செவ்வாய், 22 நவம்பர், 2022

2022 நவம்பர் செம்மலர் சிறுகதைகள்

 

வம்பர் 2022 செம்மலர் மாத இதழ் வாசித்தேன். வழக்கம்  போல் மார்க்ஸிய சிந்தனையோடு ஒளி வீசிய இதழில் வெளிவந்த சிறுகதைகள் குறித்து பார்க்கலாம். வாங்க....


 
    
    1.முதலில் எழுத்தாளர் அன்னக்கொடி அவர்களின் ''வெள்ளாவி'' என்கிற சிறுகதை குறித்து ;

    முழுக்க முழுக்க எழுத்தாளரின் வட்டார வழக்குச் சொல்லில் அழகிய கதை சொல்லியாக வெள்ளாவி சிறுகதையை வடித்தமைக்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய இளம் தலைமுறையினர் பலர் வாசிங் மிசினோடு வாழ பழகிக்கொண்டுவிட்டதால் வெள்ளாவி என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இருக்க வாய்ப்பில்லை. நடிகர் தனுஷ் அவர்களின் ஆடுகளம் படத்தில் கவிஞர் சினேகன் அவர்கள் ''அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே'' என்று எழுதியிருப்பார். பாடலின் பொருள் புரிகிறதோ இல்லையோ பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய பாடல் அது.

  வெள்ளாவி போன்ற சொற்களை பயனபடுத்துவதெல்லாம் அரிதினும் அரிது. காரணம், ஒரு செயல் நடைபெறாமல் வழக்கத்திலிருந்து நின்றுவிட்டால் அது சார்ந்த சொற்களும் மறைந்துவிடுவதை காண முடிகிறது. தமிழ் சொற்கள் எது பிறமொழிச் சொற்கள் எது என நம்மால் அடையாளம் காணமுடியவில்லை.  நம்மோடு அவை இரண்டறக் கலந்துவிடுகின்றன.

    துணி வெளுக்கும் சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையனுக்கும் மேட்டுக்குடியைச் சேர்ந்த முத்தையா மற்றும் அழகு என்பவளுக்குமான வாழ்வியலை போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்லும் நடையழகை தனது எழுத்தில் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் அன்னக்கொடி.

    வெள்ளையனை காவலர்கள் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கிறார்கள். உண்மையைச் சொல்லச்சொல்லி துன்புறுத்துகிறார்கள். கடுகளவும் கசியாமல் வேதனையைத் தாங்கிக் கொள்கிறான். ''என்ன இருந்தாலும் வவுத்த ஆத்துன வீடு அதுனால காட்டிக்கொடுக்க மனசில்லை'' என நினைத்துக் கொள்ளும் வெள்ளையன், ''நம்மளை கையும் களவுமா பிடிக்கத்தேன் வாரான்னு பிடுங்கி எடுத்து ஓட ஆரம்பிச்சேன். அப்ப அந்த கதவுக் கொண்டி என்னோட வேட்டியப் பிடிச்சு இழுத்துருச்சு. ஆள் தப்பிச்சாப் போதுமுன்னு ஓடி வந்துட்டேன்'' முத்தையா சொல்வதும், அழகு மட்டும் வாசலில் நின்னு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முத்தையாவையே பார்த்துக்கொண்டு இருந்த காட்சியும் நம் கண் முன்னால் வெள்ளித்திரையாக ஓடிக் கொண்டிருக்கிறது. புது மாதிரியான கதைக்களத்தை உருவாக்கி வாசகர்களின் சிந்தனை ஓட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட எழுத்தாளர் அன்னக்கொடி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   2. எழுத்தாளர் அ.பாக்யசெல்வி அவர்களின் ''காலம்''

   ஆன்மீகத்தில் மூழ்கிய ஒரு குடும்பப் பெண்ணின் கதையை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் அ.பாக்யசெல்வி. சாஸ்திரமும் சம்பிராதயமும் நிறைந்த குடும்பத்தலைவியாக வலம் வருகிறாள் தனம். தன் மகனை அளவுக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து வளர்க்கிறார் தந்தை.
     
   "குழந்தைக்கு எது பிடிக்குதுன்னு கேட்டு செய்றத விட்டுட்டு உப்புமா செய்ற உன் தொல்ல தாங்க முடியல.... வெள்ளிக்கிழமையானாப் போதும் சாங்கியம் சம்பிரதாயம் என்று,  இப்படியே இருக்காம வேலையைப் பாரு'' என்கிறார் தனத்தின் கணவர். தாய் ஆன்மீகம் மற்றும் தந்தை நாத்திகர் இப்படி பயணிக்கிறது கதை.

     பூசணிக்காயை தெருவில் உடைத்து வீணாக கிடப்பதைப் பார்த்து தந்தை பெரியார் வேதனைப்படுவார். சாம்பார் கூட்டு வச்சு சாப்பிட்டாக்கூட உடம்புக்கு நல்லது.  இப்படி ஒன்னுக்கும் ஆகாம தெருவில் உடைக்கிறீங்களே என்பார். தெருவில் உடைத்த பூசணிக்காய்தான் தனத்தின் கணவர் உயிரையே எடுக்கிறது. காலத்தின் குரலாய் அம்மனையே முறைத்துப்பார்த்துவிட்டு பகுத்தறிவு சிந்தனையோடு தனம் வேலைக்கு செல்வதாக காட்சிப்படுத்தியிருக்கும் எழுத்தாளர் அ.பாக்யசெல்வி அவர்கள் நல்ல கதைசொல்லிதான்.

3. சிட்னி,அவுஸ்திரேலியா எழுத்தாளர் தேவகி கருணாகரன்,

    பிரியாவும் ஜேம்சும் என்கிற அற்புதமான கதைக்களம். நடைமுறை அறிவியலின் வளர்ச்சியும் வளர்ந்து வரும் மானிட வாழ்வியல் மாற்றங்களையும் குறிக்கும் கதை.

   தொடக்கத்தில் கதையை வாசிக்கின்றபொழுது பிரியாவும் ஜேம்சும் இயற்கையிலேயே கணவன் மனைவி என்கிற சிந்தனையைத்தான் தோற்றுவிக்கிறது. கதைக்களம் ஆர்வமாக செல்கிறபோது இறுதியில்தான் பிரியா என்பது பிரியதர்சன் என்றும் இருவருமே ஆண்கள்தான் என்றும் புரிகிறது. இவர்களுக்கு மகளாக கீர்த்தி பிறப்பது போன்ற கதைக்களத்தை உருவாக்க நெஞ்சில் ஈரத்தை வளர்த்திருக்கிறார் எழுத்தாளர் தேவகி கருணாகரன்.  கதையின் நடை ஈழத்து வாசனையை கொண்டுள்ளது. 

'' டடி ! என்னுடைய ஃப்ரெண்ட் நன்சியை அவளுடைய அம்மாதான் கூட்டிக்கொண்டு போக வருவா. என்னை எப்போதும் பள்ளியில் கொண்டு போய் விடுவதும் பிறகு கூட்டிக்கொண்டு வருவதும் பிரியா தானே.'' என்று மகள் கீர்த்தி சொல்வதும்,

  ''ஜேம்ஸ்!  கீர்த்தி என்னை இடை இடையே ஒரு கேள்விக்குறியோடு பார்க்கிற மாதிரி இருக்கிறது. இந்த ஆரம்பப்பள்ளிக்கு போகத் தொடங்கியபின் தான் எல்லாம்'' என அம்மாவான பிரியா என்கிற பிரியதர்சனும் சொல்வதும் நமக்குள் ஏதோ ஒருவித மன உணர்வுகளை தூண்டுகிறது.

4. தோழர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் தாலியில் பூச்சூடியவர்கள் என்கிற கதை,

ஆதிக்க சமூகத்தின் சில அத்துமீறல்களையும் பெண்கள் மீதான வன்மங்களையும் அழகாக எழுதியிருப்பார் எழுத்தாளர். உயர்சாதிப் பெண்கள் கூந்தலில் பூச்சூடுவதும் ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண்கள் தாலியில் பூச்சூடுவதும் நடைமுறையில் இருந்த காலம். தாலியில் பூச்சூடியிருப்பதை வைத்தே அவர்கள் என்ன சாதி என்பதை கண்டுபிடித்துவிடலாம். கைகளில் கருப்பு கயிறு கட்டுவதே குறிப்பிட்ட சாதியை சாதியின் அடையாளம்தான். இதுபோன்ற குறியீடுகள் மனுசட்டத்தால் உருவானது. மனுதான் வர்ணங்களை உருவாக்கியது. இன்று அனைத்து சாதியிலும் பலவண்ணங்களில் கயிறு கட்டிக்கொள்கிறார்கள் என்பது வேறு.

    ''தைலி வெகு நேரமாகக் காத்திருக்கிறாள். ரெட்டி வீட்டுப் பெண்கள் கடைக்குச் சாமான் வாங்க வந்த போதுதான் அவள் வந்தாள். அவர்களுக்கு முன்னால் நின்று வாங்கக்கூடாது. ஓரமாய் நின்றே வாங்க வேண்டும்.  வாங்கிப் போய்விட்ட பிறகும் யாராவது வந்து கொண்டிருக்கிறார்கள் ''

''

   சமூகத்தில் சாதிய வாடை வீசுவதையும் ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் நசுக்கப்படுவதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போய்விடுகிறார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். நம்மால்தான் அந்த இடத்தைவிட்டு நகரக்கூட முடியவில்லை. 

    மனிதனின் வாழ்வியலை எடுத்துச்சொல்லும் நான்கு கதைகளிலும் நிகழ்காலம் ,எதிர்காலம்,  கடந்த காலம் என மூன்று காலங்களையும் உணர முடிகிறது.  அறிவியலின் வளர்ச்சி எதையும் நோக்கிச் செல்கிறது என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

    வாய்ப்பு உள்ளவர்கள் ''செம்மலர்'' வாங்கி படியுங்கள்

செம்மலர் மாத இதழ்
6/16, புறவழிச்சாலை,
மதுரை - 625018
பேச: 0452 2669769
மின்னஞ்சல்: semmalar.tn@gmail.com

       - சோலச்சி அகரப்பட்டி
          பேச : 9788210863


வியாழன், 10 நவம்பர், 2022

விமர்சனம் எதிர் பார்த்து - சோலச்சி

 பேரன்புமிக்க தோழமைகளுக்கு வணக்கம்.


      எழுதி எழுதி குவலயம் முழுவதும் குவித்து விட வேண்டும் என்று ஒருபோதும் எண்ணவில்லை. எழுதியது எந்தளவுக்கு தமிழ் உலகில் சென்றடைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில்தான் இப்பதிவு.


1. முதல் பரிசு 



2. கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும் 



3. அட்டணக்கால் 



4. தொவரக்காடு 



       - என நான்கு சிறுகதை நூல்கள் எழுதியுள்ளேன். எனது கதைகளை இதழ்களிலோ, இணையத்திலோ, நூல்களிலோ வாசித்திருந்தால் உங்களால் ஈர்க்கப்பட்ட அல்லது உங்களால் நிராகரிக்கப்பட்ட படைப்புகள் குறித்து விமர்சனம் செய்யவும். தங்களது விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன். 


ஆம.....நீங்க யாரு......னு கேட்காமல் படைப்புகள் குறித்து மட்டும் பதிவிடவும்.


- பேரன்பின் வழியில்

  சோலச்சி அகரப்பட்டி 


வியாழன், 20 அக்டோபர், 2022

வெள்ளந்தி மனிதர்கள் - மண்டகொளத்தூர் கவிஞர் நா.காமராசன்


   கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசனின் "வெள்ளந்தி மனிதர்கள் '' - சோலச்சி

     



ஒவ்வொரு முறையும் நாம் பிறக்கப் போவதில்லை. அறிவியலின் அதீத வளர்ச்சியில் உயிரின் பிறப்பைக் கூட உறுதி செய்துவிட முடிகிறது. ஆனால் அந்த உயிர் எப்போது பிரியும் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது என்பதை உணர்ந்தும் , இந்த நிலத்தை நாம் படுத்துகின்றபாடு இருக்கின்றதே அதை எழுத்திலும் எழுதிவிட முடியாது. பேராசைகளால் குவிந்து கிடக்கிறது மனித வாழ்க்கை.

    வாழ்க்கை இதுதான் என்பதை உணர்ந்து வெள்ளந்தியாக வாழ்பவர்களை பார்த்தால், பிழைக்கத் தெரியாதவன் ; ஏமாளி ; கிறுக்குப்பயல் என்று இன்னபிற பெயர்களால் அழைக்கின்றோம். எது எப்படியோ..... ஏதோ ஒரு நோக்கத்தில்தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். நோக்கம் சரியாக இருந்தால் பாதையும் சரியானதாகவே அமையும்.

அமாவாசை கருக்கல்
மூக்கிவீட்டு நாய்வேற கத்திகீனேகீது!
செவிடன் முள்ளேலி தோட்டத்து
வழியாத்தான் கொல்லைக்கு போகனும் ;
      - என்று வெள்ளந்தியாக பேசும் மனிதர்களின் பேச்சு வழக்கினை அப்படியே படம்பிடித்து தான் வாழ்ந்த,  வாழ்கின்ற வாழ்க்கையை கவிதை நூலாக புனைந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கி இருக்கிறார் மண்டகொளத்தூர் கவிஞர் நா.காமராசன் அவர்கள். 

    எதற்காக வாழ்கிறோம் என்று தெரியாமல் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர்களைப் போல ஓடிக்கொண்டே இருக்கின்றோம். உறவுகளைப் பற்றியெல்லாம் எண்ணுவதற்கு நேரமில்லை. கூடப் பிறந்தவர்கள் யார் என்பதே தெரியாமல் பலரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என பெரும்பாலும் வாழ்க்கையை சுருக்கி விட்டோம். அஞ்சு வயசுல அண்ணன் தம்பி, பத்து வயசுல பங்காளி என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. இதை பாதிக்கப்பட்ட ஒருவனால்தான் இப்படி சொல்லியிருக்க முடியும். அதற்காக அதேயே பிடித்துக்கொண்டு தொங்குவது எந்த விதத்தில் நியாயம். 

   இந்நூலில் 'அம்மா'வான அண்ணன் என்றொரு கவிதையை படைத்திருக்கிறார் கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள்.  அந்தக் கவிதையை யார் வாசித்தாலும் நமக்கொரு அண்ணன் இல்லையே என்கிற ஏக்கமும் அண்ணன் இருந்தால் அவர்மீது மேலும் வளர்கிற உன்னதமான அன்பினையும் உணர முடியும்.
 
சார் நா வேலைக்கு
போகலனாலும் பரவாயில்லை ;
இவனுக்கு நாலெழுத்து சொல்லிக்குடுங்க
இவனும்
என்ன மாதிரி
மரம் வெட்ற
வேலைக்கு வந்துடக்கூடாது ;
இந்த வெயிலு முள்ளு
சொன எல்லாம்
எங்களோட போகட்டும் சார்..!

  - என சொல்லுவதாக கவிதை நிறைவு கொள்கிறது. இந்தக் கவிதையை வாசித்ததும் என் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்று நெஞ்சில் ஊஞ்சலாடுகிறது. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்து முடித்ததும் அரசு தொழிற்கல்வியில் சேர்ந்து படித்தேன். அப்போது என் அண்ணன் சென்னையில் தனியார்‌ தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். என் அண்ணன் கவிஞர் புதுகை தீ.இர அவர்கள் கண்ணீர் மல்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் "நான்தான் ஐடிஐ படிச்சுட்டு கம்பெனியில் இரும்பு ராடுனு கஷ்டப்படுறேனு பாத்தா தம்பியுமா கஷ்டப்படனும். அவன் படிச்சுட்டு நிழலுல வேலை பாக்கனும். என்னோட கஷ்டம் அவனுக்கு வரக்கூடாது '' என்று எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டியதும் என் அம்மாவும் அப்பாவும் ஓவென அழுதார்கள். நீ நெழலுக்குள்ள தாய்யா வேல கெடைக்கும்னு எங்க அம்மா அப்பா சொன்னதும், எனக்கு ஆசிரியர் பயிற்சியில் படிக்க இடம் கிடைத்ததும் என் அண்ணன் என்னை ஆரத்தழுவி மகிழ்ந்ததையும் எண்ணிப் பார்க்கிறேன். என் உணர்வுகளை மீட்டெடுத்த கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்களுக்கு நன்றி பாராட்டுகின்றேன். உறவின் உன்னதத்தை உங்களாலும் உணர முடியும்.

சுருக்கைப்பை சிதறியது
சில்லறையோடு
அவள் முடிந்து வைத்த முந்தானை
மட்டும் இன்னும் இறுக்கமாய் இடுப்போடு
ஒட்டியிருந்தது
சில ஆயிரம் நோட்டுகளோடு
புளி நறுக்கிய காசுகளாய்...

     - என்று செல்லாத்தா பாட்டி பற்றிய கவிதையில் தன்னை மறந்து கண்ணீரை வரவழைக்கிறார் கவிஞர். தன்னோடு வாழ்ந்தவர்களையும் வாழ்கின்றவர்களையும் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள்.  கவிஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மழை பற்றிய கவிதையொன்றில்

மழை நின்றும் தூவானம்
விடவில்லை
அதோ அந்த அரசமரத்தின்
ஒவ்வொரு இலைகளிலிருந்தும்
இன்னும் சிதறிக்கொண்டிருந்தது...

      - என்று குறிப்பிடுகின்றார். இக்கவிதையில் கவிஞரின் ரசனையை உணர முடியும். கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள்,  பார்த்த காட்சியை அப்படியே படம் பிடிக்காமல் தன் கற்பனை ஓட்டத்தையும் சுழல விட்டிருக்கின்றார்.

கூத்து முடிந்து ஊர் திரும்புகையில்
பொழுது விடிந்திருந்தது
சாணிக்கூடையோடு எதிரில்
வந்த அம்மாதான் கத்தினாங்க ;
"ஒரு நாலுநடை இந்தக் குப்பையை
அள்ளிக்கூட கொட்ட முடியாதாடா''
என்று சொல்லி முடிப்பதற்குள்
குப்பைக்கூடை இடமாறியிருந்தது
என் தலைச்சுமையில்..!

    - மண்வாசம் என்கிற கவிதையில் இவ்வாறு காட்சிப்படுத்துகிறார். அம்மாவின் சாமர்த்தியத்தையும் கவிஞரின் நடையழகையும் வெகுவாகப் பாராட்டி மகிழ்கின்றேன். ''இதைத்தின்னா என்ன கொறஞ்சா போயிருவ'' என்று சொல்லும் எத்தனையோ அம்மாவைப் பார்த்திருப்போம். அப்படி சொல்லும் போதே பிள்ளையின் வாயுக்குள் அந்த உணவு சென்றிருக்கும். அதுதான் அம்மா.

முடங்கிக்கிடந்த சமூகத்தில்
நொண்டியாய்க் கிடந்தவனுக்கு
ஊன்றுகோலானது
ஈரோட்டுக் கைத்தடி...

டெல்லிக்காரனின் உறவை முறி
விடுதலைக்கனலை காற்றில் எறி
பூணூல் தேசம் பொசுங்கட்டும்
       - என்று கொதித்தெழுகின்றார்.

தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டு
அத்தனைக்கும் மொத்தமாய்
வைத்தான் வேட்டு..
     - என்று அண்ணல் அம்பேத்கார் பற்றி மெய்சிலிர்க்கிறார்.

சோறு விளைந்த பூமியில்
கற்கள் முளைத்திருக்கிறது
அங்கிங்கெனாதபடி ;
இங்கே நெற்களுக்கு
விலையில்லை
மனை கற்களுக்கே விலை ..!

         - விளை நிலங்கெல்லாம் மனைகளுக்காக விலை போனது பற்றிக் கவலைப்படுகின்றார் கவிஞர். வாய்கிழிய பேசும் நாம் விவசாயம் செய்யத் தயங்குகின்றோம். ஆனால் தயக்கமில்லாமல் உணவில் கை வைக்கின்றோம்.

பூமியின் உயிர் ஆறுகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பூமியின் இரத்த ஓட்டமே ஆறுகள்தான். நாம் ஆறுகளை கொலை செய்து பூமியின் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறோம். இரத்த ஓட்டத்தை தடை செய்வதன் மூலம் நாம் நம்மையே அழித்துக் கொள்கிறோம்.

நதியோடிய இடமெல்லாம்
இன்று நரியோடுகிறது
சுரண்டல் நரியோடுகிறது...

       - என்று வேதனைப்படுகிறார். தனது கவிதைகளில் சமூக அக்கறையை காட்டியிருப்பதன் மூலம், தான் யார் என்பதையும் நிரூபித்திருக்கிறார் கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள்.

  கைத்தடி மாத இதழில்,  மாதந்தோறும் கடைசிப்பக்க கவிதையை வாசகர்கள் தேடும் அளவு தன்னுடைய கவிதை திறமையால்,  வாசகர்களை ஈர்த்த கவிஞர், வடக்கத்தி மழை என்ற தன்னுடைய முதல் கவிதை தொகுப்பின் வழியாக கூடுதல் வாசகர்களை கவர்ந்த கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் என்று பதிப்பகத்தார் திரு
மு.சி.அறிவழகன் புகழாரம் சூட்டி மகிழ்கின்றார். இந்த புகழ் மகுடத்திற்கு சொந்தக்காரரான கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்களை நாமும் வாழ்த்தி மகிழ்வோம்.

  எல்லோரும் விவசாயத்தை பற்றிய பேசுகிறோம் படிக்கிறோம். அது வெறும் அனுபவமற்ற அடுத்தவர்களின் சிந்தனை அவ்வளவே எனும் நிலையில் ; தோழர் , கூழுக்கு வழியற்ற ஒரு ஏழை செய்யும் விவசாயத்திற்கும் மேட்டுக்குடி விவசாயத்திற்குமான இடைவெளியை கனத்த வலிகளோடு அதன் தன்மை குறையாமல் மிக அழகாக சொல்லியுள்ளார். தன்னுடைய நண்பர்கள், ஆசிரியர்கள், அக்காமார்கள், பாட்டிகள், பெற்றோர்கள் என ஒரு பெருங்கூட்டங்களுடனேயே இந்நூலென்கிலும் நடத்துகிறார் கவிதை பிரசங்கத்தை என்று உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் அணிந்துரை வழங்கிய தோழர் ப.பார்த்திபன்.

    தோழர் ப.பார்த்திபன் அவர்களின் கூற்றினை நாமும் வழிமொழிந்து உரக்கச் சொல்கின்றோம் '' வெள்ளந்தி மனிதர்கள் '' வாகை சூடுவார்கள்.

    2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இக்கவிதை நூல்  112 பக்கம் கொண்டது. இந்தக் கவிதை நூலினை தருமபுரி மதி பப்ளிகேசன் வெளியீடு செய்திருக்கின்றது. ரூபாய் 100/- விலை கொண்ட இந்த ''வெள்ளந்தி மனிதர்கள்" அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய வாசிக்க வேண்டிய சிறப்பான நூல்.

  


    மண்டகொளத்தூர் கவிஞர் நா.காமராசன் அவர்கள் படம்பிடித்துக் காட்டும் வெள்ளந்தி மனிதர்கள் நிலமெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாம்தாம் அவர்களோடு வாழ்வதில்லை.   தங்கள் பகுதியில் புழங்கும் சொற்களை எந்தவொரு சாயமும் பூசாமல் அப்படியே பயன்படுத்தி அழகு தமிழுக்கு அணிகலனாக ''வெள்ளந்தி மனிதர்கள் '' நூலினை படைத்திருக்கும் கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள் இன்னும் ஏராளமான நூல்களை தமிழ், மென்மேலும் மன நிறைவு கொள்ளும் வகையில் படைக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன். 

    இந்த இனிய நூலினை சென்னையிலிருந்து எனக்கு அனுப்பி வைத்த நாஞ்சில் நாட்டான் என்று அன்போடு அழைக்கப்படும் தமிழர் எழுச்சிக்குரல் மாத இதழின் ஆசிரியர் தோழர் ஆ.பத்மநாபன்  அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

நூலாசிரியர் :
கவிஞர் நா.காமராசன்
29/77, விநாயகபுரம் முதல் தெரு,
அரும்பாக்கம்,
சென்னை - 600106
பேச: 72003 17638

வெளியீடு:
மதி பப்ளிகேசன்,
தருமபுரி - 635205
பேச: 73733 33078
மின்னஞ்சல் : madhipublication@gmail.com

     - பேரன்பின் வழியில்
          சோலச்சி அகரப்பட்டி
          பேச : 9788210863


வியாழன், 6 அக்டோபர், 2022

எங்கள் தமிழாசான் அவர்களுக்கு பிறந்த நாள் விழா

                   இனிய பிறந்தநாள் 

                  வாழ்த்துகள் அய்யா


நான் பார்த்து வியந்த தமிழாசிரியர்களில் எங்கள் கவிஞர் , பேச்சாளர் அய்யா எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியவர். பள்ளியில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் இவர்தான் கதாநாயகன்.  ஒவ்வொரு நபரையும் பேசுவதற்கு அழைக்கும்போதும் பேசி முடித்த பிறகும் அவர்களின் உரையின் தன்மையை கவிதையில் சொல்லி அலங்கரித்து ஆச்சரியமூட்டுபவர். 



     நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழா இலக்கிய நிகழ்விற்கு பேச்சாளர் குழந்தைக்கவிஞர் சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். யாருக்குமே தெரியாமல் மேடையின் ஓரமாய் நாற்காலியில் அமர்ந்து கவிதை நடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த எங்கள் தமிழாசான் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கவிதை நடையில் மயங்கிய குழந்தைக்கவிஞர் அவர்கள் , எங்கள் தமிழாசான் அவர்களை வெகுவாகப் பாராட்டியதோடு நில்லாமல் ''நீங்கள் முன்னுக்கு வர வேண்டியவர்கள் '' என்று கூறி முன்வரிசை அருகே அமர வைத்தார்கள். 


     விரைவில் உங்களின் கவிதை நூலினை எதிர்பார்க்கிறேன் என்று 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் கூறிச் சென்றார்.  நாங்களும் அந்த நூலினை எதிர்பார்த்து இந்நாள்வரை காத்திருக்கின்றோம். தற்போது தமிழர்களைக் கொண்டாடும் தகைசால் பூமியாம் சிங்கப்பூரில் எங்கள் தமிழாசான் வசித்து வருகிறார்கள்.


  இனிய பிறந்த நாளில் எங்கள் தமிழாசான் அவர்கள் இன்னும் இனியன எல்லாம் பெற்று இதமாய் வாழ வாழ்த்தி மகிழ்கின்றேன்.

புதன், 13 ஜூலை, 2022

தொவரக்காடு - சோலச்சி

 



அகநி வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கும்  சோலச்சியின்

                ''தொவரக்காடு'' - சிறுகதை நூல்.

     வாழ்த்துகள் சொல்வதோடு நின்றுவிடாமல் நூலினை விலை கொடுத்து வாங்கி ஆதரவு தர வேண்டுகின்றேன்.  நூலின் விலை ரூபாய் 120/- (நூற்று இருபது மட்டும்) .

கீழ்காணும் வங்கி எண்ணுக்கு ரூபாய் 120/- அனுப்பிவிட்டு அதை வாட்ச்அப் - க்கு தங்களது முகவரியுடன் அனுப்பினால் நூல் அனுப்பி வைக்கப்படும். 

T.THIRUPPATHI
A/NO : 101001000004091
IFSC:IOBA0001010
BANK: INDIAN OVERSEAS BANK
            VAYALOGAM
PUDUKKOTTAI DISTRICT

Google pay மற்றும் வாட்ச்அப் எண் : 9788210863

தங்களின் பேரன்பினை எதிர்பார்த்து
சோலச்சி அகரப்பட்டி

திங்கள், 27 ஜூன், 2022

மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் கைகளில் கருப்புச்சட்டையும் கத்திக் கம்புகளும்

 நெஞ்சம் நிறைந்த நன்றி


இன்று மாலை (27.06.2022) ஆசிரியர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டார்.


சார் வணக்கம்.  ''கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும்'' ங்குற நூல் நீங்க எழுதுனதுதானே.


ஆமாம் நான் எழுதுனதுதான். 


உங்களுக்கு வாட்ச்அப்ல ஒன்னு அனுப்பிருக்கேன். பாருங்க சார் என்று சொல்லிக்கொண்டே இணைப்பைத் துண்டித்தார்.


என்னவாக இருக்கும் என்ற யோசனையில் வாட்ச்அப்பை திறந்து பார்த்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது.



பிறகு நானே தொடர்பு கொண்டேன்.


எனக்கே தெரியாது சார். என் பையன்தான் உங்களோட நூலை கொடுத்துருக்கான். போட்டோ காட்டுனப்பதான் அது நீங்க எழுதுனதாச்சேனு உங்கள தொடர்பு கொண்டேன்  என்றார். மகிழ்ச்சியும் நன்றியும் கூறினேன்.

திருச்சிராப்பள்ளி Nandavanam Chandrasekaran இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியீடு செய்த "கருப்புச்சட்டையும் கத்திக் கம்புகளும்'' ராஜபாளையம் மணிமேகலை மன்றம் மற்றும் புதுவை தமிழ்ச்சங்கம் விருது பெற்ற நூல். புதுக்கோட்டை அரசு கலைஞர் கருணாநிதி மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கு பாடத்திட்டமாக இருக்கும் இந்நூல் தற்போது சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களில் தவழுகிறது. 


நம்மை யாரோ எங்கோ தமிழ்கூறும் நல்லுலகில் கரம் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.


நன்றி


தமிழ்திரு. ஷீபா ஆசிரியர் மற்றும் அவரது மகன் ஹெரால்டு நிக்கேஷ்


(குறிப்பு : சில தினங்களுக்கு முன் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு முனைவர்.தொல்.திருமாவளவன் கைகளில் எனது ''விரிசல்'' நூல் கிடைக்கப்பெற்று ,அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருந்தது குறுப்பிடத்தக்கது.)


பேரன்பின் வழியில்

சோலச்சி அகரப்பட்டி

ஞாயிறு, 26 ஜூன், 2022

வேலை பார்த்துக்கொண்டே முதல்மதிப்பெண் எடுத்த மாணவர்

 

   வேலை பார்த்துக்கொண்டே முதல்மதிப்பெண் எடுத்த மாணவர்



எங்கள் ஊர் 
அகரப்பட்டியைச் சேர்ந்த திரு.இரா.பொன்னையா - இராஜேஸ்வரி இவர்களின் மூத்தமகன் பொ.இராஜதுரை , 2021-2022  கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 439 மதிப்பெண்கள் எடுத்து அரசினர் மேல்நிலைப்பள்ளி வயலோகத்திற்கும் எங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்தாண்டு இப்பள்ளியின் முதல்மதிப்பெண் பெற்ற மாணவர் இவர்தான்.



    இவரின் தந்தை எலக்ட்ரானிக் வேலை பார்த்து வருகிறார். பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தந்தைக்கு துணையாக பல இடங்களுக்கும் சென்று எலக்ட்ரானிக் வேலை பார்த்துக்கொண்டே  பாடங்களையும் படித்து இருக்கிறார். வேலை பார்த்துக்கொண்டே படித்து ஊருக்கு பெருமை சேர்த்த இராஜதுரையை எங்கள் ஊர் அகரப்பட்டி கொண்டாடி மகிழ்கிறது. மாணவர் இராஜதுரையின் கல்விக்கு அரசு உதவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. தந்தையைப் போலவே அமைதியின் மொத்தவடிவமாய் திகழும் மாணவர் பொ.இராஜதுரையை நேரில் சந்தித்து மனசார பாராட்டி மகிழ்ந்தேன்.

செவ்வாய், 21 ஜூன், 2022

எழுச்சித்தமிழர் கைகளில் கிடைத்த சோலச்சியின் நூல்கள்

 நெகிழ்ச்சியான நிகழ்வு


காலம் தாழ்த்திய பதிவுதான் என்றாலும் காலத்துக்கும் ஏற்ற பதிவு.


2022 மே மாதத்தின் முதல் வாரத்தில் ஓர் அலைபேசி அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இவர் எதற்காக என்னிடம் பேசுகின்றார் என்ற நினைப்போடு பேச்சைத் தொடர்ந்தேன்.



 2022 மே மாதம் முதல் வாரத்தில் சிதம்பரம் நாடாளுமன்றம் உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் புதுக்கோட்டை சிப்காட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. 


      வரவேற்பின்போது அதே பகுதியான ஊரப்பட்டியைச் சேர்ந்த தோழர் பாக்யராஜ் அவர்கள் எனது ''விரிசல்'' என்கிற கவிதை நூலினை எழுச்சித்தமிழர் அவர்களிடம் வழங்கியுள்ளார். நூலினை ஆவலோடு பார்த்துவிட்டு,  இந்நூல் சோலச்சியின் நூலாச்சே. நான் வாசித்திருக்கின்றேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி  என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த விசிக வின் மண்டல அமைப்புச் செயலாளர் அண்ணன் பெரம்பலூர் இரா. கிட்டு அவர்களிடம் கொடுத்து , இதை வாசித்துவிட்டு எழுத்தாளரிடம் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார். 


    மண்டல அமைப்புச் செயலாளர் அண்ணன் பெரம்பலூர் இரா.கிட்டு அவர்களும் நூலினை முழுவதுமாக வாசித்துவிட்டு ,ஏற்கனவே முதல்பத்தியில் சொன்னது போல் அலைபேசியில் தொடர்பு கொண்டு சில கவிதைகள் குறித்து சிலாகித்துப் பேசினார். பேசியதோடு நிறுத்திக்கொள்ளாமல் "சோலச்சி... எத்தன நூல் எழுதிருக்கீங்களோ அதுல மொத்தமா நூறு பிரதி கொடுங்க''  என்றார். 


  நூறா...என்று சற்றே புரியாமல் தயக்கம் கொள்ள,  உரிய விலை கொடுத்து வாங்கிக்கிறேன் என்று சொல்லி நூறு பிரதிகளையும் உரிய விலை கொடுத்து பெற்றுக்கொண்டதில் கூடுதல் மகிழ்ச்சி.  



  தான் மட்டும் வளராமல் தன்னோடு இருப்பவர்களையும் அறிவார்ந்தவர்களாக ஆக்குவதிலும் , நான் இந்த நூலை வாசித்திருக்கின்றேன் நீங்களும் வாசியுங்கள் என்று சொல்லி படைப்பாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பேராற்றல் படைத்த எழுச்சித்தமிழர் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆளுமையைக் கண்டு வியக்கின்றேன். பெருமை கொள்கிறேன். 


