ஞாயிறு, 14 ஜூன், 2026

கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கு அகவை தின வாழ்த்து மடல் - சோலச்சி

     போற்றுதலுக்குரிய எங்கள் ஐயா கவிச்சுடர் அவர்களின் இனிய அகவை தினத்தில் ஐயா அவர்களை ( 14.06.2026 ) அவர்களது இல்லத்தில் சந்தித்து மகிழ்ந்தேன். 

   ஐயா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த அகவை தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.





   அகவை தினத்தில் நான் வழங்கிய வாழ்த்துப்பா மடல்.


                   வாழ்த்து மடல் 


செந்தமிழ்ச் சுடரே செழுந்தேனின் சுவையே

நந்தன தமிழின் நனிமிகு கவிதையே

சிந்தனைக் களஞ்சியமே சீர்மிகு ஓவியமே

காந்திநகரின் கனிச்சுளையே கலைமிகு காவியமே


கலைஞர் வார்த்தெடுத்த கவின்மிகு சொல்லேரே

பெரியார் பேரறிஞர் பெருமைமிகு பெருந்தலைவர்

பாட்டுச் சக்கரவர்த்தி பாவேந்தரைக் கண்டதில்லை

கூட்டுக் கலவையாய் தமிழ் உம்மைக்காட்டி மகிழ்கிறாள்


பாட்டுத் திறத்தாலே பாரை ஆளுகின்றாய்

எட்டுத்திக்கும் தமிழோசை கூட்டி மகிழ்கின்றாய்


சந்தப்பாவேந்தர் வெண்ணரசின் சங்கிலித் தொடரே

கருப்புத் தங்கம் மண்டேலா கண்டிருந்தால்

பொறுப்புடனே கட்டித் தழுவி இருப்பார்

பொறாமை கொள்ளும்படி பூமித்தாயும் மகிழ்ந்திருப்பாள்


ஒடுக்க நினைப்போரை ஓங்கி அறையும்

மிடுக்கான பேச்சு மிளிர்வதெல்லாம் தமிழ்மூச்சு

தயங்கும் மனிதருக்குள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்

தன்னிகரில்லா  பாவேந்தே தடையின்றி பேசும்

கன்னித்தமிழ் கண்டு கழனியே செழிக்கும்


சோர்வடையா உன்கண்கள் சொந்தமெல்லாம் கூட்டிவரும்

சோம்பேறி மனிதரையும் சொடக்குபோட்டு எழவைக்கும்


நரைமுடிதான் நற்றமிழின் நாடித் துடிப்பு

கறைபடியா கவிச்சுடரே கலை நிலத்தில்

உம்பிறப்பு கலைஞரின் உடன்பிறப்பில் உன்னதமே.

       - சோலச்சி

சனி, 13 ஜூன், 2026

முட்டிக்குறிச்சி நாவல் - சோலச்சி

 முட்டிக்குறிச்சி:



உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு பேரன்பின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சோலச்சியின் முதல் நாவலான "முட்டிக்குறிச்சி" பரவலான வரவேற்பை பெற்றதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன்.

        இந்நாவலில் வரும் கதாநாயகியும் அவரது தோழிகளும் காளைக்கோழி மலையைச் சுற்றிப் பார்க்கச் செல்வார்கள். அப்பொழுது அங்கே மண்டி கிடக்கும் கத்தாழைப் பழங்களை பறித்து ஆசை தீர சுவைத்து உண்பார்கள். அந்த அத்தியாயத்தைப் படிக்கின்ற பொழுது உங்களுக்குள்ளும் அந்தப் பழத்தைச் சுவைக்க வேண்டும் என்கிற ஆவல் உங்களை அறியாமல் எழும்.  பழத்தைச் சுவைத்தவர்களுக்குத் தெரியும் அதன் இன்சுவை பற்றி..




எப்பொழுது எங்கு பார்த்தாலும் அந்தப் பழங்களை சுவைத்து விட்டுதான் செல்வேன். ஆரோக்கியம் மிகுந்தது; அதிக சுவை கொண்டது.

   இப்படி நாவல் முழுவதும் பழங்களும் கிழங்குகளும் சொன்னவுடன் எச்சில் ஊறும் சுவை மிகுந்த உணவுகளும் கண்களுக்கு குளிர்ச்சியான மரங்களும் காட்சிகளும் நிறைந்து கிடக்கின்றது.



இந்நூல் ஸீரோ டிகிரி விருது தேர்வு பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டு எழுத்து பிரசுரம் 2023ல் வெளியீடு செய்தது. உலகெங்கும் வாழும் தோழர்கள் அவ்வப்போது என்னைத் தொடர்பு கொண்டு இந்நாவல் குறித்து சிலாகித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

        தோழர்கள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு நாவல் கைவசம் இருந்தால் அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றார்கள். உங்களின் பேரன்பினை எண்ணி மகிழ்கின்றேன். பதிப்பகத்தாரிடம் நீங்களே தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம் என்பதையும் இதன்மூலம் தெரிவித்து மகிழ்கின்றேன்.

எழுத்து பிரசுரம் பதிப்பகத்தார் அலைபேசி எண்:

+91 89250 61999

https://tinyurl.com/Mutttikurichi

மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும். இதன் மூலமாகவும் நாவலைப் பெற்றுக்கொள்ளலாம்.

     இந்த நாவலை வாசித்தால் நிச்சயம் இதில் வரும் கதை மாந்தர்களும் காட்சி அமைப்புகளும் உங்கள் மனசைவிட்டு அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட மாட்டார்கள்.  இந்நாவலை ''ஆன் லைன்'' மூலம் ஆர்டர் செய்து வாங்கிட மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களைப் பூர்த்தி செய்து உரிய விலை கொடுத்து நூலினை வாங்கி வாசிக்க வேண்டுகின்றேன்.

அல்லது

ஸீரோ டிகிரி பப்ளிகேஷனின் எழுத்து பிரசுரம் அலைபேசி எண்

+91 89250 61999 தொடர்புகொண்டு நூலினை வாங்கி வாசிக்கவும். சோலச்சியின் எழுத்துகளில் மண்வாசனையும் காட்சிப்பதிவுகளும் புதுக்கோட்டையின் வட்டார வழக்குச் சொற்களும் குறையாது நிரம்பிக்கிடக்கும். இத்தகவலை தங்களின் தோழமைகளுக்கும் பகிர்ந்து உதவவும்.

மகிழ்ச்சியும் பேரன்பும்

சோலச்சி

9788210863