சனி, 13 ஜனவரி, 2018

பொங்கலே பொங்காதிரு... - சோலச்சி

நெல்லை விளைவித்த
வயல்காடு
சாவையும்
சாவியையும்
அறுவடை செய்தபடி...!

கழனியில்
கால் வைக்காதவர்கள்
கொண்டாடி மகிழ்கின்றனர்
பொங்கி...!!!

எல்லோருக்கும்
சோறு போட்டவன்
கண்கள் நீரின்றி
அழுகின்றன
வீங்கி ....!!!

பாழடைந்த
பங்களாவைப் போல்
குடல் வெடித்து
கிடக்கிறது
வயல்காடு...

எங்கோ
ஒரு விவசாயி
விளைவித்த
கரும்புக்கும் அரிசிக்கும்
முண்டியடிக்கிறது
ரேசன் கடைக் கூட்டம் ....

இலவச கரும்பும்
உப்புகரிக்கின்றது
வரிசையில் நின்ற
விவசாயிக்கு....!

இப்போதெல்லாம்
சாதிய அரசியலைவிட
விவசாய சாவு
அரசியலே
பிரபலமாகிறது....!

சோறு வேணுமாம்
உழவர்
உசுரு வெறும் மசுராம்....!

உழவர்
ஏர் கலப்பை தூக்கி
ஆள்வோர்
நெத்தியில்
அடிக்கும் நாள்
எந்நாளோ....!

பொங்கலே
பொங்காதிரு
உழவர்
பொங்கி எழட்டும்.....!!!

   - சோலச்சி புதுக்கோட்டை

1 கருத்து: