மகளிர் எழுச்சி
மக்கள் மீட்சி
கருத்துப் பரப்பு இயக்கம்!
~~~~~~~~~~~
திருமாவளவன் பெண்களை இழிவுசெய்ததாக பாஜக'வினர் அவதூறு பரப்புவது ஏன்?
மனுஸ்மிருதியை தடை செய்யவேண்டுமென விசிக'வினர் கோருவது ஏன்?
----------------------------------------------
' திருமாவளவன் பெண்களைக் கொச்சைப் படுத்திவிட்டார் ' என சமூக வலைத்தளங்களில் திடீரென கடந்த அக்டோபர்-21 முதல் பாஜகவினர், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
தொல்.திருமாவளவன் அவர்கள் அப்படி என்னதான் பேசினார்? எங்கே பேசினார்? இவர்கள் இவ்வாறு பொய் சொல்லுவதற்கு என்ன காரணம்? உண்மையில் இதன் பின்னணி என்ன?
கடந்த செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் " ஐரோப்பிய ஒன்றிய பெரியார்-அம்பேத்கர் தோழர்கள் கூட்டமைப்பு " சார்பில், ’பெரியாரும் இந்திய அரசியலும்’ என்னும் பொருளில் இருநாள் இணையவெளி கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்வில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்று 40 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் மனுநூல் குறித்தும் பேசினார்.
" தந்தை பெரியாரைப் பிராமண எதிர்ப்பாளர் கடவுள் மறுப்பாளர் என்று மட்டுமே பலரும் கூறுகிறார்கள். அவர் பிராமணர்களை எதிர்த்ததற்கும், கடவுளை மறுத்ததற்கும் அவர் மனுஸ்மிருதியைத் தீவிரமாக எதிர்த்ததே காரணமாகும். ஏனென்றால், மனுஸ்மிருதிதான் இந்துக்களில் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் பிற்படுத்தப்பட்டோரை சூத்திரர்கள் எனக் கேவலப்படுத்துகிறது. பெண்களை மிகவும் மோசமாக இழிவுபடுத்துகிறது " என்று தனது பேச்சில் தொல்.திருமாவளவன் விளக்கினார்.
அதில் சிலநொடிகள் அளவிலான பேச்சை மட்டுமே நறுக்கி எடுத்து, " இதோ பாருங்கள் இந்துப் பெண்களைக் கொச்சைப் படுத்துகிறார்" என்று உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர்.
அவர்களின் உண்மை நோக்கம், விசிக இடம்பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து, இந்துவிரோத முத்திரைக் குத்தி, அரசியல் ஆதாயம் தேடுவதே ஆகும். இந்துக்கள் x இந்துஅல்லாதோர் அல்லது இந்துக்கள்x இந்துவிரோதிகள் என தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்துவதே அவர்களின் நோக்கம். அதற்கு இவ்வாறு அவதூறு பரப்பி தொல்.திருமாவளவன் அவர்களைப் பலிகடாவாக ஆக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.
மனுஸ்மிருதி எதிர்ப்பு என்பது புதிய செயற்பாடு அல்ல. முதன்முறையாக இப்போதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கிறது என்று சொல்லக்கூடிய ஒன்றும் அல்ல. இதற்கு நீண்டகால வரலாறு உண்டு.
1927 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழகத்தில் பெருந்தலைவர் எம்.சி. இராஜா அவர்கள் " ஆதி திராவிடர் மாநாட்டில்" மனுஸ்மிரிதியைக் கொளுத்தியுள்ளார். அதே ஆண்டில், டிசம்பர் 4 ஆம் நாள் குடியாத்தத்தில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது.
அதே ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், மஹத் என்னுமிடத்தில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி அம்மாநாட்டு வாயில் முன்பாக மனுஸ்மிருதியைத் தீயிட்டுக் கொளுத்தினார். பெண்களையும் சூத்திரர்களையும் இழிவுப்படுத்தி ஒடுக்கி வைத்திருப்பதற்கு மனுநூலே காரணம் என்பதால்தான் ஒரு நூறாண்டுக்கு முன்னரே மேற்கண்ட தலைவர்கள் இவ்வாறு தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் வழியில்தான் தொல்.திருமாவளவன் அவர்களும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோதக் கருத்துகளை விமர்சித்துப் பேசினார். மனுஸ்மிருதியில் கூறியிருப்பதாக அவர் பேசியதை, அவரே பேசியதாகப் பொய்யாகவும் அவதூறாகவும் பாஜகவினர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஒருசேர பாஜகவின் இந்த தில்லுமுல்லு வேலையைக் கண்டித்த பிறகும்கூட இந்த அவதூறை வைத்து அரசியல் லாபம் தேட பாஜகவினர் முயற்சிக்கின்றனர்.இதன்மூலம் தமிழ்நாட்டில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அவதூறு பரப்பும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக அவர்களின் பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் தொல்.திருமாவளவன் அவர்கள்மீது தமிழகக் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
மனுஸ்மிருதி கூறுவதென்ன?
---------------------------------------
சுமார் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது.
# சூத்திரர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் பிராமணர்கள் குடியிருக்கக் கூடாது. ( அத்தியாயம் 4:61)
# தன்னைவிட உயர்ந்த வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சூத்திரனைக் கொன்றுவிடவேண்டும். (அத்தியாயம் 8:374)
# சூத்திரன் நீதிபதியாக இருக்க முடியாது (அத்தியாயம் 8:20)
# சூத்திரர்கள் கல்வி பயிலக்கூடாது (அத்தியாயம் 3:156 & 4:99)
# இழிவான பெயர்களை மட்டுமே சூத்திரர்கள் வைத்துக்கொள்ளவேண்டும் ( அத்தியாயம் 2:31)
# பெண்களின் இயல்பே ஆண்களை மயக்குவதுதான் (அத்தியாயம் 2:213)
# ஒருவன் தனது தாயுடனோ, மகளுடனோ, சகோதரியுடனோ தனிமையில் அமர்ந்திருக்ககூடாது. கல்வி கற்றவரையும்கூட புலன்கள் மயக்கம்கொள்ளச் செய்துவிடும் (அத்தியாயம் 2:215)
# மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண்தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள். (அத்தியாயம் 9:14)
# ஆண்களின் மீதான இச்சையாலும், நிலைமாறும் புத்தியாலும், ஈவிரக்கமற்ற இயல்பினாலும் பெண்களை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அவர்கள் தன் கணவனுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள் ( அத்தியாயம் 9:15)
# மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரம்மன் சிருஷ்டித்தபோதே உண்டானதென்று அறிந்து ஆடவர்கள், அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்யவேண்டியது(அத்தியாயம் 9:16)
# படுக்கை, ஆசனம், அலங்காரம் காமம், கோபம்- பொய், துரோக சிந்தை இவற்றை மாதர் பொருட்டே மனுவானவனவர் கற்பித்தார்.(அத்தியாயம் 9:17)
# பெண்னுக்குப் படிப்பதற்கு உரிமை இல்லை (அத்தியாயம் 9:18)
# மாதர்கள்பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதிசொல்லிய பிராயச் சித்தத்தைக் கேளுங்கள் ( அத்தியாயம் 9:19)
# பெண், மகன், அடிமை – இம்மூவருக்கும் சொத்துரிமை கிடையாது (அத்தியாயம் 9:416)
இவை மனுஸ்மிருதியில் பிற்படுத்தப்பட்ட இந்து மக்களையும், பெண்களையும் பற்றிக் கூறப்பட்டவற்றில் சில பகுதிகளாகும்.
இப்போது கூறுங்கள் பெண்களை இழிவுபடுத்துவது மனுஸ்மிருதியா? அல்லது அதைத் தடை செய்யக் கோருகிற தொல்.திருமாவளவனா?
இப்போதும் மனுஸ்மிருதி!
-----------------------------------
இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் 27% திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என யுனிசெஃப் என்ற ஐநா சபையின் அமைப்பு 2019 ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்களின் திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பிஞ்சுப் பருவத்திலேயே திருமணம் செய்துகொடுத்துவிடவேண்டும் என்ற வழக்கம் மனுஸ்மிருதியினால் வந்ததுதான்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சட்டம் இருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமையை மறுக்கும் வழக்கம் இந்தியா முழுமைக்கும் இருப்பதற்குக் காரணம் மனுஸ்மிருதிதான்.
2019 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக 4 லட்சத்து ஐந்தாயிரம் வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2018 ஆம் ஆண்டைவிட 7.3% அது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம் பெண்களை சமமாக நடத்தக்கூடாது என்னும் மனுஸ்மிருதியின் செல்வாக்கு சமூகத்தில் நிலவுவதுதான்.
சாதிக்கொரு குடியிருப்பு; அனைத்துசாதியினரும் அர்ச்சகராக முடியாத நிலை; பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முடியாது, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தர முடியாது என்ற பாஜக அரசின் நிலைபாடு – இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனுஸ்மிருதியின் செல்வாக்குதான்.
அரசியலமைப்புச் சட்டமா? மனுவின் சட்டமா?
-----------------------------------------------
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) அறிமுகப்படுத்தப்பட்டபிறகுதான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் தண்டனைச் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் ஒரு குற்றத்தை எவர் செய்தாலும் ஒரே தண்டனைதான் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு புரட்சியாளர் அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பதை இந்நாட்டின் அடிப்படை நெறியாக ஆக்கியது. ஆனால் மனுஸ்மிருதியால் பயனடைந்த சனாதனிகள் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்கவில்லை. சமூகத் தளத்தில் அதன் மேலாதிக்கத்தைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தனர்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அனைவரும் சமம் என்கிறது. ஆனால், மனு ஸ்மிருதியோ அனைவரும் சமம் இல்லை என்கிறது; இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாலின ரீதியாக எந்த பாகுபாடும் காட்டக்கூடாது ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவேண்டும் என்கிறது; ஆனால் மனு ஸ்மிருதியோ பெண்ணுக்குக் கல்வி உரிமையோ சொத்துரிமையோ இல்லை என்று கூறுகிறது.
தற்போது மத்தியில் ஆளும் பாஜகவினர் இத்தகைய பெண்கள் விரோத மனுஸ்மிருதியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
திரு வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி வெங்கடாசலய்யா என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த திரு. கே.ஆர்.நாராயணனின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட அந்தத் திட்டத்தை இப்பொழுது எப்படியாவது நிறைவேற்றிவிடப் பார்க்கிறார்கள்.
மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டம் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமே ஆகும். மனு நூலைத் தடைசெய் என்ற முழக்கத்தின் உண்மையான பொருள் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்து என்பதேயாகும்.
வெறுப்பின் ஊற்றுக்கண்ணை அடைக்க மனுநூலைத் தடைசெய்க!
----------------------------------------------
மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரச்சாரத்தை நிறுத்தவே முடியாது. அதனால்தான், வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக்கண்ணாகவும், வன்முறையை ஆதரிப்பதாகவும், பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகவும் பெண்களை மிக மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இந்த சமூகநீதி சமத்துவக் கோரிக்கையை ஆதரித்து அனைத்து சனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்!
மகளிர் எழுச்சியே
மக்கள் மீட்சி!- ஆளும்
மனுநெறி வீழ்ச்சியே
மகத்தான புரட்சி!
-------- விசிக-----------
2 கருத்துகள்:
அருமை... உண்மை...
என்னிடம் உள்ள உங்களது கைப்பேசி எண் செயல்படவில்லை; ஆதலால் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்... 9944345233
கருத்துரையிடுக