    எழுச்சித்தமிழர் அண்ணன் முனைவர் தொல்.திருமா அவர்களுக்கும்  மண்டல அமைப்புச் செயலாளர் அண்ணன் பெரம்பலூர் இரா.கிட்டு அவர்களுக்கும் நூறு பிரதிகளையும் பெறுவதற்கான பணிகளை செய்த தோழர் பெரம்பலூர் நீதி பூங்கா அவர்களுக்கும் எனது நூலை  தலைவர் அவர்களிடம் கொண்டு சேர்த்த தோழர் ஊரப்பட்டி பாக்யாராஜ் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.


தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி.

அமைப்பாய் திரள்வோம்


பேரன்பின் வழியில்

சோலச்சி அகரப்பட்டி

வியாழன், 9 ஜூன், 2022

தாக்கத்தை ஏற்படுத்திய தாக்கம் கவிதை நூல் - சோலச்சி

 

''கவிஞர் சசிக்குமாரின் தாக்கம் கவிதை நூல் குறித்து சோலச்சி''

    


தமிழின் கவிதை  உலகில் எண்ணற்ற நூல்கள் பெருகி வருவது உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தாக்கம் இருக்கும்.  அதைக் கவிதையாக்கி நூலாக வெளியிடுவார்கள்.  இங்கு கவிஞர் ஒருவர் ''தாக்கம்'' என்ற பெயரிலேயே கவிதை நூலை வெளியிட்டு தமிழுக்கு பெரும் புகழைச் சேர்த்திருக்கிறார். முப்பத்து நான்கு பக்கங்களைக் கொண்ட கவிதை நூலில் பதினாறு கவிதைகளை புனைந்து வெளியிட்டு இருக்கும் கவிஞர் இளங்கவி பெ.சசிக்குமார் அவர்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். அது என்ன பதினாறு ...?

கலையாத கல்வி,
கபடமற்ற நட்பு,
குறையாத வயது,
குன்றாத வளமை,
போகாத இளமை,
பரவசமான பக்தி,
பிணியற்ற உடல்,
சலியாத மனம்,
அன்பான துணை,
தவறாத சந்தானம்,
தாழாத கீர்த்தி,
மாறாத வார்த்தை,
தடையற்ற கொடை,
தொலையாத நிதி,
கோணாத செயல்,
துன்பமில்லா வாழ்வு.
     - இவையே பெருவாழ்வு வாழ்வதற்கான பதினாறு.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த கவிஞர் சசிக்குமார் அவர்கள் தாக்கம் கவிதை நூலின் முதல் கவிதையே முதுமை என்கிற தலைப்பில் வைத்துள்ளார். முதுமையை பற்றி ஒருவன்  சிந்திக்கிறான் என்றால் நிச்சயமாக அவன் முதிர்ச்சி அடைந்தவனாகத்தான் இருப்பான். பாலூட்டி சீராட்டி வளர்த்த பெற்றோர, முதுமை காலத்தில் எத்தனை பிள்ளைகள் பேணிப் பாதுகாக்கிறார்கள் என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டு விடுகின்றேன். தாகத்திற்கு உதவாத தண்ணீரைப் போலவா நாம் இருப்பது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

முதல் கவிதையே முதுமை என்கிற தலைப்பில் வைத்து நம் கண்களில் கண்ணீர வரவழைக்கிறார் கவிஞர் சசிக்குமார் அவர்கள்.

சாவு வர மறுக்குது
ஒரு வாய்
சோத்த எதிர்பார்த்து என் பொழப்பு ஓடுது...
   - என்று வயதான தாய் புலம்புவதாக படைத்திருக்கிறார் கவிஞர் சசிக்குமார். எத்தனையோ பெற்றோர்கள் தெருக்களில் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கின்றோம். அவர்களுக்கெல்லாம் குடும்பங்கள் இல்லையா....? அவர்கள் பெற்ற பிள்ளைகள் எங்கே...? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நின்று யோசிக்கக் கூட நேரமில்லாமல்தான் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. - என்று புறநானூற்றுப் பாடலில் மாங்குடிக்கிழார் பாடுகிறார். நம்முடைய குலசாமிகளை வயதான காலத்தில் கண்கலங்க விடலாமா....?



வண்ணத்துப்பூச்சி என்கின்ற கவிதையில்....

எள்ளு போன்ற வயிற்றுக்கு
எல்லை தாண்டிப் போகிறாய்... என்று நயமாக சொல்லி நற்றமிழுக்கு புகழ் சேர்க்கிறார். எல்லை தாண்டி சென்றாலும் அதன் இனத்தோடு விரைவில் சேர்ந்து விடுகிறது.  அளவுக்கு அதிகமாக எதையும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. ஆனால் மனிதன் அப்படி இல்லை.  ஒருசாண் வயிற்றை நிரப்ப வாழ்நாள் முழுவதும் அயல்நாடுகளிலேயே வேலை பார்த்து ஓடாய் தேய்ந்து ரசமற்ற கண்ணாடியாக திரும்பி வருகின்றான். குடும்பம் என்கிற இன்பக்கடலில் மூழ்கி திளைக்க வழியில்லாமலேயே போய்விடுகிறது பலரது வாழ்க்கை. நாம் நம்மைச்சுற்றி உள்ள சின்னஞ்சிறு பூச்சிகளிடம் கற்றுக்கொள்வது நிறையவே இருக்கிறது.

ஆசிரியர் பற்றிய கவிதையையும் படைத்திருக்கின்றார் கவிஞர் சசிக்குமார் அவர்கள்.

எல்லோரையும்
முன்னுக்கு கொண்டு வருபவர்களை
பின்னுக்கு தள்ளி பிடரியில் அடிக்கிறது
அதிகாரம்...... இது என்னுடைய (சோலச்சி) கவிதை.  ஆசிரியர்களை அரசாங்கம் எவ்வாறு நடத்துகிறது என்று இப்படி கவிதை எழுதியிருப்பேன். ஒரு நாட்டின் மூல ஆதாரம் விவசாயமும் கல்வியும்தான். விவசாயிகளைகளையும் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களையும் ஆட்சியாளர்களும் பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். எவ்வளவு அநாகரிகமாக நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்துகிறார்கள்.  இப்படியிருந்தால் நாடு உருப்படுவது எப்போது..? மருத்துவர், அரசியல்வாதி, ஆட்சியர்,  பொறியாளர் ,இன்ன பிற....,என அனைவரையும் உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்தான். அனைவரையும் உணவளித்து வாழ வைப்பவர்கள் விவசாயிகள் . இருவரையும் ஒரு நாடு அவமதிக்குமானால் அந்த நாட்டை பேய்கள் ஆளும் நாடாககவும் பிசாசுகள் வாழும் பூமியாகவும் கருதப்படும்.

அளவான கண்டிப்பும்
அளவற்ற அக்கறையும்...
-  கொண்டவர்கள் ஆசிரியர்கள் என்று கவிஞர் சசிக்குமார் அவர்கள் தனது தாக்கத்தை பதிவு செய்கிறார்.  இதற்காகவே அவரை மனசார பாராட்டி மகிழலாம்.

காத்திருக்கும் காதலன் என்கிற தலைப்பில்....

போராடித்தான் காதல் கிடைக்குமென்றால்
போராடுவோம் காதல் கிடைக்கும்வரை... காதலுக்கு பச்சைக் கொடி ஏந்தி உலா வருகிறார். காதலை கொண்டாடத்தவறியதன் விளைவுதான் சாதிய மோதல்களும் மதவாத பிரச்சனைகளும். ஒரே மதம் என்பார்... அதற்குள் ஓராயிரம் சாதிகளை வைத்துக்கொண்டு நாட்டைச் சீரழிப்பார். கேட்டால் நால்வர்ணத்தையும் சாதிய உட்கட்டமைப்பையும் கடவுளே படைத்தார். கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பார். பிறகு நாமெல்லாம் ஒரே மதம்.... ஓடி வாங்க.... ஓடி வாங்க என்று சனாதன கும்பல் இரத்தத்தில் குளிர்காய்கிறது. நாம் காதலைக் கொண்டாட மறந்தால் நமக்கு பிறகான தலைமுறை வாழ்வின் வழிமுறைகள் தெரியாமல் மண்டை பிய்த்துக்கொண்டு மாண்டு போவார்கள்.



தற்கொலை தீர்வல்ல என்கிற தலைப்பில்.....

முள்மரத்தில் கூடு கட்டி
முயன்று வாழும் குருவி கூட
இரை தேட பறந்தாலும்
எண்ணம் யாவும் கூட்டில் உண்டு...
     - என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார். தமிழின் கரம் பிடித்து தரணியில் கவிதைத் தேர் ஓட்ட வந்திருக்கும் கவிஞர் சசிக்குமார் அவர்கள் இன்னும் ஆழமான கவிதைகளை எழுத வேண்டும் என வாழ்த்தி மகிழ்கின்றேன்.
                        பேரன்பின் வழியில்
                        சோலச்சி அகரப்பட்டி.

நூலாசிரியர்
கவிஞர் சசிக்குமார் : +919047369096


ஞாயிறு, 29 மே, 2022

சோலச்சிக்கு சமூக எழுத்தாளர் விருது - புதுகை வரலாறு நாளிதழ்

 

சோலச்சிக்கு சமூக எழுத்தாளர் விருது - புதுகை வரலாறு நாளிதழ்

புதுக்கோட்டை மாவட்டம் புதுகை வரலாறு நாளிதழ் நடத்திய இரண்டு நாள் கல்வி கண்காட்சி விஜய் பேலஸில் 2022 மே28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்றது.




 விழாவின் நிறைவு நாளில் சாதனை புரிந்தோருக்கான விருதுகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அவர்கள்,  காரைக்குடி அழகப்பா மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா அவர்கள்,  தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், இலக்கிய தாளாளர் டாக்டர் சலீம் அவர்கள்,  கலைஞர் தமிழ்சங்கம் அண்ணன் சந்திரசேகர் அவர்கள், திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் அவர்கள், எங்கள் பேராசான் பேராசிரியர் விஸ்வநாதன்  அவர்கள், மரம் நண்பர்கள் சமூக ஆர்வலர் கார்த்திக்மெஸ் மூர்த்தி அவர்கள்,  எழுத்தாளர் இராமுக்கண்ணு, புதுகை பண்பலை நிறுவனர் அன்புச் சகோதரர் டாக்டர் விஜிக்குமார் அவர்கள், உலகக் கவிஞர் பீர்முகமது அவர்கள், அன்பு நண்பர் சிகரம் சதீஸ்குமார் அவர்கள்,  அன்புத் தம்பி கவிஞர் மலையப்பன் அவர்கள்,  இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி அவர்கள், திருக்குறள் கழகம் இராமையா அவர்கள்  மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட இலக்கிய சமூக ஆளுமைகள் பலரும் கலந்து கொண்டனர்.    விழாவின் ஏற்பாடுகளை புதுகை வரலாறு நாளிதழின் நிறுவனர் தோழர் சிவசக்திவேல் அவர்கள் மிகச்சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். 




விழாவில் சோலச்சிக்கு ''சமூக எழுத்தாளர் விருது'' வழங்கி பெருமை செய்யப்பட்டது. நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

வியாழன், 26 மே, 2022

கவிஞர் விஜய் ஆனந்த் -இன் போன்சாய் மனங்கள் - சோலச்சி

 வான சூரியன் தெரியும் திசையெங்கும் - சோலச்சி



விஜய் ஆனந்தின் எளிமையான, வளமையான,  வலிமையான, ரசனையான இந்தத் தொகுப்பின் 82 கவிதைகளும் கடும் கோடையில் நதிக்கரையோரத்து ஆலமரத்தின் நிழலில் தென்றலை முகத்தில் வாங்கும் உணர்வைத் தந்தன.

ஒரு சிறந்த கவிதைக்கு என்னவெல்லாம் அடையாளம் ? பொருள் எளிதில் புரிதல், வார்த்தைகளின் கோர்ப்பில் கவித்துவம்,  உணர்வுகளை வாசிப்பவர்களுக்கு கடத்தும் திறன், படித்தபின் புன்சிரிக்க / இமைகளில் ஈரம் உணர வைத்தல்..... இந்தக் கவிதைகள் இவையெல்லாம் கொண்டிருக்கின்றன என்று எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் முன்னுரை வழங்குவதிலிருந்து இந்நூலை வாசிக்க வேண்டும் என்கின்ற ஆவலை நம்முள் ஏற்படுத்திவிடுகிறது.

எதையாவது எழுதி பக்கங்களை நிரப்பி தானும் ஒரு கவிஞன்தான் என அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத கவிஞர் விஜய் ஆனந்த் ஒவ்வொரு பக்கத்திலும் உணர்வுபூர்வமான கவிதைகளை நடவு செய்து தன்னை தமிழ்கூறும் நல்லுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாய்  முத்திரை பதித்து கவிதை நடை போட்டுக்கொண்டிருக்கின்றார். ''போன்சாய் மனங்கள்'' எனும் கவிதைச் சுரங்கத்தை வழங்கிய கவிஞர் விஜய் ஆனந்த் அவர்களுக்கு என வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பூடகமாய் எழுதி கவிதைக்குள் கவிதை வைத்து வாசிப்பவனை பொருள் புரியாமல் திணறடித்து குழப்பாமல் எளிய நடையில் எல்லோருக்கும் புரியும்படியான மொழியில் கவிதைகளை படைத்திருக்கிறார். தான் சொல்ல விரும்பும் செய்தியை அழகாய் சொல்லியிருக்கிறார்.

வலுத்தவன்
வயிறு நிறைய
இளைத்தவன் வயிறு
முட்டக் குடிக்கிறான்......

என்று சமூகத்தின் மீதான பார்வையை பதிவு செய்கிறார் கவிஞர்.  பணக்கார வர்க்கம் எங்காவது குடித்துவிட்டு தெருவில் கிடந்து பார்த்திருக்கின்றோமோ...? மதுவில் மிகப்பெரிய அரசியல் நாடகமே அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.  இது தெரியாமல் உடம்பு வலிக்கு குடிக்கிறேன் ; மனசு சரியில்லை குடிக்கிறேன் என்று உள்ளதை தொலைத்துவிட்டு அம்மணமாய் தெருவில் கிடக்கிறான்.

நவீன இந்தியா, டிஜிட்டல் இந்தியா, பாரத் மாதா கீ ஜே...... என்று மார்தட்டிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில்தான் அயல்நாட்டு அதிபர்கள் வந்தால் குடிசைப்பகுதிகளை தட்டிகொண்டு மறைப்பதும் குடிசைகளை அப்புறப்படுத்த அடியாட்களை ஏவுவதும் வெட்கமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் வீடு இல்லாமல் உணவு இல்லாமல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சாலையோரத்திலும் தெருக்களிலும் முடங்கிக் கிடப்பதை காண முடிகிறது.  இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ; எதற்காக இங்கே தங்கி அல்லல்படுகிறார்கள்; இவர்களின் வாழ்வாதாரம் என்ன என்று ஆட்சியாளர்களே யோசிக்க வாய்ப்பு இல்லாதபோது நாம் எப்படி யோசிக்க முடியும் என்று நம்முள் கேள்வி எழுவது என்னவோ உண்மைதான். அதற்காக அப்படியே கடந்து போக முடியுமா...?

பேருந்து நிலைங்களிலும் ரயில் நிலையங்களிலும் எங்கெல்காம் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் டோலக்கையோ தவிலையோ வைத்துக்கொண்டு வித்தைகாட்டி பிழைக்கும் மனிதர்களைப் பற்றி சிந்திக்கின்றார் கவிஞர் விஜய் ஆனந்த். கவிதையை வாசிக்கும்போது இந்த தேசம் பதில் ஏதும் பேசாமல் வெட்கித் தலைகுனிந்து நிற்பதை காண முடிகிறது.

தட்டும் கரண்டியும் கொண்டு
தப்புத் தாளங்கள்
வாசிக்கும் இந்த
தொம்பன்குடியின்
வாழ்க்கைப்பாட்டை கைதட்டி
ரசிக்குது ஒரு கூட்டம்.....

....வெகு அருகில்
காதைக்கிழித்தபடி கடந்து
செல்கிறது மெட்ரோ
ரயில் இம்மாநகரத்தின் நவீனங்களை
சுமந்தபடி....

சமூகத்தின் மீதான தனது பார்வையை விரிவடையச் செய்திருக்கும் கவிஞர் விஜய் ஆனந்த், குழந்தை, காதல், பாசம்,  பெண்ணியம் என அனைத்தையும் பேசுகின்றார். வான விரிப்பினை வண்ணக் காகிதங்களாக மடித்துக் கொடுத்தால் அனைத்துப் பக்கங்களிலும் இச்சமூகம் விழிப்பு பெற முத்தாய்ப்பான கவிதைகள் படைத்தளிப்பார் என்பதில் ஐயமில்லை.

மனிதன் வீரம் படைத்தவனாக இருக்க வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் ஈரம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும். காலங்காலமாக காதல் கொண்டாடப்பட வேண்டும்.  எங்கோ நடக்கும் ஒரு தவறை நாடக்காதல் என்று சொல்லி ஒட்டுமொத்தமாக காதலை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்.  காதல் ஒன்று மட்டும் இல்லையென்றால் இந்த உலகம் என்றோ அழிந்து போயிருக்கும். காதலின் வாசத்தை உணராதவர் என்று எவருமில்லை. வரட்டு கௌரவம் என்கிற பெயரில் ரசிப்பதும் இல்லை ; ஏற்பதும் இல்லை என்றால் என்னத்துக்க வாழனும்னு கேட்கத் தோன்றுகிறது. காதலின் வாசத்தை கவிஞர் விஜய் ஆனந்த் இப்படி எழுதுகிறார்...

சில சூடான முத்தங்களை
சமைத்துச் சுவைத்துவிட்டு
நகர்கையில்
வீடெங்கும் மணத்துக்கிடக்கிறது
நம் காதலின் வாசம்....

அடுக்களையில் எனக்கான
பிரியங்களை
சமைத்துக்கொண்டிருந்தாய்
நீ....

என்னும் கவிதையை வாசிக்கும்போது தவறவிட்ட வாசங்களை சுவாசிக்கத் தோன்றுகிறது.  காதல் என்றால் ஆபத்து, அது மோசமான ஒன்று என்று பொய்யுரைகளை பரப்பிக்கொண்டு இருப்பவர்களிடம் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்களின் கவிதைகளை கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும்.  நிச்சயமாக ஒருவன் வாசித்து முடித்தால் அவன் மனிதனாக தலை நிமிர்வான் என்பது உண்மை. 

அறிவார்ந்த சமூகத்தின் ஆற்றல் மிகுந்த புலவர் அய்யன் திருவள்ளுவர்

உணலினும் உண்டல் அறல்இனிது; காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

என்கிறார். இவை காதல் வயப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.  வாழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்துவிட்டு போகக்கூடாது.  வாழ்தலில் இனிது எது ? அறம் எது ? எனத் தெரிந்து மனதை கனமாக இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல் வாழ வேண்டும்.

என் எழுத்தின் நதிமூலம்... ஊற்றுக்கண்... தொடக்கப்புள்ளி எல்லாமே அப்பாவின் திடீர் மறைவுதான் என்று கூறும் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்கள் அப்பாவின் கவிதைகளில் நம்மையும் மூழ்கடித்து ஏதோ செய்து  விடுகிறார்.

வான வீதியில் மேகங்கள் கூட நின்று நிதானித்து பயணிக்கிறது. நமக்கோ நிற்க நேரமில்லை; தூங்க நேரமில்லை. திங்கக் கூட நேரமில்லை என அலைந்து தொலைந்து கொண்டிருக்கின்றோம். குழந்தைகளோடு நேரம் செலவழிக்க மனமில்லாமல் ஆலாய் பறந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்கள் வாழ்க்கையை வாழச் சொல்கிறார் குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டுகிறார். நம்மையும் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் என தூண்டுகின்றார்.



உலகக் கவிஞர்களை

 மேற்கோள்

 காட்டுகின்றோம். அப்படிக் காட்டினால்தான் நம்மை அறிவாளிகளாக நம்புவார்கள் என்ற மாய பிம்பத்திற்குள் மூழ்கிக் கிடக்கின்றோம். உள்ளூர் படைப்பாளிகளை கொண்டாடி உலகக்கவிஞர்களாக அடையாளப்படுத்துவோம். வான சூரியன் தெரியும் திசையெங்கும் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்களின் கவிதை ஒளி வீசும்.

கொரணா காலத்து கவிதைகள் என சமகாலத்து அரசியலை அழகாய் படம்பிடித்துக் காட்டும் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்கள் இந்நூலை டிசம்பர் 2020 இல் வெளியீடு செய்திருக்கிறார்.

80 பக்கங்கள் கொண்ட போன்சாய் மனங்கள் என்னும் இக்கவிதை நூலை இருவாட்சி வெளியீடு செய்திருக்கிறது. அழகான வடிவமைப்பினைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 100/-

நூல் வெளியீட்டு முகவரி :

இருவாட்சி
(இலக்கியத் துறைமுகம் )
41, கல்யாணசுந்தரம் தெரு,
பெரம்பூர்,
சென்னை - 600011
பேச: 94446 40986

நூலாசிரியர் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்களிடம் பேச : 97917 57087


பேரன்பின் வழியில்
சோலச்சி அகரப்பட்டி
பேச : 9788210863



புதன், 18 மே, 2022

செவந்த ரோசாவே - சோலச்சி அகரப்பட்டி

 


ஆலம் விழுதிலே என்னை ஆட்டி விட்டவளே
நடுச்சாமத்திலே சோறு ஊட்டிவிட்டவளே
அந்தக களத்து மேட்டிலே என்னை வருடிப் போனவளே
யாரும் பார்க்குமுன்னே நெஞ்சை திருடிப் போனவளே....

படிக்கும் காலத்திலே அந்த நெனப்பு தோணலயே
பழக பழகத்தான் இப்ப என்னைக் காணலயே
அரும்பு மீசையிலே அந்த அருவி கொட்டயிலே
குறும்பு பண்ணயிலே அந்தக் குருவி சேட்டையிலே
சுடிதாரு மாட்டலையே சில்க் சேலை கட்டுறீயே
கூரைப் புடவைக்குள் என்னை சுத்துறீயே.......

நெஞ்சுக் குழியிலே உன்ன தச்சு வச்சுருக்கேன்
மூவஞ்சு வயசிலே உன்ன முடிச்சு வச்சுருக்கேன்
ஆசை வார்த்தையிலே என்னை அணச்சுக் காப்பவளே
ஒட்டுப் பசையப்போலவே ஒட்டி கோர்ப்பவளே
ஆசை வச்சவளே நாளும் ஆசை வச்சேனே
வேசமில்லாமல் உசுர வச்சேனே.....

செவந்த ரோசாவே சிரிக்கும் மல்லிகையே
உன்னத் தவிரத்தான் உள்ளே யாருமில்லையே
ஆத்தங்கரையிலே நாம மறஞ்சு பேசயிலே
நவ்வா மரத்திலே நாம கொஞ்சி பேசயிலே
மடியில் தூங்க வச்ச என்ன நொடியில் ஏங்க வச்ச
இப்ப ஒன்னா சேரத்தான் தேதி நல்லா குறிச்சு வச்ச....

        - சோலச்சி அகரப்பட்டி

சனி, 14 மே, 2022

வாழ வேண்டும் முறைப்படி - சோலச்சி

 சத்தியமா புத்தியிருந்தா

பொழச்சுக்க தம்பி - இது

சத்தியவான்கள் வாழ்ந்த பூமி

உண்மையை நம்பி

குமரி முதல் இமயம் வரை இருக்குது நாடு

பண்பாட்டை விளக்கிச் சொன்ன

இந்தியத்திருநாடு.....


அரசாங்க வேலையத்தான் நம்பிட வேண்டாம்  - நீ

அடாவடி செய்துதானே

வாழ்ந்திட வேண்டாம்

காசிருந்தா கடவுளையும் வாங்கிட முடியும் - நம்ம

துன்பங்களும் பூமியிலே எப்படா முடியும்.....


ஏசியிலே வாழுறது நாம இல்லடா - இங்கே

ஏசியத்தான் செய்யுறோமே நம்ம கையிலடா

பாடுபட்டு உழைக்கிறோமே பஞ்சம் தீரல

பஞ்சப்படி ஏதும் இல்லே நெஞ்சம் ஆறல....


இலவச சலுகைகளை வழங்குது அரசு

இடையில் லட்சம்தானே கொட்டுது முரசு

தகுதி திறமை மோசடியும் நடக்குது தம்பி

தரம் பார்த்து நடக்கலனா ஆகிடுவ வெம்பி....


சாதிய மோதல்களை தூண்டி கெடுக்குறான்

நீதியை நிதி கொடுத்து நிலையை ஒடுக்குறான்

நிலைகெட்ட பூமியிலே நிற்பதெப்படி - நாம

நேயத்தோடு வாழ வேண்டும் முறைப்படி.......


          - சோலச்சி அகரப்பட்டி



வெள்ளி, 29 ஏப்ரல், 2022

கலைஞர் கருணாநிதி கல்லூரியில் இலக்கிய மன்ற விழா

 

29.04.2022 வெள்ளிக்கிழமை காலையில் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரச மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)  இலக்கிய மன்றக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன்.



     கல்லூரி வாசலில் ஐவகை நிலங்கள் குறித்த பேரழகு மிகுந்த கோலங்களை மாணவிகள்  வரைந்திருந்தனர். ஒவ்வொரு கோலமும் நம்மை அந்த நிலங்களின் வாழ்வியலுக்குள் அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தின. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை தமிழ்த்துறை நிர்வாகம் செய்திருந்தது.

புதுக்கோட்டையின் பெருமைகளையும் கல்லூரியின் செயல்பாடுகளையும் தலைமை உரையில் மிக நேர்த்தியாக பேசிய கல்லூரியின் முதல்வர் அவர்கள் ஓய்வறியா உழைப்பாளியாக இருக்கிறார். கல்லூரியின் முதல்வர் தமிழ்த்திரு. முனைவர் புவனேஸ்வரி அவர்கள் கல்லூரிக்கு கிடைத்த வரம் என்றே உரக்கச் சொல்வேன். தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்த்திரு.சாந்தி அவர்கள் உள்ளிட்ட பேராசிரியர்களின் தன்னிகரற்ற செயல்பாடுகளை எண்ணி மனசார பாராட்டி மகிழ்கின்றேன்.




   எழுத்தாளர் எஸ்.ராமன் அவர்களின் குடும்பம் எனும் கோலம் சிறுகதை

கிரிஜா இராமச்சந்திரன் அவர்களின் அம்மா வாங்க காசிக்குப் போகலாம் சிறுகதை (மேற்சொன்ன இருவரும் புதுச்சேரி  விடியல் இலக்கிய இதழ் படைப்பாளர்கள்)

எழுத்தாளர் இண்டமுள்ளு அரசன் அவர்களின் கெடாவெட்டி குருசாமி சிறுகதை

      - என மூன்று சிறுகதைகளை மையமாக வைத்து நான் பேசிய உரை பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகின்றேன்.

    கல்லூரி நிர்வாகத்திற்கும் எங்கள் பேராசிரியர் விஸ்வநாதன் அய்யா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

பேரன்பின் வழியில்
சோலச்சி
அகரப்பட்டி

திங்கள், 28 மார்ச், 2022

ஆத்தூரில் சிறுகதை பயிலரங்கம் - சோலச்சி

 

23.03.2022 முதல் 25.03.2022 மூன்று நாள் சிறுகதை பயிற்சி பட்டறை சேலம் ஆத்தூர் வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் நடைபெற்றது. இதில் இரண்டாம் நாள் 24.03.2022 வியாழக்கிழமை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன்.



 எனக்களித்த இரண்டரை மணி நேரத்தை பயனுள்ளதாக்கினேன் என்றே நம்புகின்றேன்.  மாணவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அதை உறுதி செய்தது. இந்நிகழ்வில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் மாணவர்கள் ஐம்பது பேர் கலந்து கொண்டனர். 



மு.வ அவர்களின் 'குறட்டை ஒலி' சிறுகதை ஒன்றும் வளர்இளம் எழுத்தாளர் பாண்டிச்செல்வம் அவர்களின் 'செவலக்காளை' சிறுகதை ஒன்றும் எனது 'குறி' என்கிற சிறுகதை ஒன்றும் மாணவர்களின் பார்வைக்காக வழங்கினேன். இடையிடையே சின்னச்சின்ன நகைச்சுவை கதைகளும்.....

    

          பேராசிரியர் மு.முருகேசன் அவர்கள் நினைவு பரிசு வழங்குகிறார்கள் 

 கலந்துரையாடலாக நடைபெற்ற இந்நிகழ்வில் பதினேழு சிறுகதை எழுத்தாளர்களை அடையாளம் காண முடிந்தது.  சிலர் தயங்குவதையும் உணர்ந்து கொண்டேன். அதற்கு தாழ்வு மனப்பான்மை ஒன்றுதான் காரணம் என்பதையும் புரிந்து கொண்டேன். மாணவர்களுக்கு எனது வழிகாட்டல் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.  நான் பயிலரங்கம் முடிந்து கிளம்பும்போது மாணவர்கள் (மகளிர்) பலர் ஓடி வந்து அவர்கள் எழுதிய சிறுகதைகளை காண்பித்தனர்.  தயக்கம் உடைத்து பெரும்படை உருவாகிவிட்டது என்று நம்புகின்றேன். 

சாதனைக்கவிஞர் மதுரம் ராஜ்குமார் அவர்கள் 


இதுபோன்ற பயிலரங்கங்களை ஒவ்வொரு கல்லூரியின் தமிழ்த்துறையும் நடத்தினால் சிறப்பாக இருக்கும். 





மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையச் செய்த தமிழ்த்துறை  பேராசிரியர் மு.முருகேசன் அவர்களுக்கும் தமிழ்நாடு கலை இலக்கிப் பெருமன்ற மகாகவி நாணற்காடன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

ஆத்தா எழுந்து வா... - சோலச்சி

 

ஆத்தா எழுந்து வா....

மூணு பிள்ளை பெத்த
மூத்தது மேல பாசம் வச்ச
கடசாரியா பொண்ணு பெத்த
அது மேலயும் கணிவு வச்ச...

நடுவுல நான் பொறந்தேன்
குடுகுடுன்னு தான் வளர்ந்தேன்

அறியாத காலத்துல
ஆசையா வளத்தியானு
அக்கம்பக்கம் சொல்லலையே
ஆறுதலா நாலு சொல்லு
ஆத்தா நீ போகும் போதும் வெல்லலயே...

ரெண்டு கட்டி கூழு குடிக்கையில
முண்டிக்கிட்டு நான் பறந்தத
கூழ் கொடுத்த பொன்னம்மா கெழவி
நான் வளர்ந்தும் சொன்னுச்சு...

ஒனக்கு கோபம் வர்றப்பல்லாம்
கொள்ளிக்கட்டை சூடு மட்டும்தான்
எம்மேல வைக்கல
ஆப்பையால  அடி வச்ச
ஊதாங்குழாயால வீங்கவச்ச...
அடி தாங்க முடியாம
விட்டியா நான் பறந்தேன்....

நான் பறந்து திரிஞ்ச கதை
அந்த ஊரு சனம் சொல்லுமே
அடி வாங்க முடியாமத்தான்
அடங்காத பிள்ளையாகி
அந்தப் பெரிய குளத்துக்குள்ள
பெரும்படை திரட்டி
டிச்ச விளையாட்ட
புதுசு புதுசா வெளையாண்டேன்...

சாயந்தரம் ஆக்குற கஞ்சிதான்
கா வயிறு அரைவயிறுமா
குடலுக்குள்ள முண்டுச்சு
விடிஞ்சா பழைய கஞ்சி
கா வயித்துக்கே தள்ளாடுச்சு
நாம மொத்தம் அஞ்சு பேரு
அஞ்சு வயிறும்
அப்படித்தான் தவிச்சுச்சு....

நாத்து நட போன இடத்துல
எப்பவாச்சும் கூழோ கஞ்சியோ
கொடுத்தாங்கன்னா
கொட்டை இலையிலதான்
கொட்டாம கொண்டு வந்து
கொடுத்து மகிழ்ந்த கதை
கொஞ்சம்கூட அகலாது
உன்ன விட்டா எங்களுக்கு நிழலேது...

ஓம் மடியில படுத்துக்க
ஓராயிரம் தடவ
முண்டி வந்தேன்
மூத்ததும் கடைசியுமே
முந்திக்கிட்டு படுத்தக்கும்...

அவங்களுக்கு மட்டுமே
அரசாங்க பட்டா
அச்சடிச்சு கொடுத்த மாதிரி
அக்கறையா படுக்க வச்ச
எப்படியாச்சும் பொழச்சுக்குவானு
அப்பப்ப சொல்லித்தானே
என்னைய தள்ளி வச்ச.....

திங்கிற தீனியிலயும் எனக்கு
கொஞ்சமாதான் கிள்ளித் தந்த
இல்லனு யாரும் வந்துட்டா
இருக்கிறது அள்ளித்தந்த...

ஒழுங்கா குளிக்கலனு
ஓடத் தண்ணியில மூழ்க வச்ச
கட்டிக் கரம்பைய
குழி தோண்டி கரைச்சு வச்சு
தலையில தேச்சு விட்டு
முதுகையும் தீட்டிவிட்ட
முடி பஞ்ச இருந்துச்சு
முதுகு மட்டும் ஏனோ
உன் நகம் பட்டு
தீயா எரிஞ்சுச்சு.....

உடம்பு சரியில்லன்னு
ஒரு நாளு நீ படுத்த
ஆத்தாடி அப்புறமா
எந்திரிக்க தான் மறந்த....

பொல்லாத நோக்காடு வர
சொல்லாம செத்துப்போன
என்னைய கொல்லாம கொன்னுப்புட்ட ....

நான்... அழுத கண்ணீரு
அஞ்சு மடை வெள்ளமாச்சு
ஆத்தா என் உடம்பு வத்திப்போச்சு...

கா வயிறோ
அரை வயிறோ கஞ்சி குடிச்சாலும்
ராத்திரியில் தூக்கம் தான்
சொல்லாம வந்துச்சு
ஆத்தா நான் வளர்ந்தேன்
அந்தத் தூக்கம் ஓடிப்போச்சு....

எப்படி தூங்குறது
இப்பவர தெரியலையே
எனக்காக ஒரு மடி
ஒன்னப்போல கிடைக்கலயே...

ஆத்தா.... எழுந்து வா
ஆப்பையால ஒரு அடி
ஊதாங்குழாயால ஒரு போடு
நீ தந்தா போதும்
நிம்மதியா தூங்கி முழிப்பேன்....

                         - சோலச்சி அகரப்பட்டி