வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

எழடா தோழா - சோலச்சி

ஏமாற்று வேளைகளில் ஈடுபடும்
எத்தர்களை இன்னுமா அறியவில்லை

பொய்யர்களின் பசப்புக்கு
ஏமாந்த நிகழ்வுகளை
இன்னுமா உணரவில்லை

குற்றவாளிகளுக்கு கோயில் கட்டி
கொண்டாடும் கூட்டம் உண்டு காணீர்
தன்குறை மறந்து தம்பட்டம் அடிப்போரை
தரையில் நசுக்கிட வாரீர்

நாவறண்டு தெருவெங்கும்
நடை தளர்ந்தும் போராடி
பெற்ற கொடுமைகள் மறையவில்லை

கொட்டடியில் கொசு குருதி குடிக்க
குமுறி எழுந்த கோபம் குறையவில்லை 

நனைகின்ற ஆடுகள் நனைந்தே திரிய
அழுகுரல் ஒணாய்கள் இருப்பதையும் உறிய
திட்டங்கள் நாளும் தீட்டுதே தோழா
திசை மாறி போகாது திரும்பி வாடா
கண்ட போர்க்களங்கள் கொஞ்சமா
திரண்ட நம்படை இனி அஞ்சுமா
வியாழனும் நடுங்கி நகரணும் - இனி
விண்கதிர் நமக்காக ஒளிரணும்

ஆளுக்கொரு பாதை ஆள்வோருக்கு சுகம்
அண்டவிடலாமா நம் சுடர்மிகு தேகம்

நீலிக்கண்ணீரில் சங்கமித்துவிடாதே
போலி முகங்களை தங்க வைத்துவிடாதே

நானும் நாற்று நட்டேன் என்பான்
வேம்பும் சுவைக்க இனிக்குது என்பான்

அய்யோ பயிர்கள் அழுகுதே என்பான்
அருகில் நின்று ஆறுதலும் சொல்வான்
நானும் உன் சாதி என்றே நசுக்கிச் சொல்வான்
நால்வர்ணத்தை நன்றாய் தூக்கிச் சுமப்பான்

ஏமாளியாக இனியும் இருக்காதே
எடு உன் ஆயுதம் 
களம் காண மறக்காதே

இழந்தது போதும் எழடா தோழா
இன்னுமா உறக்கம் எரிதழல் கொண்டு வாடா

விளைந்தது புரட்சி அடக்குவோர் வீழ்வது உறுதி...!!!
               - சோலச்சி

1 கருத்து: