வியாழன், 9 ஜூன், 2022

தாக்கத்தை ஏற்படுத்திய தாக்கம் கவிதை நூல் - சோலச்சி

 

''கவிஞர் சசிக்குமாரின் தாக்கம் கவிதை நூல் குறித்து சோலச்சி''

    


தமிழின் கவிதை  உலகில் எண்ணற்ற நூல்கள் பெருகி வருவது உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தாக்கம் இருக்கும்.  அதைக் கவிதையாக்கி நூலாக வெளியிடுவார்கள்.  இங்கு கவிஞர் ஒருவர் ''தாக்கம்'' என்ற பெயரிலேயே கவிதை நூலை வெளியிட்டு தமிழுக்கு பெரும் புகழைச் சேர்த்திருக்கிறார். முப்பத்து நான்கு பக்கங்களைக் கொண்ட கவிதை நூலில் பதினாறு கவிதைகளை புனைந்து வெளியிட்டு இருக்கும் கவிஞர் இளங்கவி பெ.சசிக்குமார் அவர்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். அது என்ன பதினாறு ...?

கலையாத கல்வி,
கபடமற்ற நட்பு,
குறையாத வயது,
குன்றாத வளமை,
போகாத இளமை,
பரவசமான பக்தி,
பிணியற்ற உடல்,
சலியாத மனம்,
அன்பான துணை,
தவறாத சந்தானம்,
தாழாத கீர்த்தி,
மாறாத வார்த்தை,
தடையற்ற கொடை,
தொலையாத நிதி,
கோணாத செயல்,
துன்பமில்லா வாழ்வு.
     - இவையே பெருவாழ்வு வாழ்வதற்கான பதினாறு.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த கவிஞர் சசிக்குமார் அவர்கள் தாக்கம் கவிதை நூலின் முதல் கவிதையே முதுமை என்கிற தலைப்பில் வைத்துள்ளார். முதுமையை பற்றி ஒருவன்  சிந்திக்கிறான் என்றால் நிச்சயமாக அவன் முதிர்ச்சி அடைந்தவனாகத்தான் இருப்பான். பாலூட்டி சீராட்டி வளர்த்த பெற்றோர, முதுமை காலத்தில் எத்தனை பிள்ளைகள் பேணிப் பாதுகாக்கிறார்கள் என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டு விடுகின்றேன். தாகத்திற்கு உதவாத தண்ணீரைப் போலவா நாம் இருப்பது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

முதல் கவிதையே முதுமை என்கிற தலைப்பில் வைத்து நம் கண்களில் கண்ணீர வரவழைக்கிறார் கவிஞர் சசிக்குமார் அவர்கள்.

சாவு வர மறுக்குது
ஒரு வாய்
சோத்த எதிர்பார்த்து என் பொழப்பு ஓடுது...
   - என்று வயதான தாய் புலம்புவதாக படைத்திருக்கிறார் கவிஞர் சசிக்குமார். எத்தனையோ பெற்றோர்கள் தெருக்களில் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கின்றோம். அவர்களுக்கெல்லாம் குடும்பங்கள் இல்லையா....? அவர்கள் பெற்ற பிள்ளைகள் எங்கே...? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நின்று யோசிக்கக் கூட நேரமில்லாமல்தான் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. - என்று புறநானூற்றுப் பாடலில் மாங்குடிக்கிழார் பாடுகிறார். நம்முடைய குலசாமிகளை வயதான காலத்தில் கண்கலங்க விடலாமா....?



வண்ணத்துப்பூச்சி என்கின்ற கவிதையில்....

எள்ளு போன்ற வயிற்றுக்கு
எல்லை தாண்டிப் போகிறாய்... என்று நயமாக சொல்லி நற்றமிழுக்கு புகழ் சேர்க்கிறார். எல்லை தாண்டி சென்றாலும் அதன் இனத்தோடு விரைவில் சேர்ந்து விடுகிறது.  அளவுக்கு அதிகமாக எதையும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. ஆனால் மனிதன் அப்படி இல்லை.  ஒருசாண் வயிற்றை நிரப்ப வாழ்நாள் முழுவதும் அயல்நாடுகளிலேயே வேலை பார்த்து ஓடாய் தேய்ந்து ரசமற்ற கண்ணாடியாக திரும்பி வருகின்றான். குடும்பம் என்கிற இன்பக்கடலில் மூழ்கி திளைக்க வழியில்லாமலேயே போய்விடுகிறது பலரது வாழ்க்கை. நாம் நம்மைச்சுற்றி உள்ள சின்னஞ்சிறு பூச்சிகளிடம் கற்றுக்கொள்வது நிறையவே இருக்கிறது.

ஆசிரியர் பற்றிய கவிதையையும் படைத்திருக்கின்றார் கவிஞர் சசிக்குமார் அவர்கள்.

எல்லோரையும்
முன்னுக்கு கொண்டு வருபவர்களை
பின்னுக்கு தள்ளி பிடரியில் அடிக்கிறது
அதிகாரம்...... இது என்னுடைய (சோலச்சி) கவிதை.  ஆசிரியர்களை அரசாங்கம் எவ்வாறு நடத்துகிறது என்று இப்படி கவிதை எழுதியிருப்பேன். ஒரு நாட்டின் மூல ஆதாரம் விவசாயமும் கல்வியும்தான். விவசாயிகளைகளையும் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களையும் ஆட்சியாளர்களும் பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். எவ்வளவு அநாகரிகமாக நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்துகிறார்கள்.  இப்படியிருந்தால் நாடு உருப்படுவது எப்போது..? மருத்துவர், அரசியல்வாதி, ஆட்சியர்,  பொறியாளர் ,இன்ன பிற....,என அனைவரையும் உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்தான். அனைவரையும் உணவளித்து வாழ வைப்பவர்கள் விவசாயிகள் . இருவரையும் ஒரு நாடு அவமதிக்குமானால் அந்த நாட்டை பேய்கள் ஆளும் நாடாககவும் பிசாசுகள் வாழும் பூமியாகவும் கருதப்படும்.

அளவான கண்டிப்பும்
அளவற்ற அக்கறையும்...
-  கொண்டவர்கள் ஆசிரியர்கள் என்று கவிஞர் சசிக்குமார் அவர்கள் தனது தாக்கத்தை பதிவு செய்கிறார்.  இதற்காகவே அவரை மனசார பாராட்டி மகிழலாம்.

காத்திருக்கும் காதலன் என்கிற தலைப்பில்....

போராடித்தான் காதல் கிடைக்குமென்றால்
போராடுவோம் காதல் கிடைக்கும்வரை... காதலுக்கு பச்சைக் கொடி ஏந்தி உலா வருகிறார். காதலை கொண்டாடத்தவறியதன் விளைவுதான் சாதிய மோதல்களும் மதவாத பிரச்சனைகளும். ஒரே மதம் என்பார்... அதற்குள் ஓராயிரம் சாதிகளை வைத்துக்கொண்டு நாட்டைச் சீரழிப்பார். கேட்டால் நால்வர்ணத்தையும் சாதிய உட்கட்டமைப்பையும் கடவுளே படைத்தார். கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பார். பிறகு நாமெல்லாம் ஒரே மதம்.... ஓடி வாங்க.... ஓடி வாங்க என்று சனாதன கும்பல் இரத்தத்தில் குளிர்காய்கிறது. நாம் காதலைக் கொண்டாட மறந்தால் நமக்கு பிறகான தலைமுறை வாழ்வின் வழிமுறைகள் தெரியாமல் மண்டை பிய்த்துக்கொண்டு மாண்டு போவார்கள்.



தற்கொலை தீர்வல்ல என்கிற தலைப்பில்.....

முள்மரத்தில் கூடு கட்டி
முயன்று வாழும் குருவி கூட
இரை தேட பறந்தாலும்
எண்ணம் யாவும் கூட்டில் உண்டு...
     - என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார். தமிழின் கரம் பிடித்து தரணியில் கவிதைத் தேர் ஓட்ட வந்திருக்கும் கவிஞர் சசிக்குமார் அவர்கள் இன்னும் ஆழமான கவிதைகளை எழுத வேண்டும் என வாழ்த்தி மகிழ்கின்றேன்.
                        பேரன்பின் வழியில்
                        சோலச்சி அகரப்பட்டி.

நூலாசிரியர்
கவிஞர் சசிக்குமார் : +919047369096


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக