புதன், 4 நவம்பர், 2020

மனுஸ்மிருதி விசிக முகநூல் பகிர்வு செய்தி

 மகளிர் எழுச்சி

மக்கள் மீட்சி


கருத்துப் பரப்பு இயக்கம்! 

~~~~~~~~~~~


திருமாவளவன் பெண்களை இழிவுசெய்ததாக பாஜக'வினர் அவதூறு பரப்புவது ஏன்? 


மனுஸ்மிருதியை தடை செய்யவேண்டுமென விசிக'வினர் கோருவது ஏன்?

----------------------------------------------


' திருமாவளவன் பெண்களைக் கொச்சைப் படுத்திவிட்டார் ' என சமூக வலைத்தளங்களில் திடீரென கடந்த அக்டோபர்-21 முதல் பாஜகவினர், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.


தொல்.திருமாவளவன் அவர்கள் அப்படி என்னதான் பேசினார்? எங்கே பேசினார்? இவர்கள் இவ்வாறு பொய் சொல்லுவதற்கு என்ன காரணம்?  உண்மையில்  இதன் பின்னணி என்ன? 


கடந்த செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் " ஐரோப்பிய ஒன்றிய பெரியார்-அம்பேத்கர் தோழர்கள்  கூட்டமைப்பு " சார்பில்,  ’பெரியாரும் இந்திய அரசியலும்’ என்னும் பொருளில் இருநாள் இணையவெளி கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. 


இரண்டாம் நாள் நிகழ்வில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்று 40 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் மனுநூல் குறித்தும் பேசினார்.


" தந்தை பெரியாரைப் பிராமண எதிர்ப்பாளர் கடவுள் மறுப்பாளர் என்று மட்டுமே பலரும் கூறுகிறார்கள். அவர் பிராமணர்களை எதிர்த்ததற்கும், கடவுளை மறுத்ததற்கும் அவர் மனுஸ்மிருதியைத் தீவிரமாக எதிர்த்ததே காரணமாகும். ஏனென்றால், மனுஸ்மிருதிதான் இந்துக்களில் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் பிற்படுத்தப்பட்டோரை சூத்திரர்கள் எனக் கேவலப்படுத்துகிறது. பெண்களை மிகவும் மோசமாக இழிவுபடுத்துகிறது "  என்று தனது பேச்சில் தொல்.திருமாவளவன் விளக்கினார். 

அதில் சிலநொடிகள் அளவிலான பேச்சை மட்டுமே நறுக்கி எடுத்து, " இதோ பாருங்கள் இந்துப் பெண்களைக் கொச்சைப் படுத்துகிறார்"  என்று உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர்.


அவர்களின் உண்மை நோக்கம், விசிக இடம்பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து,  இந்துவிரோத முத்திரைக் குத்தி,  அரசியல் ஆதாயம் தேடுவதே ஆகும். இந்துக்கள் x இந்துஅல்லாதோர் அல்லது  இந்துக்கள்x இந்துவிரோதிகள் என  தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்துவதே அவர்களின் நோக்கம். அதற்கு இவ்வாறு அவதூறு பரப்பி தொல்.திருமாவளவன் அவர்களைப் பலிகடாவாக ஆக்குவதற்கு முயற்சிக்கின்றனர். 


மனுஸ்மிருதி எதிர்ப்பு என்பது புதிய செயற்பாடு அல்ல.  முதன்முறையாக இப்போதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கிறது என்று சொல்லக்கூடிய ஒன்றும் அல்ல.  இதற்கு நீண்டகால வரலாறு உண்டு. 


1927 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழகத்தில் பெருந்தலைவர் எம்.சி. இராஜா அவர்கள் " ஆதி திராவிடர் மாநாட்டில்" மனுஸ்மிரிதியைக் கொளுத்தியுள்ளார். அதே ஆண்டில், டிசம்பர் 4 ஆம் நாள் குடியாத்தத்தில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது. 


அதே ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், மஹத் என்னுமிடத்தில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி அம்மாநாட்டு வாயில் முன்பாக மனுஸ்மிருதியைத் தீயிட்டுக் கொளுத்தினார். பெண்களையும் சூத்திரர்களையும் இழிவுப்படுத்தி ஒடுக்கி வைத்திருப்பதற்கு மனுநூலே காரணம் என்பதால்தான் ஒரு நூறாண்டுக்கு முன்னரே மேற்கண்ட  தலைவர்கள் இவ்வாறு தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


அவர்களின் வழியில்தான் தொல்.திருமாவளவன் அவர்களும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோதக் கருத்துகளை விமர்சித்துப் பேசினார். மனுஸ்மிருதியில் கூறியிருப்பதாக அவர் பேசியதை,  அவரே பேசியதாகப் பொய்யாகவும் அவதூறாகவும் பாஜகவினர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஒருசேர பாஜகவின் இந்த தில்லுமுல்லு வேலையைக் கண்டித்த பிறகும்கூட இந்த அவதூறை வைத்து அரசியல் லாபம் தேட பாஜகவினர் முயற்சிக்கின்றனர்.இதன்மூலம் தமிழ்நாட்டில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அவதூறு பரப்பும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக அவர்களின் பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் தொல்.திருமாவளவன் அவர்கள்மீது தமிழகக் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.


மனுஸ்மிருதி கூறுவதென்ன?

---------------------------------------

சுமார் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது.


# சூத்திரர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் பிராமணர்கள் குடியிருக்கக் கூடாது. ( அத்தியாயம் 4:61)


# தன்னைவிட உயர்ந்த வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சூத்திரனைக் கொன்றுவிடவேண்டும்.  (அத்தியாயம் 8:374) 


# சூத்திரன் நீதிபதியாக இருக்க முடியாது (அத்தியாயம் 8:20)


 # சூத்திரர்கள் கல்வி பயிலக்கூடாது (அத்தியாயம் 3:156 & 4:99) 


# இழிவான பெயர்களை மட்டுமே சூத்திரர்கள் வைத்துக்கொள்ளவேண்டும் ( அத்தியாயம் 2:31)


# பெண்களின் இயல்பே ஆண்களை மயக்குவதுதான் (அத்தியாயம் 2:213)


 # ஒருவன் தனது தாயுடனோ, மகளுடனோ, சகோதரியுடனோ தனிமையில் அமர்ந்திருக்ககூடாது. கல்வி கற்றவரையும்கூட புலன்கள் மயக்கம்கொள்ளச் செய்துவிடும் (அத்தியாயம் 2:215) 


# மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண்தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள். (அத்தியாயம் 9:14)


# ஆண்களின் மீதான இச்சையாலும், நிலைமாறும் புத்தியாலும், ஈவிரக்கமற்ற இயல்பினாலும் பெண்களை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அவர்கள் தன் கணவனுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள் ( அத்தியாயம் 9:15) 


# மாதர்களுக்கு  இந்த சுபாவம் பிரம்மன் சிருஷ்டித்தபோதே உண்டானதென்று  அறிந்து  ஆடவர்கள்,  அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்யவேண்டியது(அத்தியாயம் 9:16)


# படுக்கை, ஆசனம், அலங்காரம் காமம், கோபம்- பொய், துரோக சிந்தை இவற்றை மாதர் பொருட்டே மனுவானவனவர் கற்பித்தார்.(அத்தியாயம் 9:17)


# பெண்னுக்குப் படிப்பதற்கு உரிமை இல்லை (அத்தியாயம் 9:18)


# மாதர்கள்பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதிசொல்லிய பிராயச் சித்தத்தைக் கேளுங்கள் ( அத்தியாயம் 9:19)


# பெண், மகன், அடிமை – இம்மூவருக்கும் சொத்துரிமை கிடையாது (அத்தியாயம் 9:416)


இவை மனுஸ்மிருதியில் பிற்படுத்தப்பட்ட இந்து மக்களையும், பெண்களையும் பற்றிக் கூறப்பட்டவற்றில் சில பகுதிகளாகும். 


இப்போது கூறுங்கள் பெண்களை இழிவுபடுத்துவது  மனுஸ்மிருதியா?   அல்லது அதைத் தடை செய்யக் கோருகிற தொல்.திருமாவளவனா? 


இப்போதும் மனுஸ்மிருதி! 

-----------------------------------

இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் 27% திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என யுனிசெஃப் என்ற ஐநா சபையின் அமைப்பு 2019 ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்களின் திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பிஞ்சுப் பருவத்திலேயே திருமணம் செய்துகொடுத்துவிடவேண்டும் என்ற வழக்கம் மனுஸ்மிருதியினால் வந்ததுதான்.


இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சட்டம் இருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமையை மறுக்கும் வழக்கம் இந்தியா முழுமைக்கும் இருப்பதற்குக் காரணம் மனுஸ்மிருதிதான்.


2019 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக 4 லட்சத்து ஐந்தாயிரம் வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2018 ஆம் ஆண்டைவிட 7.3% அது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம் பெண்களை சமமாக நடத்தக்கூடாது என்னும் மனுஸ்மிருதியின் செல்வாக்கு சமூகத்தில் நிலவுவதுதான்.


சாதிக்கொரு குடியிருப்பு; அனைத்துசாதியினரும் அர்ச்சகராக முடியாத நிலை; பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முடியாது, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தர முடியாது என்ற பாஜக அரசின் நிலைபாடு – இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனுஸ்மிருதியின் செல்வாக்குதான்.


அரசியலமைப்புச் சட்டமா? மனுவின் சட்டமா?

-----------------------------------------------

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) அறிமுகப்படுத்தப்பட்டபிறகுதான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் தண்டனைச் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் ஒரு குற்றத்தை எவர் செய்தாலும் ஒரே தண்டனைதான் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு புரட்சியாளர் அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பதை இந்நாட்டின் அடிப்படை நெறியாக ஆக்கியது. ஆனால் மனுஸ்மிருதியால் பயனடைந்த சனாதனிகள் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்கவில்லை. சமூகத் தளத்தில் அதன் மேலாதிக்கத்தைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தனர்.


இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அனைவரும் சமம் என்கிறது. ஆனால், மனு ஸ்மிருதியோ அனைவரும் சமம் இல்லை என்கிறது; இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாலின ரீதியாக எந்த பாகுபாடும் காட்டக்கூடாது ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவேண்டும் என்கிறது; ஆனால் மனு ஸ்மிருதியோ பெண்ணுக்குக் கல்வி உரிமையோ சொத்துரிமையோ இல்லை என்று கூறுகிறது.


தற்போது மத்தியில் ஆளும் பாஜகவினர் இத்தகைய பெண்கள் விரோத மனுஸ்மிருதியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக  ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். 


திரு வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி வெங்கடாசலய்யா என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த திரு. கே.ஆர்.நாராயணனின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட அந்தத் திட்டத்தை இப்பொழுது எப்படியாவது நிறைவேற்றிவிடப் பார்க்கிறார்கள்.


மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டம்  அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான  போராட்டமே ஆகும். மனு நூலைத் தடைசெய் என்ற முழக்கத்தின் உண்மையான பொருள் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்து என்பதேயாகும்.


வெறுப்பின் ஊற்றுக்கண்ணை அடைக்க மனுநூலைத் தடைசெய்க! 

----------------------------------------------

மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரச்சாரத்தை நிறுத்தவே முடியாது. அதனால்தான், வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக்கண்ணாகவும், வன்முறையை ஆதரிப்பதாகவும், பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகவும் பெண்களை மிக மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இந்த சமூகநீதி சமத்துவக் கோரிக்கையை ஆதரித்து அனைத்து சனநாயக சக்திகளும்  அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்! 


மகளிர் எழுச்சியே

மக்கள் மீட்சி!- ஆளும்

மனுநெறி வீழ்ச்சியே

மகத்தான புரட்சி!  


-------- விசிக-----------

ஞாயிறு, 12 ஜூலை, 2020

சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" நூல் குறித்து கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்



                   சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" நூல் குறித்து 
                    கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்





கவிமதி சோலச்சி அவர்களின்
காட்டு நெறிஞ்சி ஓர் அறிமுகம்…


இனிய நந்தவனம் பதிப்பகம்
பக்கங்கள் 128

முனைவர் எழில் சோம. பொன்னுசாமி அவர்களின் வாழ்த்துரையோடும், கவிஞர் சோலச்சியின் என்னுரையோடும்
புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில்
அழகு வர்ணனை எதுகை மோனை என்பதை எல்லாம் தாண்டி சமுதாயத்தோடு கலந்து நிற்கும் பிரச்சனைகளை சாட்டையடியாக தன் கவிதைகளில் தந்துள்ளார் கவிஞர். ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது காதல் கவிதைகள்.

நாம் சந்திக்கும் மனிதர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளை எளிய தமிழில் பல கவிதைகளில் கேள்வியாக நம்மிடம் கேட்பது  கவிஞரின் சமுதாய உணர்வை படம்பிடித்துக் காட்டுகிறது.
அப்படி இத்தொகுப்பில் நான் ரசித்து மகிழ்ந்த கவிதைகளை
தாங்களும் ரசித்து மகிழ இங்கே பதிவிடுகிறேன்.

சுதந்திரமாம் சுதந்திரம் என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள வரிகள்…

"சுதந்திரமாய்
வாழுது
வறுமையும்
வரதட்சணை கொடுமையும்
விண்ணையும்
தாண்டிவிட்டது
விதவிதமாய்
ஊழல்கள்"

இப்படி சமுதாயத்தின் அவலத்தை
பேசிய கவிஞர் இக்கவிதையின் முடிவில்....

அந்தரமா நிற்குது
அப்பாவி வாழ்க்கை
எப்ப மலருமோ
ஏங்கி வெடிக்குது
கண்ணீரே காணிக்கை"

-என்று நம்மை கண்ணீர் வடிக்க வைக்கிறார் கவிஞர்.

விழுதொன்று கண்டேன்
என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் உணர்வுகளின் உச்சம்.

"திருடுவதற்கு
ஒன்றுமில்லை
காலியாகவே
சனநாயகம்
சுரண்டப்பட்டது
மண்வளம் மட்டுமல்ல
மனிதவளமும் தான்"

மேலும் இதே தலைப்பில்

"கொள்ளையடிக்கப்பட்ட விடுதலையால்
பாரதியும் தாகூரும்
கண்ணீரால் கைகோர்த்தபடி வங்கக்கடலில்"
என்ன ஆழமான வரிகள்.

உயர்வு என்ற தலைப்பில் அவர் எழுதிய உயர்ந்த சிந்தனை.

"நன்றாகவே உயர்ந்திருக்கிறது
இந்தியா
விலைவாசியில்"

நாகரீகம் என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் உண்மையிலும் உண்மை.

"விலைக்கு வாங்கினேன்
விலையுயர்ந்த வியாதியை
நாகரீகத் தொட்டிலில் நான்"

பாரதி என்ற தலைப்பில் கவிஞர் சோலச்சி எழுதிய எழுச்சி வரிகள்…

"ஓ.. பாரதியே…
சாதிகளை கடந்தாய்
சாஸ்திரங்களை களைந்தாய்
நொறுக்கப்பட்ட
இனத்தின் மீசையும்
முறுக்கி விடப்பட்டது
உன் வரவால் தான்"

கவிஞர், இரங்கல் என்ற தலைப்பில் எழுதிய கவிதை நெஞ்சில் நிலைக்கிறது.

"ஏதோ ஒரு வாகனத்தால் நிகழ்ந்திருக்கக்கூடும்
இந்தப்படுகொலை….
பாராமுகமாய் பலரும்…
ஈக்களும் வண்டுகளுமே
இரங்கல் தெரிவித்தபடி
குடல் கிழிந்து
தலைநசுங்கி கிடந்தது
சாலையின் மையத்தில்
அந்தத்தெருநாய்"

மனதை நெகிழச் செய்த வரிகள்.

இப்படி இந்தப் புத்தகம் முழுவதும்
பொதுவுடைமை வாதியாய் பொங்கி எழுந்த கவிஞர் சோலச்சி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

காட்டு நெறிஞ்சி... இது நம் நாட்டிற்கான நாட்டு விதை!

கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி.. இன்றைய சூழலை அப்படியே படம் பிடித்து காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம். நிச்சயம் நாம் தாராளமாய் படிக்கலாம். வாசித்து மகிழ்வீர்…

விலை 110/-
நூல் தேவைக்கு
இனிய நந்தவனம் பதிப்பகம்
9443284823 

நூலாசிரியர் சோலச்சி 9788210863


நன்றி


ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்

9710513097

திங்கள், 1 ஜூன், 2020

கொரணா ஊரடங்கு - சோலச்சி

கொரணா ஊரடங்கில் ....... சோலச்சி






ஒவ்வொரு பேரிடரும் ஏதாவது ஒரு உண்மையை உலகுக்கு உணர்த்தி விட்டுத்தான் போகின்றது.  விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் உயர்ந்து நிற்கிறது என மார்தட்டிக்கொள்ளும் நாம் வைரஸ் தொற்றுகளுக்கு மருந்த கண்டுபிடிக்க முடியாமல் அல்லாடுகிறோம். 




அன்னவாசல் காவல்துறையுடன் இணைந்து சமூக இடைவெளி பாதுகாப்பு பணியில் வயலோகம் வங்கியில்


https://youtu.be/I6bgVvKJMrE


அன்னவாசல் காவல்துறையுடன் இணைந்து சமூக இடைவெளி பாதுகாப்பு பணி பெருமாநாடு மற்றும் புல்வயல்                                                ரேசன் கடைகளில்

                                               https://youtu.be/OqEI_0he6qA
           ஒவ்வொரு பேரிடரும் மனித நேயத்தை மண்ணில் வேரூன்றி வளரச் செய்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.  சுனாமி உலகை ஆட்டிப்படைத்தபோது எங்கெல்லாம் மனித இனம் இருக்கின்றதோ அங்கிருந்தெல்லாம் மனித நேயம் குவியத் தொடங்கியது.  அதேபோல் கஜா புயலால் மனித வாழ்வு சுருண்டபோது தன்னெழுச்சியாக பலர் திரண்டு துயரினை துடைக்க தங்களால் இயன்ற உதவிகளை வாரி வழங்கினர். 



புதுகை செல்வா அவர்களுடன் புதுக்கோட்டை அரிசி ஆலையில்





   அரசாங்கம் செய்ய வேண்டும் என காலத்தை தள்ளிப் போடாமல் நினைத்த மாத்திரத்தில் கரம் கோர்த்து உதவிட எண்ணிலடங்கா இதயங்கள் இம்மண்ணில் இன்னும் இருக்கின்றன என்பதை இந்த கரோணா ஊரடங்கு காலத்திலும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார்கள். கரோணா ஊரடங்கால் வெளியில் வந்தால் நோய்தொற்று ஏற்பட்டு இறக்க நேரிடும் என்று உணர்ந்த போதும் துணிச்சலோடு எதிர்கொண்டு களம் காண புதுக்கோட்டை தோழர்கள் தயாராகினர்.




https://youtu.be/Ey3BXb_cb4o

            வனத்துறை அதிகாரி பி.தாமோதரன் அவர்களுடன்


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் சித்தூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரில் உள்ள கலையரங்கத்தில்



     வெளியில் வரமுடியாமல் வேலை இழந்து பசியால் வாடும் நிலை உணர்ந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யவும் நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் உதவிகளைப் பெற்று இல்லாதவர்களுக்கு வழங்கவும் புதுக்கோட்டை தோழர்கள் தம்பி மலையப்பன் ஒருங்கிணைப்பில் வாட்ச்அப் குழு ஒன்றை உருவாக்கி பணிகளைத் தொடங்கினர். அதே நேரத்தில் நாங்கள் (சோலச்சி) ,தாமோதரன், செங்குட்டுவன், நெய்வேலி முருகேசன் நால்வரும் வேலை இழந்து வாடுவோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன் வந்தோம். எங்களுக்கு துணையாக நின்றவர்கள் புதுக்கோட்டை தோழர்களான கவிஞர் மலையப்பன், கவிஞர் அப்துல் ஜலீல்,  புதுகை செல்வா, ஐங்கரன் அருண்மொழி, கவிஞர் கீதா, கவிஞர் கஸ்தூரிரெங்கன், மதியநல்லூர் தயாநிதி என தோழர்களின் பட்டியல் நீளும். 









    சாதி மதங்களைக் கடந்து எங்கெல்லாம் மக்கள் துன்பப்படுகின்றனரோ அங்கெல்லாம் ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டினோம். மனிதனின் பிறவிப்பயன் இதுதானே. அரிசி, மளிகை பொருட்கள்,  காய்கறிகளை வழங்கி நாங்களும் உங்களோடு இருக்கின்றோம் என அவர்களின் துயரில் பங்கு பெற்றோம். 



   எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் நால்வரும் பயணித்த ஊர்களான  அன்னவாசல், அகரப்பட்டி, குன்னக்குடிப்பட்டி, திருவள்ளுவர்நகர், நெறிகிப்பட்டி, சுந்தரப்பட்டி, சித்தூர், தெத்தினாம்பட்டி, வேலங்குடிப்பட்டி, மாங்குடி, ஊரப்பட்டி, பிராம்பட்டி, விளத்துப்பட்டி, கீழக்குறிச்சி, நார்த்தாமலை, மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, நல்லூர், அரசமலை, கீரங்குடி, குலமங்களம், சாத்தனூர், நெய்வேலி, வாழைக்குறிச்சி, இடையாத்தூர், வடமலாப்பூர், ஐடிஐ காலனி,  மேலத்தானியம், உசிலம்பட்டி, காரச்சூராம்பட்டி, தாழம்பட்டி, பித்தகுடி, நடுவிப்பட்டி,  பொன்னமராவதி,  தச்சம்பட்டி, கருப்புக்குடிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, பொட்டப்பட்டி, வலசைப்பட்டி, அம்மாபட்டி, கொன்னத்தான்பட்டி, மருத்துவக்குடிப்பட்டி, வேலங்குடி, துவார், பூலாங்குறிச்சி, ராங்கியம், சுந்தரசோழபுரம் , ஆலவயல், பிடாரம்பட்டி என ஊர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். 



   பாதிக்கப்பட்ட உறவுகளைத் தேடி பயணிக்கின்ற தருணத்தில் நிறைய நிகழ்வுகளைச் சந்தித்தோம். வலசைப்பட்டிக்கு சென்றிருந்தபோது நாங்கள் எதிர்பார்த்திராத வகையில் எங்களுக்கு மதிய உணவு அளித்ததோடு விட்டுவிடாமல் என்னையும் உங்களோடு உதவ இணைத்துக் கொள்ளுங்கள் என்று உணர்வு பூர்வமாக உரிமையோடு இணைத்துக்கொண்டார் வலசைப்பட்டி துரை அவர்கள். தனது தோட்டத்தில் விளைந்த ஐம்பது கிலோவுக்கு குறையாமல் கத்தரிக்காயையும் இரண்டு மூடை அரிசியையும் வழங்கி மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் வலசைப்பட்டி துரை அவர்கள்.  



  மேலப்பனையூர் கலைராஜன், மேலப்பனையூர் காமராஜ் ஆசிரியர், பூவலாக்குடி முனைவர் கருப்பையா தலைமையாசிரியர் , புவனேஸ்வரன் ஆசிரியர், கட்டுக்குடிப்பட்டி சந்திரசேகர், உசிலம்பட்டி இராமநாதன் ஆசிரியர், ராராபுரம் செல்வம், ராராபுரம் அய்யாச்சாமி, குலமங்களம் அம்பேத்கர் இளைஞர் மன்றத்தின் உறவுகள், ஆத்தங்காடு இரா.வெள்ளைச்சாமி ஆசிரியர், கீரனூர் சுந்தரி ஆசிரியர், மரிங்கிப்பட்டி அருண்குமார், காரைக்குடி ஓய்வுபெற்ற ஆசிரியர் சோலச்சிஇராமநாதன், நெடுஞ்சாலைத்துறை நல்லூர் வீரன், குலமங்கலம் சண்முகம்,  கீழக்குறிச்சி சி.பாலசுப்பிரமணியம், குலமங்கலம் ராமசாமி, பொன்னமராவதி சிவசுப்பிரமணியன் என உதவிக்கரம் நீட்டினார்கள். 






நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது எனது இல்லத்திற்கு வருகை தந்து நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை அண்ணன் ஜெயபிரகாஷ் அவர்கள் வழங்கி ஆலோசனை வழங்கினார்.


 வாய்கிழியப் பேசுகிறவர்கள் களத்தில் நின்று மக்கள் பணியாற்றிட வரமாட்டார்கள்.  நாமும் நம்மோடு இணைந்திருக்கும் உறவுகளும் அப்படியல்ல.  மக்கள் பணியாற்றவே பிறந்துள்ளோம். ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் பயணிக்க எம்மோடு துணை நின்றவர் அன்புத்தம்பி அரசமலை பி.தாமோதரன்.  தனது மகிழுந்தை கொரணா பணிக்காகவே முழுமையாக அர்ப்பணித்தார். 


ஒரு ஊரில் நல உதவிகள் செய்துகொண்டு இருக்கும்போது ஒருவர் எங்களைப்பார்த்துக் கேட்டார் ''ஊருக்கு வெளியில எதுக்கு திருட்டுத்தனமா கொடுக்குறீங்க'' என்று. அவரால் இந்த மண்ணுக்கும் மனித இனத்துக்கும் எள்ளளவும் நன்மை பயக்குமா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இங்கு இல்லாதவர்களை விட இருப்பவர்கள்தான் உதவிகள் என்று வந்து விட்டால் முதலில் கை ஏந்துகிறார்கள்.  அவர்களிடமிருந்து தப்பிக்கவே சில நேரங்களில் வறுமையுற்றவர்களை வரவழைத்து தனியாக வழங்கினோம்.


               தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
   அன்னவாசல் கிளை  பொறுப்பாளர்களுடன் இலுப்பூரில்

ஒரு தாய் சொன்னார் " சாமி ஒங்களோட சேர்ந்த அத்தன பேரும் நல்லா இருக்கனும் '' என்று சொல்லி கண்ணீர் வடித்தார். இன்னொருவர் சொன்னார் " இன்னக்கி எங்க கொலசாமிதாய்யா ஒங்கள இங்க கொண்டு வந்து விட்ருக்கு '' என்றார்.  இந்த வலி மிகுந்த வரிகள் என் நெஞ்சை துளைத்துக்கொண்டே இருக்கின்றன.  எங்களுடைய நோக்கம் நல்லவர்கள் ஒன்று கூடினால் நாங்களும் ஓடிவந்து ஒட்டிக் கொள்வோம் உங்களோடு பயணிக்க. நாங்கள் முன்னெடுத்துப் பயணிக்கின்றோம் இனியும் காலம்தாழ்த்தாது எங்களோடு எப்போதும் கரம் கோர்ப்பீர்கள் என்று நம்புகின்றோம். 



   புதுக்கோட்டை தோழர்களான பாலாஜி ஆசிரியர், அப்துல் ஜலீல் ஆசிரியர், புதுகை செல்வா, ஐங்கரன் அருண்மொழி, தம்பி மலையப்பன் இவர்கள் பல குழுக்களாக பயணித்து ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் மனநிலை பாதித்தவர்களுக்கும் வழிதவறியவர்களுக்கும் உதவிகள் வழங்கியதன் பட்டியல் நீளும். 



  இந்த கொரணா ஊரடங்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. சேமிக்கவும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பண்பினையும் வழங்கி இருக்கிறது. ''மதுவுக்கு எதிராகவும்  புகைப்பழக்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுப்பாயானால் நீயே என் தோழன்" என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

     எங்களிடம் பொருளாகவும் பணமாகவும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிட முன் வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனசார நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.



 என் ப்ரிய்திற்குரிய உறவுகளே மக்கள் பணியாற்றிட தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்போம். நல்லவர்களாலும் நல்ல உள்ளங்களாலும் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகின்றது.

பின்குறிப்பு : கொரணா உதவிக்கரம் என்றொரு வாட்ச்அப் குழுவை ஆரம்பித்தேன். அதில் ஆசிரியர்களையும் மற்ற நண்பர்களையும் இணைத்தேன். எதிர்பாராதவிதமாக எனது குழுவிலிருந்து விலகிவிட்டது. இன்னொரு ஆசிரியர் தானாகவே அட்மின் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ''நானே கொரணாவுல ரொம்ப சிரமப்படுறேன். குழுவுல சேர்க்கிறேன். உதவி செய்றேனு தேவை இல்லாமல் எதுக்கு என்னை குழுவில் சேர்த்தாய்''  என்று அலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக பேசினார். அந்த ஆசிரியர் வசதியாகத்தான் இருக்கிறார். என்ன செய்வது புரிதல் இல்லாதவர்களையும் சிரித்துக்கொண்டே கடந்து 
போக வேண்டியிருக்கிறது. 

ஞாயிறு, 24 மே, 2020

முதல் பரிசு - சோலச்சி- ஒரு பார்வை - பொன்.குமார்




உண்மையை உரக்கச் சொன்னதற்காக நெஞ்சம் நிறைந்த நன்றி தோழர் பொன்.குமார் அவர்களுக்கு, 




முதல் பரிசு - சோலச்சி - ஒரு பார்வை - பொன்.குமார்



   சின்ன சின்ன கவிதைகள் மூலம் தமிழ் இலக்கியத்திற்குள் அறிமுகமானவர் கவிஞர்சோலச்சி. சின்ன சின்ன கதைகள் அடங்கிய தொகுப்பு மூலம் சிறு கதை உலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் சோலச்சி. 

   இவரின் இயற் பெயர் தீ. திருப்பதி. ஊர் பெயருடன்
அகவை தீ. திருப்பதி என்றானார். அறிவியல் ஆசிரியையும் வறுமையைப் போக்கி வயிற்றுக்குச் சோறிட்டவருமான சோலச்சி என்பவரின் பெயரை தன் புனைப் பெயராக நன்றியுடன் வைத்துள்ளார். ஒவ்வொருவரின் புனைப் பெயருக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கும். இது சற்றே வித்தியாசமானது. இத் தொகுப்பிலும் புனைப் பெயருக்கான காரணத்தைக் குறிப்பிடும் வகையில் ' வாய்ப் பார்த்தான்' கதை ஒன்றும் உள்ளது. பெண் பெயரில் எழுதும் ஆண்கள் மீது ஒரு குற்றச் சாட்டு உண்டு. இது குற்றச் சாட்டுக்கு அப்பாற்பட்டது. 


  சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'முதல் பரிசு'. 2002ஆம் ஆண்டில் ஒரு துணுக்கு எழுதி ' முதல் பரிசுத் தொகை ' பெற்றுள்ளார். இதுவே சோலச்சியை எழுதத் தூண்டியுள்ளது.  துணுக்கு எழுதியவர் சிறு கதை எழுதும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளார். இத்தொகுப்பில் ' ரெண்டாவது ரகம்' என்னும் கதையை எழுதியுள்ளார். எழுத்தாளன் ஒருவன் முதல் பரிசு பெற்றதானது. எழுத்தாளன் இறந்த பிறகே அவன் பரிசு பெற்ற விவரம் தெரிய வருகிறது. இது சோகமானது. ' 


   முதல் பரிசு'  கதை மூலம் சிறிய குடும்பமே சந்தோசம் தரும் என்னும் பாடத்தைக் கற்பிக்கிறது. திருமண வயது வந்து விட்டால் காதலுக்கு எவரும் தடையாக இருக்க முடியாது என்கிறது ' ஆட்டுக்கார ஆறுமுகம்'. இத்தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்த 04.10.2015 அன்று கேவிகே என்னும் குறுஞ்செய்தியில் சோலச்சியின் ஷார்ட் ஸ்டோாரி என்று ஆட்டுக் கார ஆறுமுகம் கதை அறிமுகப் படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு வயது 'பதினெட்டு' ஆன பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறது  'மன்னிப்பு'. 

   குடும்ப சூழ்நிலையால் பெற்றோர் மற்றோர் செய்த தவறால் சிறு வயதிலேயே திருமணம் செய்யப்படும் ஒரு சிறுமியின் நிலையைை ' நிழல் பேசுகிறது ' என்று எழுதியுள்ளார்.


    ' பெண்மை' பெண்ணியம் தொடர்பானது. ஆண்களுக்கு அறிவுரை வழங்கும் கதை. ஒருவனுக்கு ஒருத்தியே என்னும் தத்துவத்தை உபதேசிக்கிறது. ' அப்பாவுக்கு ஒரு கடிதம்...' கதை மிக உருக்கமானது. கணவனை இழந்த பெண் மாமியார் வீட்டில் எதிர் கொள்ளும் பிரச்சனையைப் பேசுகிறது.


  பேத்திக்கு எப்பாடு பட்டாவது பாவாடை சட்டையை வாங்கித் தர போராடும் ஒரு பாட்டியைப் பற்றியது' சாமக் கோழி '.
சினிமா ஆசையில் சீரழிந்து போகும் ஓர் இளைஞனைய் பற்றிய கதையாக ' அவனும் ஆசையும்'பதிவாகி உள்ளது. இதற்கு மாறாக உள்ளது ' என்னவளே நீயிருக்க'.


   இளைஞர்கள் பால் வினையால் பாதிக்கப் படுவதுடன் சிறுமிகளையும் பாதிக்கச் செய்வதைப் பற்றி கூறுகிறது" நஞ்சு போன பிஞ்சு". மகன் கெடுத்தாலும் வேலைக் கார பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மாமியாரின் பாத்திரம் சிறப்பு.
தாயின் கோரிக்கையை மகன் செவி மடுக்காததால் அவள் இறந்து விடக் காரணமாக  இருந்ததை எண்ணி வருந்தும் மகனைக் காட்டுகிறது 'உச்சிப் பொழுதில் அவள்'.


  தொகுப்பில் எதிர் பாராத ஒரு கதை 'எதிர் பாராத யுத்தம்'. இராணுவ வீரன் ஒரு யுத்தத்தில்  இறந்து விட்டதாக அவனைக் காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யப் படுகிறது. ஆனால் இராணுவ வீரன் சாக வில்லை. அவளோ அவன்  நினைவில் தற்கொலைச்செய்து கொள்கிறாள். காதலின் வலிமையைக் காட்டுகிறது.


   ' ஆட்டுக்கறி ' சாப்பிடும் ஆசையில் கணவன் வாங்கி வர இருவரும் சாப்பிடும் முன் நாய் சாப்பிட்டு விடுகிறது. ஆசை நிராசையாய்ப் போனது அனுதாபப் பட வைக்கிறது.


  விடா முயற்சியும் சகிப்புத் தன்மைமயும் வெற்றிப் பெற வேண்டும் என்னும் எண்ணமும் இருந்தால் சாத்தியப் படும் என்கிறது ' பட்ட மரம்'.  'விடியல்' கதைத் தீண்டாமையைப் பேசுகிறது. சமத்துவத்திற்கு சமர் புரிய தயாராகி விட்டனர் என்கின்றனர். ஆனாலும் அது ஒரு கனவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.' தீஞ்ச பனியாரம்' கதை தீண்டாமை இன்னும் தொடர்வதையே காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தன் நிலையை உணராமலே உள்ளனர் என்கிறார். 'பெரிய மனசு' ம் இவ்வாறே உள்ளது. 

  'சாம்பல்' சற்று கடுமையாகவும் கொடுமையாகவும் உள்ளது. உயர் சாதி பெண் தாழ்த்தப் பட்டவனைக் காதலித்தாள் என்பதற்காக இருவரையும் உயிருடன் இருக்கும் போதே அடித்து உதைத்து எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர் சாதி வெறியர்கள். சாம்பலாக்கப் பட்டாலும் இன்னும் சாதி வெறி பல ஊர்களில் அணையாமல் எரிந்து கொண்டுதான் உள்ளது என்கிறார். ஆனால்' பிச்சாயி மகன்' சாதி ஒழியும் என்று நம்பிக்கை ஊட்டியுள்ளா். புதிய தலை முறையினரிடையே ஒரு மாற்றம் தெரிகிறது என்று நம்பிக்கை ஒளி பாய்ச்சியுள்ளார்.


   நாட்டில் 'வினாக் குறி 'யாக பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று சிறுவர்கள் பணிக்கு அமர்த்தக் கூடாது என்பதாகும். குழந்தைத் தொழில் தொடர்வதை 'வினாக்குறி 'யில் தெரிவித்தள்ளார்.


   கோவில் உண்டியலில் காசு போடுவதை விட கையேந்துபவருக்கு காசு போடுவதே 'புண்ணியம்' என்கிறது ஒரு சிறுத்த கதை.
தமிழ் மொழியின் படைப்புகளை பிற மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்பதைக் கூறும் கதையாக உள்ளது' வாய்ப் பார்த்தான் ', இதில் இ்ன்னொரு விசயமும் உண்டு. புனைப் பெயர் எவ்வாறு வைத்துக் கொள்ளப் படுகிறது என்பதையும் சொல்கிறது.


    'கீரி மலை'' ஒரு நல்ல கதை. மலைகள் குவாரியாக்க அழிக்கப் பட்டு வருவதை விவரித்துள்ளது. மக்கள் ரசிக்கவும் மலை தேவை என்கிறது.


  பக்கத்து வீட்டு ஆயாவிற்கு வேண்டா வெறுப்பாக உதவி செய்ய சென்றவன் அவளின் அன்பில் நெகிழ்ந்து விடுகிறான். உண்மையிலேயே அவளை ஆயாவாக பார்க்கத் தொடங்குகிறான். 'புதிதாய் மலர்ந்தான்' என்னும் கதை மூலம் வாசிப்பவரையும் புதிதாக மலரச் செய்துள்ளார்.


   உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்களை வறுமை விடாது என்று ' வரக் காப்பி' கதை மூலம் உணர்த்தியுள்ளார். இதன் மொழி வித்தியாசமாக உள்ளது. தந்தையின் உழைப்பைச் சுரண்டி வாழும் ஒரு மகனை ' திருந்திய உள்ளம் ' கதையின் மூலம்
அடையாளம் காட்டியுள்ளார். தந்தையை எமாற்றிய மகனை ஒரு பெண் எமாற்றி திருந்தச் செய்து விடுகிறாள்.


     'முதல் பரிசு ' என்னும் தொகுப்பு மூலம் ஒரு சிறுகதையாளராக பரிணாமம் பெற்றுள்ளதற்காக கவிமதி சோலச்சிக்கு பாராட்டுக்கள். சிறு கதைகளும் உண்டு. சிறுத்த கதைகளும் உண்டு. சமூக பிரச்சனைகளை பேசும் கதைகளும் உண்டு. சாதாரண கதைகளும்
உண்டு. கதைகளின் எண்ணிக்கையைக் குறைத்து கனமான கதைகளை மட்டும் தொகுத்திருந்தால் முதல் பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். சோலச்சி அனைத்துத் தர மக்களையும் கதைகளில் உலாவ விட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
சோலச்சியை நிறுத்தி பாரர்க்க முடியவில்லை. எதார்த்த வலைக்குள்ளளேயே எல்லா கதைகளும் சிக்கியுள்ளன. அனைத்து கதைகளையும் ஆசிரியரே கூறுவதாக எழுதப்பட்டுள்ளது. வடிவத்தில் மாற்றம் இல்லாததால் வாசிப்பில் சலிப்பு எற்படுவதை உணர முடிகிறது. 

பொன்.குமார்


   ஒவ்வொரு சிறு கதையின் முடிவிலும் அக் கதையின் போக்கை பிரதிபலிக்கும் வகையில் அதன் இறுதி அமைத்திருப்பது சிறப்பு. கவிமதி சோலச்சியின் முயற்சி வரவேற்பிற்குரியது. தொடர்ந்து முயன்று ' முதல் பரிசு' பெற வாழ்த்துக்கள்.

வெளியீடு
இனிய நந்தவனம் திருச்சி 620 003

பொன், குமார்
9003344742


       நூலாசிரியர்  சோலச்சி : 9788210863

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

என்னுயிரே ஆருயிரே - சோலச்சி


        ஆறுகடந்து கோட்டை.....


என்னுயிரே ஆருயிரே
உன்னைத்தான் நானும் இங்கே
மானே.!  தான் இழந்து வாடுறேனே
தன்னந்தனியே உன்னை சுமந்து
நானும் ஏதேதோ பாடுறேனே
அந்த காலங்கள் இன்று வருமா
மானே சோகங்கள் தான் தீருமா.....



அந்தக் கண்மாய் நடுவினிலே
நீர் கொட்டைதான் முளைச்சிருக்கு
நீயும் நானும் தாவணியில்
அயிரை மீனும்தான் பிடிச்சு வந்தோம்  - அன்று
அயிரை குழம்பாச்சு இன்று
என் கண்கள் குளமாச்சு....


பஸ் ஸ்டாண்டில் பைக்கினிலே
நான் உனக்காக காத்திருக்க
பை தூக்கி நடந்து வந்த நானும்
பலாச்சுளை வாங்கி தந்தேன் - அன்று
பாலாச்சுளை இனிப்பாச்சு இன்று
பாதையெல்லாம் முள்ளாச்சு.....


பரபரப்பாய் சாலையிலே
யாரும் பாராமல் பயணிக்க
என் மார்போடு கட்டியணைச்ச
கோடை மார்கழி ஆனதென்ன - அன்று
சூரியன் குளிர்ந்ததடி மானே
உன் நினைவு வாட்டுதடி.....


ஆறு கடந்து கோட்டை போனோம்
அழகே அதை ரசிக்க
மலை மீது ஏறிப்போயி அங்கே
மாறிமாறி கொஞ்சிக்கிட்டோம் - இன்றும்
கோட்டை என்னை தழுவுதடி நாளும்
என் உசுரு நழுவுதடி.....


அந்த சாலையோரம் இளநீரு
வாங்கித் தர நீ ருசிச்ச
உதட்டில் தேன் வழிய நான் ருசிச்சேன்
விழியோடு ஒத்தடம்தான் மானே
வேண்டும்படி கொடுத்துக்கிட்டோம்
அந்த காலங்கள் என்று வருமோ
இழந்த இன்பங்கள் தான் தருமோ......

                     - சோலச்சி புதுக்கோட்டை
                        பேச : 9788210863



சனி, 11 ஏப்ரல், 2020

நந்தவனமும் சோலச்சியும்




நந்தவனத்தோடு சோலச்சி.......



   தனது மிதிவண்டியில் இளைஞர் ஒருவர் பயணித்துக் கொண்டிருக்கிறார். உச்சி வெயில், நெற்றியிலிருந்து குற்றால அருவியாக கொட்டிக்கொண்டிருக்கிறது வியர்வை. அப்போது அந்த இளைஞரின் அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது.  வாகனத்தை ஓர் ஓரமாய் நிறுத்தியபடி இணைப்பைத் தொடர்கிறார்.


   வணக்கம்...

   வணக்கம் ...

யார் பேசுவது...

எல்லாம் உங்களுக்கு வேண்டியவர்தான்...

ஏற்கனவே பழக்கப்பட்ட குரலாக இருக்கிறதே....

குரல் பழக்கப்பட்டது அல்ல. ஆனால் எழுத்துகள் பழக்கப்பட்டது. நான் திருச்சியிலிருந்து பேசுகிறேன்.


                 நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுடன் சோலச்சி

திருச்சியிலிருந்து என்றால் எழுத்தாளர் கிரிஜாமணாளன், எழுத்தாளர் சரஸ்வதி பஞ்சு இவர்களிடம் குரல்வழியாகவும் பழக்கப்பட்டிருக்கின்றேன். நந்தவனம் இதழோடு தொடர்பு உண்டு. ஆனால் நந்தவனம் இதழ்...எழுத்துகளோடு மட்டும் பழக்கம்.

ஆமாம் நண்பரே, நான் நந்தவனம் சந்திரசேகரன் பேசுகின்றேன்.

மகிழ்ச்சி நண்பரே.... என்ற இளைஞரின் முகத்தில் பெரும் மகிழ்ச்சி பொங்குகின்றது.

மிதிவண்டியில் சென்ற இளைஞர் உங்கள்  சோலச்சிதான்.

வருடம் 2005  சனவரி மாதம்.

ஒருமணிநேரம் தொடர்ந்த அலைபேசி உரையாடலில் தற்கால இலக்கியம் தொடங்கி சங்க இலக்கியம் , தற்கால அரசியல் என நிறைய பேசினோம்.  

இரண்டாயிரம் ஆண்டில் நந்தவனம் இதழை வாசிக்க ஆரம்பித்து 2005 ஆம் ஆண்டில் உரையாடுகின்றோம். ஆசிரியர் பணி நியமனம் பெற்றபிறகே அலைபேசி வாங்கினேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை கடிதப் போக்குவரத்துதான்.

நிறைவாக நண்பர் நந்தவனம் சந்திரசேகர் பேசும்பொழுது இப்படியே எழுதிக்கொண்டே சென்றால் நூல் எப்போதுதான் வெளியிடுவது எனக் கேட்டார். 

வெளியிடும் எண்ணம் இருக்கிறது.  பணம் பெரும் சவலாக இருக்கின்றதே என்றேன்.

 பணத்தை விடுங்க. படைப்புகளை கொடுங்கள் நூலாக்குவோம். 

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு நூலாவது எழுதி விட வேண்டும் என்றார்.



     நண்பர் நந்தவனம் சந்திரசேகரின் அந்த உந்துதல்தான் அலைபேசி உரையாடல் தொடங்கிய பத்தாம் ஆண்டில் அதாவது 2015 ஆம் ஆண்டில் எனது முதல் சிறுகதை நூலான "முதல் பரிசு'' என்ற நூலினை புதுக்கோட்டை நகர்மன்றத்துல் என் குரு திருமதி. சோலச்சி அவர்கள் கரங்களால் வெளியிட்டு மகிழ்ந்தேன்.

     இரண்டாயிரம் ஆண்டுகளில் நந்தவனம் இதழ் கையடக்க அளவில் வெளி வந்தது.  எனது நிறைய கவிதைகள் தொடர்ந்து வெளியாகின. 


நந்தவனம் இதழ் மூலமாகத்தான் ராசிபுரம் நாணற்காடன் மற்றும் நீங்காதுயரில் என்னை இட்டுச் சென்ற அருமை மைந்துநர் வைகறை போன்றோர் அறிமுகமாகினர்.  ஒரிஜினல் தாஜ்மகால்,  சன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகின்றான் போன்ற கவிதை நூல்களை எழுதியவர் கவிஞர் வைகறை. எனது முதல் பரிசு சிறுகதை நூல் வெளியீட்டு விழாவுக்காக என்னோடு சேர்ந்து உழைத்தவர்.

    நந்தவனம் பதிப்பகம் மூலமாக புதிய படைப்பாளர்களின் எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. நிறைய படைப்பாளர்களை தமிழ் உலகுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறார். 


வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைக்கிறார். நிகழ்ச்சிகள் பலவற்றில் பலரையும் பங்கெடுக்க வைக்கிறார்.  புதிய படைப்பாளர்களையும் அறமனச்செம்மல்களையும் தனது இதழ்மூலமாக அறிமுகம் செய்து வைத்து நல்லனவற்றை மனதார பாராட்டி விருதுகளையும் வழங்கி வருகின்றார்.

    சிறிய இதழாக தொடங்கிய நந்தவனம் இதழ் மாதந்தோறும் சிறப்பிதழாக வெளிவருகின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் கால் பதித்து தனது முத்திரையை பதித்து வருகின்றது. உலகப் படைப்பாளிகள் பலரும் நந்தவனத்தை வரவேற்று மகிழ்கின்றார்கள்.

    தாலியை அடமானம் வைத்து இதழ் நடத்துகின்றேன் என்று வருந்துபவர்கள் மத்தியில் அயராத உழைப்பால் எதையும் அலட்டிக்கொள்ளாமல் அகிலத்தில் பவனி வரும் நண்பர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் இலக்கிய பணி சிறக்க நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றேன்.

                                                             பேரன்பின் வழியில்
                                                         சோலச்சி புதுக்கோட்டை
ஆசிரியர்
இனிய நந்தவனம் மாத இதழ்
த.பெ.எண் 214. எண்.17,
பாய்க்காரத் தெரு,
உறையூர்,
திருச்சிராப்பள்ளி - 620003
சந்தா ரூ 240/-
(கவிஞர் த.சந்திரசேகரன் 9443284823)

-------------------------




ஞாயிறு, 29 மார்ச், 2020

அட்டணக்கால் புகைப்படங்கள் - சோலச்சி


      

          "அவனியெங்கும் அட்டணக்கால்"


                                         அட்டணக்கால் புகைப்படங்கள் 





  போற்றுதலுக்குரிய அய்யா உயர்திரு.உ.சகாயம் ஐஏஎஸ் அவர்களின் திருக்கரங்களால் இன்று (06.02.2020 வியாழன்) சோலச்சியின் "அட்டணக்கால்'' சிறுகதை நூல் இப்பாரெங்கும் ஒளிவீசத் தொடங்கியுள்ளது.  



             அருகில் என் ப்ரியத்திற்குரிய நண்பன் இரமேஷ்.




                        கவிஞர் மு.மேத்தா அவர்கள் கைகளில் 




                                  இயக்குநர் திரு.பாண்டிராஜ்