வெள்ளி, 9 ஏப்ரல், 2021

புரட்சியின் அடையாளம் பாரதி - சோலச்சி

இந்திய எல்லை குமரியில் தொடக்கம்
ஏன் தோழா- இன்னும்
முடக்கம்..!

மத அரசியலை உடைத்து நொறுக்கியவர்
அதற்காகவே
மீசை முறுக்கியவர்...


சேரியை தட்டு
என்றவர் மத்தியில்
பூணூல் போட்டு
பறையடித்தவர்...

அடுப்பங்கரையில் பூட்டியா கிடப்பது
அறியாமையை
எப்போது எரிப்பது...?

வீட்டுக்குள்ளே ஒதுங்கியது போதும்
வெளியில் வா
எல்லோர் பார்வையும்
உன் மீது மோதும்...

அறைகூவல் விடுத்து அழைத்தார்
கவிதை எழுதி
கடினமாய் உழைத்தார்....

பள்ளு பறையனை
கிள்ளுக்கீரையாக
எள்ளி நகையாடயிலே
தோளில் கைபோட்டு
தேர் போல நடந்தார்
பட்டதுயர் கொஞ்சமல்ல
யாவும் கடந்தார்...

குடும்பம் நாளும்
வறுமையில் கிடந்தது
வடித்த தமிழோ
வலிமையாய் இருந்தது....

அஞ்சுவதில்லை
கெஞ்சுவதில்லை
அதனால் இன்றும்
அச்சமில்லை.....!

பெண்ணுக்கு நீதி வைத்தவன்
பேய் மனிதரை
சொல்லால் தைத்தவன்...

காக்கை குருவியையும்
மதித்தவன்
ஒடுக்க நினைப்பவனை
காலில் போட்டு
மிதித்தவன்....

முண்டாசு கவிஞன
உலகு அறியும்
அவன் மூச்சுக்காற்று
எல்லை விரியும்.....

பெற்ற குழந்தைகளை
பட்டினி போட்டாலும்
பைந்தமிழின் பசி அமர்த்தியவர்....

இந்திய தாய் மீது
பற்று கொண்டவர்
பலமொழியும்
கற்றுத் தேர்ந்தவர்...

இப்போதிருந்திருந்தால்
ஆங்கிலேயருக்கும்
பிடித்திருக்கும்
அவர் கவிதை
ஆள்வோர் நெற்றியில்
அடித்திருக்கும்...

பாரதி
கட்டி எழுப்ப வேண்டிய
காவியம்
அவன் காணக் கிடைக்காத
ஓவியம்....

கருப்பு கோட்டணிந்து
கருப்பாடுகளை களைந்தவன்
வான மீன்களை
வீதியில் உலா விட்டு மகிழ்ந்தவன்...

பாரதி
புரட்சியின் அடையாளம்
புதுக்கவிதையின் விளைநிலம்....!!!
                         - சோலச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக