ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

இரவை இதமாக்கிய கலைஞன் கவியரசர் கண்ணதாசன் - சோலச்சி

 

 

 

இரவை இதமாக்கிய கலைஞன் கவியரசர் கண்ணதாசன்- சோலச்சி

 

 


 

மொழி வாழ்த்து:-

 

 

கொதித்தெழுந்த கண்ணகியின்

காற்சிலம்பில் வெடித்தவளே

கொடுமை கண்டு துறவு பூண்ட

மாதவியின் மடியினிலே துடித்தவளே

கரிகாலன் கட்டி எழுப்பிய

கல்லணையில் பால் வார்த்தவளே

அகத்தியம் தொல்காப்பியத்தில் எழுந்தவளே

அகர முதல என பாடி அதிகாரம் செய்து

அவனி எங்கும் மலர்ந்தவளே

எட்டுத்தொகை பத்துப்பாட்டென அகமும் புறமுமாய்

எட்டாத உயரத்தில் நிற்பவளே

கம்பன் செதுக்கிய காவியத்திலும்

கட்டுக்கடங்காமல் கலைநயமாய் பூத்தவளே

மானே தேனே மயிலே குயிலே என்று

மறுபடியும் மறுபடியும் கொஞ்சி பேசிட

இணையற்ற மொழியாளே என் தமிழே

சென்ற இடமெல்லாம் வென்றவளே

ஒன்றியத்தின் வஞ்சகத்தில் வீழ்ந்திடாமல்

எப்போதும் உயர்ந்தே நிற்பவளே

போற்றுகின்றேன் இதயத்தில் உன்னைத் தாங்கி

வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன்...

 

 

 


கவியரங்க தலைமைக்கு:-

 

கனத்த குரலில் ஒரு வசீகரம்

கருத்து பா வடிக்கும் மேனியோ பொன்னிறம்

 

சுவை பட பேசுவதில் வல்லவர்

சுடர்விழி காட்டிடும் நல்லவர்

 

சங்க இலக்கியமோ சரம்சரமாய் கொட்டும்

சங்கீதம் அவர் நாவில் தேன் ஊட்டும்

 

ஐயா மு பா  , முத்துநிலவனின் செல்லப்பிள்ளை

கவிச்சுடரும் , தமிழ்ச்செம்மலும் கொண்டாடி மகிழ்வதால் இவர்

தமிழ் சமூகத்தின் தங்கப்பிள்ளை

 

இதமாக பிடித்தேன் இவர் விரலை

இவர் எப்போதும் 20 வயது விடலை

 

இயல் இசை நாடகத்தில் மகா வேந்தர்

இன்முகத்துடனே காட்சி தரும் எங்கள் மகா சுந்தர்

 

 

இரவை இதமாக்கிய கலைஞன் :-

 

இன்பத்தமிழ் உள்ளவரை வாழ்ந்திடுவார்

இதயங்கள் யாவற்றையும் அளந்திடுவார்

இரவின் மடியினிலே தவழுகின்றார்

இதமான கனவுகளால் கமழுகின்றார்

 

மயிலிறகால் மைவிழியாள் தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

குயிலிசையால் குலவிளக்காள் தேன் சொட்டச் சொட்ட படரும்

இறுக்கமான மனதையும் இதமாக கிளரும்

நெருக்கமான அவர் பாட்டால் ஏதேதோ ஒளிரும்

நேரம் செல்லச் செல்ல நிச்சயமாய் குளிரும்

 

இருளைச் செதுக்கி இளையநிலாவை உருக்கி

என்னுயிர் தமிழைக் காய்ச்சி

பல்லுயிரும் ரசிக்கும் படியான

பாமாலை தொடுத்தவர்

பாமரரின் குரல் ஒளியாய் எளிய நடையினை கையில் எடுத்தவர்

 

கட்டோடு குழலாட ரசித்தவர்

கட்டுக்கடங்கா ரசமதை உதட்டோடு ருசித்தவர்

மாலை பொழுதின் மயக்கத்திலும்

கனவு காண வைக்கும் பெருங்கவிஞன்

கடல் மேனியிலும் நின்றாடும் பெரும் கலைஞன்

 

இறுக்கமாய் அமைந்தாலும்

கிரக்கமாய் இருந்தாலும் இவரின்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலை

காதோரம் போர்த்திக் கொண்டால்

அழகு மிகுந்த ராஜகுமாரியும்

மேகமாக செல்வாள்

ஜரிகை நெளியும் சேலை கொண்டு

மலையையும் மூடுவாள்

மன்னவன் எங்கே எனவும் தேடுவாள்

 

சாமரம் வீசி சிந்துகவி பேசி

மடியில் அமர்ந்து கொஞ்சிடுவாள்

கொடியில் பூத்து குளிர்ந்திட விஞ்சிடுவாள்

 

அமைதியான நதியினிலே அவர் பாடல் அழைத்துச் சென்றிடும்

தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலையும்

திணறடித்து வென்றிடும்

 

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக

தேன் தமிழின் சொல்லெடுத்து

வான் மழையில் தான் நினைத்து

வலம் வரும் அவர் பாடல் கேட்டால்

இரவென்ன இரவு பகலும் பனி போர்த்தி கிடக்கும்

பங்குனி வெயிலுக்கும் குளிரடிக்கும்...

 

ஒரு பொழுதா மலராக கொடியில் இருந்தார்

ஒரு தடவையா தேன் கொடுத்து மடியில் விழுந்தார்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட காணலாம்

அவன் பேச நினைப்பதை அவள் பேச தோணலாம்

 

இணையருடன்  இவர் பாட்டொலி கேட்டுவிட்டால்

இரவுக்கு நல் விருந்து தான்

கட்டிலும் தாளம் போடும் உறங்காமல் இருந்துதான்

 

இவருக்கு எப்போதும் இயற்கை இளைய கன்னி

அதனால் தான் ஏங்க வைக்கின்றார் இப்போதும் துணைய எண்ணி

 

சோகத்தையும் சுகமாக ரசிக்க வைத்தவர்

மேகத்தையும் மேன்மையுற தைத்தவர்

 

கவின்மிகு காதலையும் திறன் மிகு தத்துவத்தையும்

கரைத்துக் குடித்தவர்

கண்ணே கலைமானே என கலந்தும் கொடுத்தவர்

 

இவரின் பாடலோடுதான் வாழ்வு தொடங்கும்

இவரின்றி எப்படி வாழ்வும் அடங்கும்

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன

வீடுவரை உறவை வைத்து கடைசிவரை அவர் பாட்டை வைத்த

மகா கலைஞனின் பாடல்கள் சிலவற்றை

இழவு பாடல்களாய் முத்திரை குத்திய போதும்

உரிமை கீதம் பாடியவர்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று

உணர்வோடு நம்மை நாடியவர்

 

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு

என் நெஞ்சு குலுங்குதடி

சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு

இரவில் இப்போது கேட்டாலும் கிளுகிளுப்பு....

 

 

மண்ணை கூறுபோட்டு விற்பவருக்கும்

மண்ணில் கூறுகெட்டு  நிற்பவருக்கும்

ஆடி அடங்கும் வாழ்க்கையில்

ஆறடி நிலமே சொந்தம் என்று உரைத்தார்

ஆனாலும் இப்போது அதற்கும் வழியில்லை

அரைப் படி சாம்பலுக்குள் கரைத்தார்

 

இனிய காற்றுக்கென்றே கட்டியதுதான் சாளரம்

இரவுக்கென்றே இவர் எழுதிய பாடல்கள் ஏராளம்

 

சிப்பியும் இருந்தது முத்தம் இருந்தது

திறந்து பார்க்க நேரமில்லாமல் ஏங்கிய பேரரசர்

சிந்தை இருந்தது சந்தம் இருந்தது

கவிதை பாட நேரமில்லாதபோதும்

பெருங்கவி படைத்த கவியரசர்

 

சொற்களைத் தேடி இவர் அலைந்ததில்லை

சொல்லும்படி இவருக்கு நிகர் யாருமில்லை

 

போகிற போக்கில் எழுதித் தள்ளியவர்

போகிறேன் என புலம்புவோரின் மனதையும் அள்ளியவர்

 

மயக்கமா கலக்கமா எனக்கேட்டு வாலிக்கும் வாழ்வு கொடுத்தவர்

மனம் கவரும்படி திரைத்துறையில் போர் தொடுத்தவர்

 

நித்திரையில் முத்திரை பதிக்கும் பத்திரமாத்து தங்கம்

சித்திரைப் பெண்ணும் இவர் மடிக்காக எப்போதும் ஏங்கும்

 

சிறுகூடல்பட்டியில் பிறந்த முத்து ஐயா

சிறகடித்து பறக்குது உன் வித்து  ஐயா

 

****

 



30.08.2026 புதுக்கோட்டையில்  வீதி கலை இலக்கியக் களம் - 147 . இல் அண்ணன் மகா சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு கவியரங்கில் வாசித்த கவிதை.

நட்பின் வழியில் 

சோலச்சி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஞாயிறு, 14 ஜூன், 2026

கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கு அகவை தின வாழ்த்து மடல் - சோலச்சி

     போற்றுதலுக்குரிய எங்கள் ஐயா கவிச்சுடர் அவர்களின் இனிய அகவை தினத்தில் ஐயா அவர்களை ( 14.06.2026 ) அவர்களது இல்லத்தில் சந்தித்து மகிழ்ந்தேன். 

   ஐயா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த அகவை தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.





   அகவை தினத்தில் நான் வழங்கிய வாழ்த்துப்பா மடல்.


                   வாழ்த்து மடல் 


செந்தமிழ்ச் சுடரே செழுந்தேனின் சுவையே

நந்தன தமிழின் நனிமிகு கவிதையே

சிந்தனைக் களஞ்சியமே சீர்மிகு ஓவியமே

காந்திநகரின் கனிச்சுளையே கலைமிகு காவியமே


கலைஞர் வார்த்தெடுத்த கவின்மிகு சொல்லேரே

பெரியார் பேரறிஞர் பெருமைமிகு பெருந்தலைவர்

பாட்டுச் சக்கரவர்த்தி பாவேந்தரைக் கண்டதில்லை

கூட்டுக் கலவையாய் தமிழ் உம்மைக்காட்டி மகிழ்கிறாள்


பாட்டுத் திறத்தாலே பாரை ஆளுகின்றாய்

எட்டுத்திக்கும் தமிழோசை கூட்டி மகிழ்கின்றாய்


சந்தப்பாவேந்தர் வெண்ணரசின் சங்கிலித் தொடரே

கருப்புத் தங்கம் மண்டேலா கண்டிருந்தால்

பொறுப்புடனே கட்டித் தழுவி இருப்பார்

பொறாமை கொள்ளும்படி பூமித்தாயும் மகிழ்ந்திருப்பாள்


ஒடுக்க நினைப்போரை ஓங்கி அறையும்

மிடுக்கான பேச்சு மிளிர்வதெல்லாம் தமிழ்மூச்சு

தயங்கும் மனிதருக்குள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்

தன்னிகரில்லா  பாவேந்தே தடையின்றி பேசும்

கன்னித்தமிழ் கண்டு கழனியே செழிக்கும்


சோர்வடையா உன்கண்கள் சொந்தமெல்லாம் கூட்டிவரும்

சோம்பேறி மனிதரையும் சொடக்குபோட்டு எழவைக்கும்


நரைமுடிதான் நற்றமிழின் நாடித் துடிப்பு

கறைபடியா கவிச்சுடரே கலை நிலத்தில்

உம்பிறப்பு கலைஞரின் உடன்பிறப்பில் உன்னதமே.

       - சோலச்சி

சனி, 13 ஜூன், 2026

முட்டிக்குறிச்சி நாவல் - சோலச்சி

 முட்டிக்குறிச்சி:



உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு பேரன்பின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சோலச்சியின் முதல் நாவலான "முட்டிக்குறிச்சி" பரவலான வரவேற்பை பெற்றதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன்.

        இந்நாவலில் வரும் கதாநாயகியும் அவரது தோழிகளும் காளைக்கோழி மலையைச் சுற்றிப் பார்க்கச் செல்வார்கள். அப்பொழுது அங்கே மண்டி கிடக்கும் கத்தாழைப் பழங்களை பறித்து ஆசை தீர சுவைத்து உண்பார்கள். அந்த அத்தியாயத்தைப் படிக்கின்ற பொழுது உங்களுக்குள்ளும் அந்தப் பழத்தைச் சுவைக்க வேண்டும் என்கிற ஆவல் உங்களை அறியாமல் எழும்.  பழத்தைச் சுவைத்தவர்களுக்குத் தெரியும் அதன் இன்சுவை பற்றி..




எப்பொழுது எங்கு பார்த்தாலும் அந்தப் பழங்களை சுவைத்து விட்டுதான் செல்வேன். ஆரோக்கியம் மிகுந்தது; அதிக சுவை கொண்டது.

   இப்படி நாவல் முழுவதும் பழங்களும் கிழங்குகளும் சொன்னவுடன் எச்சில் ஊறும் சுவை மிகுந்த உணவுகளும் கண்களுக்கு குளிர்ச்சியான மரங்களும் காட்சிகளும் நிறைந்து கிடக்கின்றது.



இந்நூல் ஸீரோ டிகிரி விருது தேர்வு பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டு எழுத்து பிரசுரம் 2023ல் வெளியீடு செய்தது. உலகெங்கும் வாழும் தோழர்கள் அவ்வப்போது என்னைத் தொடர்பு கொண்டு இந்நாவல் குறித்து சிலாகித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

        தோழர்கள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு நாவல் கைவசம் இருந்தால் அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றார்கள். உங்களின் பேரன்பினை எண்ணி மகிழ்கின்றேன். பதிப்பகத்தாரிடம் நீங்களே தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம் என்பதையும் இதன்மூலம் தெரிவித்து மகிழ்கின்றேன்.

எழுத்து பிரசுரம் பதிப்பகத்தார் அலைபேசி எண்:

+91 89250 61999

https://tinyurl.com/Mutttikurichi

மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும். இதன் மூலமாகவும் நாவலைப் பெற்றுக்கொள்ளலாம்.

     இந்த நாவலை வாசித்தால் நிச்சயம் இதில் வரும் கதை மாந்தர்களும் காட்சி அமைப்புகளும் உங்கள் மனசைவிட்டு அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட மாட்டார்கள்.  இந்நாவலை ''ஆன் லைன்'' மூலம் ஆர்டர் செய்து வாங்கிட மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களைப் பூர்த்தி செய்து உரிய விலை கொடுத்து நூலினை வாங்கி வாசிக்க வேண்டுகின்றேன்.

அல்லது

ஸீரோ டிகிரி பப்ளிகேஷனின் எழுத்து பிரசுரம் அலைபேசி எண்

+91 89250 61999 தொடர்புகொண்டு நூலினை வாங்கி வாசிக்கவும். சோலச்சியின் எழுத்துகளில் மண்வாசனையும் காட்சிப்பதிவுகளும் புதுக்கோட்டையின் வட்டார வழக்குச் சொற்களும் குறையாது நிரம்பிக்கிடக்கும். இத்தகவலை தங்களின் தோழமைகளுக்கும் பகிர்ந்து உதவவும்.

மகிழ்ச்சியும் பேரன்பும்

சோலச்சி

9788210863

சனி, 16 மே, 2026

ஹைக்கூவின் ஞான ராகங்கள் - தங்கம் மூர்த்தி

 

      

புதுக்கோட்டையின் புகழ் மகுடமாய் திகழும் எங்கள் தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி  அவர்களின் மற்றொரு பரிணாமம் " ஹைக்கூவின் ஞான ராகங்கள்"



ஹைக்கூ நூல்கள் மற்றும் இதழ்களுக்கு எழுதிய மதிப்புரையின் தொகுப்பே இந்நூல். ஹைக்கூ எழுத நினைப்பவர்கள் அல்லது நூல்களுக்கு மதிப்புரை எழுத வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நல்லதொரு இலக்கிய நூல்.

  1. தமிழ் ஹைக்கூ அப்துல் ரகுமான் முதல் மித்ரா வரை - மு.முருகேஷ்

  2. பச்சையம் என்பது பச்சை ரத்தம் - பிருந்தா சாரதி

  3. மழை வாசம் - இன்பா

  4. தூண்டில் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகள்

  5. பனைமரக்காடு - ஈழபாரதி ( பிரான்ஸ் )

  6. வே - டெய்சி ராணி

  7. மழை நின்ற வீதி - மகேந்திரன் நவமணி

  8. ஹைக்கூ ஓர் கூர்நோக்கு - நந்தவனம் சந்திரசேகரன்

  9. முற்றுப் பெறாத கவிதை - பிரேமா கிறிஸ்டி

இத்தகைய நூல்களையும் அதன் படைப்பாளர்களையும் இந்நூலில் பதிவு செய்து மதிப்புரையாக வழங்கி ஹைக்கூ நூல்களுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கின்றார் போற்றுதலுக்குரிய தமிழ்செம்மல் தங்கம் மூர்த்தி அவர்கள்.

இந்நூலில் தமிழ்ச்செம்மல் அவர்களின் நேர்த்தியான நேர்காணலும் இடம்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பு.
இந்நூலினை அகநி வெளியீடு செய்திருக்கிறது.

64 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 100/-

பதிப்பகத்தார் அலைபேசி எண்: 9444360421

       இந்நூலை எனக்கு வழங்குகின்ற பொழுது சில இனிய சொற்களை பதிவு செய்து கையொப்பமிட்டு வழங்கி உள்ளார்கள். இப்படி ஒரு பதிவினை பதிவு செய்து எனக்கு  வழங்கி இருப்பது மிக உயரிய விருதுகளுக்கும் மேலான விருதாக நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்கின்றேன். தங்களின் பேரன்பால் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன் ஐயா. தங்களைப் போன்றவர்களால் புதுக்கோட்டையின் மாண்பு மேலும் உயரட்டும்.

பேரன்பின் வழியில்
சோலச்சி





தமிழ்ச் செம்மல் அவர்களின் இனிய வாழ்த்துடன்




திங்கள், 11 மே, 2026

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - எழுத்தாளர் சி.அன்னக்கொடி

 02.05.2026 புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த மூன்றாம் ஆண்டு அறமனச் செம்மல் சீனு சின்னப்பா அவர்களின் இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்திருந்தார் பேரன்புக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்கள். அவரது “கூத்தின் சுவாசம்” என்கின்ற நாவல் விருது பெற்றது. அந்த விருதை பெறுவதற்காக திருவில்லிபுத்தூரில் இருந்து வருகை புரிந்த அண்ணன் அவர்களிடம் எனது “ஆப்பையால ஒரு அடி” கவிதை நூலை வழங்கியிருந்தேன். அந்த நூலினை வாசித்து மதிப்புரையும் வழங்கி இருக்கின்றார்கள். அண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

     -சோலச்சி





இதோ அந்த மதிப்புரை........

அப்பாையால ஒரு அடி.

இந்த கவிதைப் புத்தகத்தின் பேரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா.

இந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் இந்த அப்பாதைதான் அலங்கரிக்கிறது. இதை இந்தத் தலைமுறை பார்த்திருக்க வாய்ப்பில்லை. இனி கொஞ்ச காலந்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய சட்டி பானை தட்டு கரண்டி இது எதுவும் இருக்காது.

காலை மாலை இரவு இப்படி மூன்று நேரமும் உணவகத்திலிருந்து பார்சல் வரும், அதை அவரவர் பிரிச்சுச் சாப்பிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். இரவும் அத சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கலாம். அந்த கலாச்சாரம் மெல்ல மெல்ல ஊடுருவி ஆக்கிரமிக்க துவங்கிவிட்டது. இதிலே வேடிக்கை என்ன வென்றால் இப்படிச் சமையலே செய்யாமல் வெட்டிப் பொறனியாகப் பேசி இப்படி மூணு தேரமும் வாங்கிச் சாப்பிடுகிற குடும்பத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குடும்பங்கள் இருக்கும் அவர்களை மற்றவர்கள் இது கடைக்காட்டு பிறக்கித் தின்னுட்டு திரியுதுக.. இவங்ககிட்ட எவ்வளவு சொத்து இருந்தாலும் தங்குமா அப்படி என்பார்கள். இன்றைக்கு எல்லாக் குடும்பத்திலும் இந்தக் கலாச்சாரம் பரவ ஆரம்பித்துவிட்டது. இது சமூகத்தின் அவலம். நோய் நொடிகளைத் தானே வரவழைத்துக் கொள்வது.. பிறகு அய்யோ அம்மா எனக் கத்துவது. இந்த சமூகத்தை அப்பாயாலே அடிக்க வேணும் போல இருக்கிறது.

தேடுகிறேன்

அந்த அப்பா சொல்கிறது

என்னைத் தூக்கி எறிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

நான் என்னையே மறந்துவிட்டேன்

என்னைப்போய்த் தேடுகிறாயே என்கிறது.

அகப்பை என்ற சொல்தான் அப்பா என்று வட்டார வழக்கில் மருவியது. அது ஒரு தேங்காய் மூடி கொண்டு செய்யப்படும் கரண்டி.

இப்படி ஒரு கவிதைத் தலைப்பைப் பார்த்தவுடனே ஒரு ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. இதில் என்னமோ இருக்கிறது புத்தகத்தைத் திறக்கத் தோன்றுகிறது.

உள்ளே போனால் மடை திறந்த வெள்ளம் போல சாதியால் மதத்தால் அரசியலால் இந்த நாடு இத்தனை நூற்றாண்டுகளாகியும் எப்படி சிதைந்து கிடக்கிறது என்பதற்கு காரணமானவர்களையும் வறுத்தெடுக்கிறார் இந்த நூலாசிரியர். இது மட்டுமல்ல குடும்ப உறவு காதலையும் மையப்படுத்தி எழுதியுள்ளார்.

சமூக அறம் அறச் சீற்றம் நிறைந்து நிற்கிறது இந்த நூலில். அதுதான் ஒரு எழுத்தாளனின் அறம்.

நான் புதுக்கோட்டை செல்லும்போது திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை வரை உள்ள ஊர்ப் பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்கள் அத்தனையும் அழிக்கப்பட்டிருநதன. பார்த்து மகிழ்ச்சி என் கண்களில் பூத்தது.

அதற்கு யாராவது ஒரு காரணமாக இருக்க வேண்டும். அதற்கு இந்தக் கவிதைகூட காரணமாக இருக்கலாம்

ஹாட் டாட்டில்

அன்னைத் தமிழுக்கு இழுக்கு எனில்

அடங்கியா இருப்பாய்

மண்ணை ஆள்பவன் என்றாலும்

இடியாய் முழங்கு- மண்ணை

ஆண்டவன் என்றாலும்

எரிதழலாய்க் கிளம்பு.

இயற்கை எப்படி சீரழிகிறது

வானத்தை எப்படி கெடுத்து வைத்திருக்கிறோம் என்பதற்கு இதோ ஒரு கவிதை ஒரு விதைபோல விழுந்திருக்கிறது

உழுத்துப்போன

விறகை எரித்த சாம்பைலையொத்த

வானவீதியில்

நெற்றியை மட்டும்

நீட்டி நீட்டி

போக்குக் காட்டி

பாதை அமைக்கிறது நிலா.

இந்தக் கவிதை ரசிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கிறது.

இது ஒரு முரண் கவிதை.

என் உசுரே வழி நடத்துவதே என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை கவிதையாக ஒரு நாட்டுப்புற பாடலாக நம் கண் முன் மிளிர்கிறது.

அதில் சில வரிகள்

பழைய வயலில் சம்பா நெல்லு

அறுக்கப் போனோமே.

குத்திய சம்பா நெல்லை பிரிச்சு

அரிச்சுத் தின்னோமே

வாய்க்கால் வரப்பெல்லம்

நம் கதையைச் சொல்லுமடி

வாய் தெறந்து சொல்லு

நான் துணையாய்

அவரெனெடி.

இதோ மதத்திற்கு ஓர் கவிதை

மதம் -நான் வாழ வழியல்லவா

சொல்ல வேண்டும்

எனக்குள் வலியை அல்லவா

வழங்கியிருக்கிறது.

இதற்குள் எத்தனை பொருள் அடங்கிக் கிடக்கிறது. மதத்தால் சாதி சாதியால் சண்டை மூடநம்பிக்கை.

சாதியால் ஊர்கள் அழிகின்றன

மதத்தால் நாடுகள் அழிகின்ற

இதுதானே உண்மை.

இன்னொன்று இன்றைய நடப்பதை வைத்து ஒரு கவிதை அதுதான் மேற்கு வங்கத்திலும் நடக்கிறது. தமிழ்நாட்டிற்கும் வந்து விடுமோ என அஞ்சுகிறேன்.

கற்பு என்பது பொதுவென்று

கற்பிக்க மறந்து போனதாலே

தீயுக்குள் தள்ளப்பட்டால் சீதையுமே

ஆண்கள்

திருப்பி அடித்துத் தீயில் தள்ளியிருந்தால்

அன்றே அவனும செத்திருப்பான்.

ஆண்டுகள் கடந்தும்

எப்படி முளைத்திருப்பான்.

எது அறம் என மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அதற்கு ஒரு சாட்டையடி.

மாட்டுக்கறி ஏற்றுமதியில்

முதலிடம் வகிக்கிறோம்

நாம் தின்னக்கூடாது என

கத்தியைத் தீட்டுகிறார்.

இது முரணும் சமூக நீதிக்குமான கவிதை.

ஒரே தேர்தல் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற முழக்கத்திற்கெதிராய் ஒரு பெரு முழக்கக் கவிதை.

ஒரே நாடுன்னு ஏத்துக்கிட்டு

பல வருசம் ஆச்சு பிள்ளை

ஒரே மொழின்னு திணிக்குறாங்க

நம்ம ரத்தம் கொதிக்குது உள்ளே

கடைசியில் ஒரு உசுரும்

இல்லாமல் ஆக்கப் போறாங்க

ஒரேயடியாக நம்மைத்தானே

அழிக்கப் பாக்குறாங்க

அதற்கடுத்து கவிஞரின் வரிகளைப் பாருங்கள்

இங்கு எரிமலைகள்

இல்லையெனச்

சொல்லுறாங்களே

நீயும் நானும்

கொதித்தெழுந்தால்

அடங்குவாங்களே.

ஒரு இனம் அழிய வேண்டுமானால் அவன் மொழியை அழிக்க வேண்டும்.

அவனுக்கென இருந்த மொழியை அழித்துவிட்டால்

அவனுக்கு உசிரேது

அகவே எரிமலையாய்

நோஹிலு.

மாட்டுக்கறி ஏற்றுமதியில்

வயது.

மாட்டுக்கறி தின்றால்

கத்திபாயும்.

சர்வதேச

மாட்டு மோத்திரம் குடி

தின்னாதே மாட்டுக்கறியை.

இதுவும் அந்தக் கும்பல்தான்

இப்படி முரண்பட்ட ஒன்றைச் சொல்கிறது.

இந்த புத்தகத்திற்கு தலைப்பிட்டுள்ள அப்பாையால அடியும் நவம்பர் 25 கவிதையும் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்கு எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வருகிறார்.

இதுபோல எத்தனையோ கவிதைகள்

இவை அணைத்தும் பாவேந்தர் பாரதிதாசன் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோரின் கவிதைகளின் பின்னோட்டமாகவும்

அண்ணல் அம்பேத்கார் தந்தை பெரியார் ஆகியோர் கொள்கைகளின் கூட்டுக் கனியாகவும் அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.

இத்தனை சொல்கிறீர்களே இந்த நூலாசிரியர் யார் எனச் சொல்லவில்லையே..!

இப்படி எழுத யாருக்கு துணிச்சல் வரும்.

என் அன்பு இளவல் புதுக்கோட்டை கவிமதி சோலச்சி.

விருது பெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்தான் வழங்கப்பட்டது.

வாங்கிய பொழுதே வாசித்து முடித்தேன்.

அவருடைய கவிதை சிறுகதைகள் நாவல் அனைத்தையும் படித்திருக்கிறேன். அதை வைத்து சொல்கிறேன். இலக்கிய தாகம் மட்டுமல்ல சமூக தாகமும் கொண்ட இளவல் சோலச்சி

தலைசிறந்த இலக்கிய ஆளுமையாக வருவார் என வாழ்த்துகள்.


- எழுத்தாளர்.சி. அன்னக்கொடி


கவிதை நூலை வாங்கி வாசிக்க:

செங்காந்தள் சோழன் பதிப்பகம்

+91 98657 80742

விலை ரூ 150/-

எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்களுடன் சோலச்சி