வெள்ளி, 4 ஏப்ரல், 2025

சாதி மறுப்பு திருமண தம்பதிகள் மாநில மாநாடு

 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சென்னை பெரம்பூர் மான் போர்ட் பள்ளியில் பாசறை முரசு இதழின் ஆசிரியர் மு.பாலன் அவர்களின் ஏற்பாட்டில் சாதி மறுப்பு திருமண தம்பதிகளின் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டு மலர் வெளியீடு, கருத்தரங்கம், கவிதை அரங்கம், பாட்டரங்கம் என நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிஞர் செல்வகணபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இதோ....


கவிஞர் செல்வகணபதி தலைமை கவிதை வாசிக்கின்றார்.


சாதி மறுப்பு மணத்தின் வழித்தோன்றல் சாதியற்ற சமுதாயமே.....!




பகுத்தறிவுக் கடலில் நீந்தி

பெரியோர் வகுத்தளித்த வழிதனில்

பாங்குடனே திகழ்ந்து

உலகத்தார் உச்சி முகர்ந்து பாராட்ட

எட்டுத் திக்கும் தமிழ் கொட்டி

முழங்கி வருகுது பாரீர்

பாசறை முரசென்னும்

பெருங்களஞ்சியம் புரட்சிப் படை அமைத்து

பயணிக்கும் பேரழகு காணீர்....!


எங்கள் பெருங்கவி உள்ளிட்ட

பேராற்றல் கொண்டோர்

பெரும் படை திரட்டி அணிவகுத்து

அமர்ந்திருக்கும்

தொல் தமிழின் தொண்டர்கள் யாவருக்கும்

புதுக்கோட்டை சோலச்சியின்

பெருவாரியான வாழ்த்துகளும் வணக்கங்களும்....


சாதி மறுப்பு திருமண தம்பதியரின்

இரண்டாவது மாநில மாநாடு

கட்டு கலையாமல்

பெருகட்டும் இந்த தேன்கூடு..!


உரக்கச் சொல்வீர்; உணரச் செய்வீர்

உயர பறக்கும் பறவை போல

உள்ளம் கொள்வீர்..!

கொஞ்சி குலாவி கொட்டும் மழை போல்

வாழ்ந்து பாரீர்..!


பரந்து கிடக்கும் கடலில் பலவும்

கலந்து கிடக்கும் காட்சி கண்டும்

நீவீர் ஒப்பி உண்டு மகிழ்கிறீர்...!

மனிதன் ஒத்து வாழ தடையாய் நின்று

மடையர் ஆகிறீர்..!


திங்கிற சோத்தில் பார்ப்பதில்லை

பொங்குற அரிசியிடம் கேட்பதில்லை

உடுத்துற துணியில் தெரிவதில்லை

படுக்குற மெத்தையும் சொல்வதில்லை

ஆளாய் பறக்கும் ஆளைக் கவிழ்க்கும்

அந்தப் பணத்திடம் கேட்பதில்லை

அடடா.... விஞ்ஞான முறையில் குழந்தை பிறக்க

செலுத்தும் கரு யாதென பார்ப்பதில்லை..!


காரியங்கள் ஆக வேண்டி

கால் பிடிக்கும் போது பார்ப்பதில்லை

சுயசாதி ஆனாலும்

சொத்து இல்லையென்றால் சேர்ப்பதில்லை

வக்கனையாய் வாய் இளித்து

வாக்கு கேட்கும்போது தெரிவதில்லை...!


அடேய்......


இயற்கையிடம் பேதமில்லை

ஆனாலும்

அவற்றிலும் அசிங்கம் செய்தீர்..!

வீசும் காற்றில் நஞ்சைக் கலந்தீர்

பெய்யும் மழையிலும் பேரிழப்பு செய்தீர்..!

நிலத்தை நாளும் கூறு போட்டீர்

நீயா நானா என்றே வாழ்வு தொலைத்தீர்..!


பூமி புரண்டால் பொல்லாத நீயும்

புதைந்திடுவாய்

பொங்கும் கடலுக்கும் வழி தெரியும்

புரிந்து கொள்வாய்

எழு கதிரவன் கோபம் கொண்டால்

எரிந்து போவாய்

சாதி ஒழிக என்று சொல்லி

பிழைத்துக் கொள்வாய்...!


சாதியில் குளிர் காயும்

பித்தர்கள் படைத்த மடமையை கொளுத்துவோம்

சரித்திரம் விளையும்

புத்தரின் வழியினில் அறிவுடைமை புகுத்துவோம்...!


காகம் கழுதையோடு புணர்ச்சி கொள்ளாது

ஓணான் ஒட்டகத்தோடு உறவு கொள்ளாது

குரங்கு குயிலோடு கொஞ்சி மகிழாது

மாமரத்தில் தேங்காய் காய்த்திடாது

மல்லிகைச் செடியில் ரோஜா பூத்திடாது

கடித்துக்கொண்டே கிடந்தாலும்

நாய் நாயோடுதான் உறவு கொள்ளும்...!


தவளைக்கு கல்யாணம் நடத்தி வைப்பாங்க

கழுதைக்கும் கல்யாணம் நடத்தி வைப்பாங்க

மரத்துக்கு கூட கல்யாணம் நடத்தி வைப்பாங்க

புடுச்ச மனுசனுக்கு மணம் முடிக்க

குறுக்கே நிப்பாங்க...!


இல்லாத சாமிக்குத்தான் அலங்காரம்

அது எடுக்குமாம் எண்ணற்ற அவதாரம்

அது கண்ணில் பட்ட பொண்ணை எல்லாம் கட்டிக்குமாம்

நாம காதலிச்சா மட்டும் இங்கே பட்டுக்குமாம்...!


வந்தேறி கூட்டத்தால் வந்ததிந்த சாதி

அதுக வாழ்ந்துகிட்டு

கெடுக்குதிங்க நீதி..!

துரத்தி அடிக்க

சாதி மறுப்பு மணம் தானே சமுகநீதி..!


பட்டா நிலம் பட்டாக்கத்தி வச்சுக்கிட்டும்

கட்சிக்கொடி கள்ளப்பணம் கட்டிக்கிட்டும்

உதவாக்கரைகள ஊருக்கு ரெண்டு சேத்துக்கிட்டும்

ஆடுற ஆட்டம் கொஞ்சமில்ல

அதுகள காலில் போட்டு நசுக்கிட

இட ஒதுக்கீடு தானே எல்லை..!


சாதி மறுப்பு திருமணம்தான்

சமத்துவத்தின் பிறப்பிடம்

இந்த வரலாற்று சாதனையை படைக்கும்

பொறுப்பு அரசிடம்..!


தட்டிக் கழிக்காமல் தடைகள் உடைப்போம்

கட்டிக் காக்கின்ற படைகள் அமைப்போம்..!


மனம் ஒத்து வாழ இங்கே வழி விடு

மதம் மற்றும் சாதியினை தீயிலிடு

மனிதம் காப்போரின் கைகளிலே மலர் கொடு

மறுக்காமல் கைகுலுக்கி தோள்கொடு...!


வா... கைகுலுக்குவோம்

வா..‌. கை நனைப்போம்...!


சோலச்சி

புதுக்கோட்டை

பேச: 9788210863


மாநாட்டு மலர் வெளியிடப்படுகிறது.