செவ்வாய், 15 ஜூன், 2021

தமிழ் மருத்துவத்தை காப்போம்- சோலச்சி

பாரம்பரிய தமிழ் மருத்துவத்தை மீட்போம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு:

      நமது பாரம்பரியம் மிக்க தமிழ் மருத்துவத்தை மீட்டெடுக்க வேண்டிய தலையாய கடமை நம்மிடம் இருக்கிறது. நாம் நமது தமிழ் கலாச்சாரத்தின் பண்பாட்டையும் மருத்துவ பயன்பாடு வாழ்க்கை முறைகளையும் மறந்து போனதன் விளைவாக பல இன்னல்களுக்கு ஆட்பட்டு இருக்கின்றோம். நம் முன்னோர்கள் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவத்தை கண்டறிந்து வைத்திருந்தார்கள். மேலும் உணவையே மருந்தாக உட்கொண்டு உயிர் வாழ்ந்தார்கள்.

      இன்று பிறந்த குழந்தைக்கும் சர்க்கரை வியாதி இருக்கிறது. புற்றுநோய் இருக்கிறது. புதிய புதிய நோய்களின் தாக்கத்தால் மானுட சமூகம் பெரும் துயரை சந்தித்து வருகிறது. இன்று பரவலாக குரானா வைரஸ் என்கிற நோய் உலக சமூகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. மருந்துகளின் தேவை அளவுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. மருத்துவ கல்வி என்பது பணம் காய்க்கும் தொழிலாக மாறிவிட்டது. பணம் படைத்தவர்களும் சாதியில் உயர்ந்தவர்களும் மட்டுமே மருத்துவக் கல்வியை பெற முடியும் என்கிற அவல நிலையும் தலைதூக்கி நிற்கிறது. இந்த அவல நிலையை போக்க வேண்டிய தலையாய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. தமிழ்மருத்துவக் கல்வி என்பது இலவச கட்டாய கல்வியாக மாற்றப்படவேண்டும். அதற்கு நம் பாரம்பரிய மிக்க தமிழ் மருத்துவத்தை கல்வியில் இணைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் தமிழ் பாரம்பரியமிக்க தமிழ்மருத்துவம் தெரிந்திருக்க வேண்டும். பாரம்பரியமிக்க தமிழ் மருத்துவத்தை முதல் வகுப்பிலிருந்தே பாடப்பகுதியில் சேர்க்கப்படவேண்டும். முதல் வகுப்பில் பத்து மூலிகைகளின் பெயர்களை படங்களுடன் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த அறிமுகமானது ஒவ்வொரு வகுப்பிற்கும் கூடிக்கொண்டே செல்லவேண்டும். குறிப்பாக ஐந்தாம் வகுப்பில் ஏதாவது இரண்டு மூலிகையின்  பயன்பாடுகளை செய்முறையின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும். மூலிகை பயன் பாட்டின் செய்முறை ஒவ்வொரு வகுப்பிற்கும் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக செய்முறை என்பது காய்ச்சல் வந்தால் கசாயம் தயாரிப்பது எப்படி ? என்கின்ற கேள்விகளுக்கு விடையாக அமைய வேண்டும். நோய் கண்டறிவது எப்படி நோயின் அறிகுறிகள் என்னென்ன என்பது போன்ற செய்முறைகள் மருத்துவ கல்வி முறைகள் பாடப்பகுதியில் இணைக்கப்பட வேண்டும். இந்தப் பாடப் பகுதியை கல்லூரி பாட வரைக்கும் நாம் இலவசமாக கட்டாயப்படுத்தி கற்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய பாரம்பரியமிக்க தமிழ் மருத்துவம் காக்கப்படும். மேலும் பணம் காய்க்கும் தொழிலாக மாறிப்போன மருத்துவக் கல்வியும் காக்கப்படும்.

      இன்று பல நோய்களுக்கு பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையை மாற்ற வேண்டுமென்றால் தமிழ்மருத்துவம் காக்கப்படவேண்டும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சிறிய தலைவலி என்றாலும் அதற்கு பல ஆய்வுகள் பல பரிசோதனைகள் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

     தமிழ் மருத்துவத்தை மாணவர்களின் பாடப்பகுதியில் சேர்க்கப்படுகின்றபோது எடுத்துக்காட்டாக ஐந்தாம் வகுப்பில் இரண்டு செய்முறை என்று வைத்துக்கொள்வோம். ஆறாம் வகுப்பில் ஆறும்   என்று ஒவ்வொரு வகுப்பும் கூடுதலாக செய்முறைகள் பாடப்பகுதியில் சேர்க்கப்படுகின்றபோது குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு முடிகின்ற ஒரு மாணவன் முப்பது நோய்களுக்கான மருந்து தயார் செய்வதற்கும் அந்த நோயை குணப்படுத்துவதற்கான தீர்வையும் அவனால் அடைய முடியும்.

    மண்ணில் முளைக்கின்ற ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு புல்லும் ஒவ்வொரு கொடியும் ஒவ்வொரு நோய்க்கான மருந்தாக பார்க்கப்படுகிறது. நம் குழந்தைகள் செடி கொடி புல் இவற்றின் பெயர்களை மறந்து விட்டார்கள். அவற்றின் பயன்களை அறியாதவர்களாக மாறிவிட்டார்கள். வயது மூப்பின் காரணமாக இறந்தவர்களை விட நோய் வந்து இறந்தவர்களே அதிகம். துளசி, கொட்டாங்கரண்டி, மூட்டை நாரி, தும்பை, திருநீற்றுப்பச்சை, வேப்பிலை, சிறு பீளைச்செடி, அருகம்புல், சிறியாநங்கை, குறிஞ்சாக்கீரை, அப்பக்கொவ்வா, முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, ஆரைக்கீரை இப்படி கீரை வகைகள் அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது.

       சில மூலிகைகள் பயன்பாடு தெரிந்தும் அவற்றை எப்படி உட்கொள்வது என்று பலருக்கும் தெரியவில்லை.
ஆகையால் நம் தமிழ்ச் சமூகம் இழந்ததை மீட்க தமிழ் பாரம்பரியமான தமிழ் மருத்துவத்தை பாடப்பகுதிகள் சேர்த்து நோயில்லா தமிழ்நாடாக மாற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு இதை கொண்டு செல்கின்றேன்.

      போற்றுதலுக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த தகவலை கவனத்தில் கொண்டு பாடப்பகுதியில் சேர்த்து மாணவர்கள் அனைவரையும் தமிழ் மருத்துவம் தெரிந்தவர்களாக மாற்றிட வழிவகை செய்து நோயில்லா தமிழ்நாட்டை உருவாக்கி மகிழ்வீர்கள் என்று நம்பி மகிழ்கின்றேன்.

தங்களின் மேலான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும்
தமிழ்நாட்டு மக்களில் ஒருவன்

   சோலச்சி புதுக்கோட்டை
     பேச: 9788210863

நாள்: 16.06.2021

1 கருத்து:

  1. மிகவும் அருமை நல்ல பதிவு.. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு