த நாளு

இன்னும் மனசில் நிக்குது.!

நிற்காம நீ பார்த்த

அந்த பார்வை இப்பவும் சொக்குது.!


சின்ன வயசிலேயே

என் கன்னக்குழி

உன்னை கட்டி இழுத்தது.!


சின்னப் பொண்ணா நீ இருந்த

உன் மனசு

என்ன ஒதுக்கி வச்சது.!


இப்ப ரெண்டு பேரும்

தவிக்கிறோமே...

அந்த காதல்

எப்படி நுழஞ்சது.!


என்ன அறியாம உன்ன

அழைத்தேன் அன்று ;

வந்திருந்தா தவிக்காதடி

நம்ம உசுரு இன்று.!

ஒன்னுக்குள் ஒன்னாவே

நாம இருப்போம்.!


அந்த

ஊரு உலகம் பார்க்கும் போதும்

வாழ்ந்து காட்டுவோம்.!


உன்னைத் தாங்கி

நானிருக்கேன்

தனிமையிலே உன்னைப் போல.....

  • சோலச்சி

[ சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" கவிதை நூலிலிருந்து....]


வெள்ளி, 4 ஏப்ரல், 2025

சாதி மறுப்பு திருமண தம்பதிகள் மாநில மாநாடு

 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சென்னை பெரம்பூர் மான் போர்ட் பள்ளியில் பாசறை முரசு இதழின் ஆசிரியர் மு.பாலன் அவர்களின் ஏற்பாட்டில் சாதி மறுப்பு திருமண தம்பதிகளின் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டு மலர் வெளியீடு, கருத்தரங்கம், கவிதை அரங்கம், பாட்டரங்கம் என நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிஞர் செல்வகணபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இதோ....


கவிஞர் செல்வகணபதி தலைமை கவிதை வாசிக்கின்றார்.


சாதி மறுப்பு மணத்தின் வழித்தோன்றல் சாதியற்ற சமுதாயமே.....!




பகுத்தறிவுக் கடலில் நீந்தி

பெரியோர் வகுத்தளித்த வழிதனில்

பாங்குடனே திகழ்ந்து

உலகத்தார் உச்சி முகர்ந்து பாராட்ட

எட்டுத் திக்கும் தமிழ் கொட்டி

முழங்கி வருகுது பாரீர்

பாசறை முரசென்னும்

பெருங்களஞ்சியம் புரட்சிப் படை அமைத்து

பயணிக்கும் பேரழகு காணீர்....!


எங்கள் பெருங்கவி உள்ளிட்ட

பேராற்றல் கொண்டோர்

பெரும் படை திரட்டி அணிவகுத்து

அமர்ந்திருக்கும்

தொல் தமிழின் தொண்டர்கள் யாவருக்கும்

புதுக்கோட்டை சோலச்சியின்

பெருவாரியான வாழ்த்துகளும் வணக்கங்களும்....


சாதி மறுப்பு திருமண தம்பதியரின்

இரண்டாவது மாநில மாநாடு

கட்டு கலையாமல்

பெருகட்டும் இந்த தேன்கூடு..!


உரக்கச் சொல்வீர்; உணரச் செய்வீர்

உயர பறக்கும் பறவை போல

உள்ளம் கொள்வீர்..!

கொஞ்சி குலாவி கொட்டும் மழை போல்

வாழ்ந்து பாரீர்..!


பரந்து கிடக்கும் கடலில் பலவும்

கலந்து கிடக்கும் காட்சி கண்டும்

நீவீர் ஒப்பி உண்டு மகிழ்கிறீர்...!

மனிதன் ஒத்து வாழ தடையாய் நின்று

மடையர் ஆகிறீர்..!


திங்கிற சோத்தில் பார்ப்பதில்லை

பொங்குற அரிசியிடம் கேட்பதில்லை

உடுத்துற துணியில் தெரிவதில்லை

படுக்குற மெத்தையும் சொல்வதில்லை

ஆளாய் பறக்கும் ஆளைக் கவிழ்க்கும்

அந்தப் பணத்திடம் கேட்பதில்லை

அடடா.... விஞ்ஞான முறையில் குழந்தை பிறக்க

செலுத்தும் கரு யாதென பார்ப்பதில்லை..!


காரியங்கள் ஆக வேண்டி

கால் பிடிக்கும் போது பார்ப்பதில்லை

சுயசாதி ஆனாலும்

சொத்து இல்லையென்றால் சேர்ப்பதில்லை

வக்கனையாய் வாய் இளித்து

வாக்கு கேட்கும்போது தெரிவதில்லை...!


அடேய்......


இயற்கையிடம் பேதமில்லை

ஆனாலும்

அவற்றிலும் அசிங்கம் செய்தீர்..!

வீசும் காற்றில் நஞ்சைக் கலந்தீர்

பெய்யும் மழையிலும் பேரிழப்பு செய்தீர்..!

நிலத்தை நாளும் கூறு போட்டீர்

நீயா நானா என்றே வாழ்வு தொலைத்தீர்..!


பூமி புரண்டால் பொல்லாத நீயும்

புதைந்திடுவாய்

பொங்கும் கடலுக்கும் வழி தெரியும்

புரிந்து கொள்வாய்

எழு கதிரவன் கோபம் கொண்டால்

எரிந்து போவாய்

சாதி ஒழிக என்று சொல்லி

பிழைத்துக் கொள்வாய்...!


சாதியில் குளிர் காயும்

பித்தர்கள் படைத்த மடமையை கொளுத்துவோம்

சரித்திரம் விளையும்

புத்தரின் வழியினில் அறிவுடைமை புகுத்துவோம்...!


காகம் கழுதையோடு புணர்ச்சி கொள்ளாது

ஓணான் ஒட்டகத்தோடு உறவு கொள்ளாது

குரங்கு குயிலோடு கொஞ்சி மகிழாது

மாமரத்தில் தேங்காய் காய்த்திடாது

மல்லிகைச் செடியில் ரோஜா பூத்திடாது

கடித்துக்கொண்டே கிடந்தாலும்

நாய் நாயோடுதான் உறவு கொள்ளும்...!


தவளைக்கு கல்யாணம் நடத்தி வைப்பாங்க

கழுதைக்கும் கல்யாணம் நடத்தி வைப்பாங்க

மரத்துக்கு கூட கல்யாணம் நடத்தி வைப்பாங்க

புடுச்ச மனுசனுக்கு மணம் முடிக்க

குறுக்கே நிப்பாங்க...!


இல்லாத சாமிக்குத்தான் அலங்காரம்

அது எடுக்குமாம் எண்ணற்ற அவதாரம்

அது கண்ணில் பட்ட பொண்ணை எல்லாம் கட்டிக்குமாம்

நாம காதலிச்சா மட்டும் இங்கே பட்டுக்குமாம்...!


வந்தேறி கூட்டத்தால் வந்ததிந்த சாதி

அதுக வாழ்ந்துகிட்டு

கெடுக்குதிங்க நீதி..!

துரத்தி அடிக்க

சாதி மறுப்பு மணம் தானே சமுகநீதி..!


பட்டா நிலம் பட்டாக்கத்தி வச்சுக்கிட்டும்

கட்சிக்கொடி கள்ளப்பணம் கட்டிக்கிட்டும்

உதவாக்கரைகள ஊருக்கு ரெண்டு சேத்துக்கிட்டும்

ஆடுற ஆட்டம் கொஞ்சமில்ல

அதுகள காலில் போட்டு நசுக்கிட

இட ஒதுக்கீடு தானே எல்லை..!


சாதி மறுப்பு திருமணம்தான்

சமத்துவத்தின் பிறப்பிடம்

இந்த வரலாற்று சாதனையை படைக்கும்

பொறுப்பு அரசிடம்..!


தட்டிக் கழிக்காமல் தடைகள் உடைப்போம்

கட்டிக் காக்கின்ற படைகள் அமைப்போம்..!


மனம் ஒத்து வாழ இங்கே வழி விடு

மதம் மற்றும் சாதியினை தீயிலிடு

மனிதம் காப்போரின் கைகளிலே மலர் கொடு

மறுக்காமல் கைகுலுக்கி தோள்கொடு...!


வா... கைகுலுக்குவோம்

வா..‌. கை நனைப்போம்...!


சோலச்சி

புதுக்கோட்டை

பேச: 9788210863


மாநாட்டு மலர் வெளியிடப்படுகிறது.





ஞாயிறு, 23 மார்ச், 2025

விதைக்கலாமின் 500 ஆவது வார விழா

23.03.2025

பனிப்பாறைகள் உருகி 
கடல் மட்டம் உயருகிறது 
மரங்கள் பெருகி 
பூமித்தாயின் மேல் மட்டம் குளிர்கிறது 
குளிர்விக்கின்ற தோழர்களை
கொண்டாடும் பெருவிழா 
விதைக்கலாமின் 
500 ஆவது வார விழா.....

வாருங்கள் தோழர்களே 
வரலாற்றில் இடம் பிடிப்போம்
வாழ்ந்தோம் என்பதற்கான சான்றாய் 
நல் இதயங்களைப் படிப்போம்...

கடல் மட்டம் உயர்வதை தடுப்போம் 
காணும் இடம் எங்கும் 
பச்சை நீராடை தொடுப்போம்..

உலக வரலாற்றில் 
புதுக்கோட்டை உயர்ந்தே நிற்க்கிறது

வானத்து ஆழமும் நிறைந்து வழியும் 
வற்றாத சொல்லெடுத்து 
வாழ்த்தி மகிழ்வோம்........

பேரன்பின் வழியில் 
சோலச்சி


திங்கள், 10 மார்ச், 2025

பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி - கவிஞர் செங்கை தீபிகா


நூல் வெளியீட்டு விழா


08.03.2025


சனிக்கிழமை


தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி அவர்கள் வெளியிட 
டாக்டர் சுபாஷ் காந்தி அவர்கள்
பெற்றுக் கொள்கின்றார்கள்




தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அன்னவாசல் கிளை நடத்திய "கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சிகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா கோகிலா ஆங்கிலப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


போற்றுதலுக்குரிய தமிழ்ச் செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி  அவர்கள் வெளியிட டாக்டர் சுபாஷ் காந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.


எழுத்தாளர் கனிமொழி செல்லத்துரை மற்றும் எழுத்தாளர் பாண்டிச்செல்வம் நூல் அறிமுகம் செய்தனர். 













தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி அவர்களுடன்
கவிஞர் செங்கை தீபிகா


தலைமை உரை உரை சோலச்சி



முனைவர் கலையரசன் மற்றும் எழுத்தாளர் பாண்டிச்செல்வம்

கவிஞர் நிரோஷா 





எழுத்தாளர் பாண்டிச்செல்வம்

எழுத்தாளர் கனிமொழி செல்லத்துரை




பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீட்டு நிகழ்வு 



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அன்னவாசல் கிளையின் கௌரவத் தலைவர் தோழர் கே.ஆர்.தர்மராஜன் அவர்கள் முன்னிலை வகிக்க கிளைச் செயலாளர் தோழர் சாக்கிய பிரபு வரவேற்புரை வழங்க வீதி கலை இலக்கிய களம் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா,  தமிழ்நாடு கலை இலக்கியப்பெரும் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் பாலச்சந்திரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அன்னவாசல் கிளையின் வட்டார தலைவர் கவிஞர் நிரோஷா , பேராசிரியர் ஆறுமுகம் , மொழியியல் ஆய்வாளர் முனைவர் ஏசு ராசா, செங்காந்தள் பதிப்பகத்தின் நிறுவனர் தோழர் பவுலி, ஆகியோர் வாழ்த்துரை வழங்க உலகக் கவிஞர் பிரமுகமது, எழுச்சிக் கவிஞர் முருகேசன், கவிஞர் சின்ன கனகு, கவிஞர் அழ.கணேசன், கவிஞர் சக்திவேல், ராஜாளிபட்டி கவிஞர் ஹேமா மற்றும் தோழர்களும் உறவினர்களும் என திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது.




உலகக்கவிஞர் பீர் முகமது அவர்கள்


மொழியில் ஆய்வாளர் ஏசு ராசா அவர்களுடன்
ராஜாளிப்பட்டி கவிஞர் ஹேமா


எழுச்சிக் கவிஞர் முருகேசன் அவர்கள் 

கவிஞர் நிரோஷா மற்றும் அவரது கணவருடன்




கவிஞர் இந்துமதி

தோழர் எம்.சி.லோகநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது.
நடுவில் மதிப்புரு முனைவர் மாயழகு அவர்கள்

தோழர் கே ஆர் தர்மராஜன் அவர்களுக்கு
சிறப்பு செய்யப்படுகின்றது



கிளைச் செயலாளர்
கவிஞர் சாக்கிய பிரபு



தோழர் மரம் ராஜா அவர்கள் 

மொழியில் ஆய்வாளர் தோழர் ஏசு ராசா மற்றும்
 பதிப்பகம் நிறுவனர் தோழர் பவுலி

கவிஞர் மு கீதா அவர்கள்

பேராசிரியர் ஆறுமுகம்






ஏற்புரை வழங்குகின்றார் கவிஞர் செங்கை தீபிகா

டாக்டர் சுபாஷ் காந்தி அவர்கள்

தோழர் பாலச்சந்திரன் அவர்கள்

போற்றுதலுக்குரிய
தமிழ்ச் செம்மல் தங்க மூர்த்தி அவர்கள்






நிகழ்வின் தொடக்கமாக கொட்டும் அருவி கோவிந்தசாமி அவர்கள் மகளிர் தின சிறப்பு பாடல்களை பாட புதுக்கோட்டை மரம் ராஜா அவர்கள் முன்னெடுப்பில் ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.


கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் கவிதைகள் குறித்து தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி அவர்கள் நூலில் பல கவிதைகளை குறிப்பிட்டு வெகுவாக பாராட்டி வாழ்த்தினார்கள். மகளிர் தின விழாவில் வெளியிடப்பட்ட இந்நிகழ்விற்கு பெண்கள் திரளாக கலந்து கொண்டது வெகு சிறப்பாக அமைந்தது. 


பதிப்பகம்: 

நூலின் விலை: ரூபாய் 150/-

நூல் தேவைப்படுவோர்

செங்காந்தள் சோழன் பதிப்பகம் 

அலைபேசி எண்: +91 99425 63362


காதல், கோபம், பெண் விடுதலை, சமூகம், அன்பு ,இயற்கை, பெற்றோர், உறவினர்கள், அண்ணன், தம்பி , சகோதரி, ஆசிரியர் என பன்முகப்பட்ட நூலாக பறக்க தயங்கும் பட்டாம்பூச்சிகள் நூல் வெளிவந்திருக்கின்றது. தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய நல்லதொரு நூல். கவிஞர் செங்கை தீபிகா அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் இன்னும் ஏராளமான நூல்களை வெளியீடு செய்து உச்சம் தொட மனசார வாழ்த்தி மகிழ்கின்றேன். 

பேரன்பின் வழியில் 

சோலச்சி 

10.03.2025