சனி, 29 ஜூன், 2024

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழா

சோலச்சி, உலகக் கவிஞர் பீர்முகமது, அன்புக் கவிஞர் நேசன் மகதி,.



தாய் தன் குழந்தைகளின் மீது எப்போதும் தனிக்கவனம் செலுத்துவாள். குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு அவர்களின் சின்னச் சின்ன செயல்களைக் கூட வியந்து வாரி அணித்து கொஞ்சி மகிழ்வாள். ஏனெனில் , தான் கொஞ்சுவதன் மூலம் தனது குழந்தைகள் அடுத்த கட்ட இடத்திற்கு உயர்வார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் 28.06.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தது. உலகக் கவிஞர் பீர்முகமது , அன்புக் கவிஞர் நேசன்மகதி, உங்கள் சோலச்சி என மூன்று குழந்தைகளையும் மேடையில் உட்கார வைத்து அழகு பார்த்து தமிழில் உள்ள அனைத்து சொற்களையும் பாமாலையாக கோர்த்து கொஞ்சி மகிழ்ந்தது.

    பொன்னாடையையும் முத்து மாலையையும் அணிவித்தும் நூல்களை பரிசாக அளித்தும் மூன்று குழந்தைகளையும் உச்சி முகர்ந்து பாராட்டி மகிழ்ந்தது புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியில் தொடர்ந்து வாகை சூடி வருகிறார் அன்புக் கவிஞர் நேசன்மகதி. பழங்காலத்து பொருட்களை சேகரித்து பாதுகாத்து வருகிறார் உலக கவிஞர் பீர்முகமது. சோலச்சியின் முதல் நாவலான "முட்டிக்குறிச்சி" சௌமா இலக்கிய  விருது பெற்றிருக்கிறது. இந்த மூன்று காரணங்களுக்காகவும் மாபெரும் விழா நடத்தப்பட்டது. 

    படைப்பாளர்களை அடையாளம் கண்டு கொண்டாடி மகிழ்வதில் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் தனித்துவம் மிக்கது. தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் மகாசுந்தர் அவர்கள் வரவேற்க தமிழ்ச் செம்மல் தங்கம் மூர்த்தி அவர்கள் அறிமுக உரை நிகழ்த்த வந்திருந்த ஆளுமைகள் தங்களுக்கே உரிய நடையில் வாழ்த்தரங்கத்தை சிறப்பு செய்தார்கள்.

    எழுத்தாளர் விமர்சகர் ராசி பன்னீர்செல்வன் அவர்கள், நல்ல வாசிப்பாளர் சுதந்திர ராசன் அவர்கள், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர் கவி முருக பாரதி அவர்கள், தமிழாசிரியர் கழகத்தின் மூத்த தலைவர் கு.ம..திருப்பதி ஐயா அவர்கள், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள், தனபதி ஐயா அவர்கள், வாசகர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் விசுவநாதன் அவர்கள், பாண்டியன் புத்தகம் முத்துப்பாண்டியன் ஐயா அவர்கள், மூத்த ஆசிரியரும் எழுத்தாளருமான சி. பாலையா அவர்கள், விதைக்கலாம் அமைப்பின் தம்பி எழுத்தாளர் மலையப்பன், தம்பி எழுத்தாளர் பாஸ்கர் கோபால், தம்பி நாகா பாலாஜி, மற்றும் அன்புத் தங்கை ஊடகவியலாளர் சிவா நந்தினி, தமிழ்ச் செம்மல் சந்திரன் அவர்கள், தேசியக்கவிஞர் புதுகைப் புதல்வன் அவர்கள், எழுத்தாளர் கஸ்தூரி ரங்கன், வளர்மதி இதழ் ஆசிரியர் வெங்கடேசன், பட்டிமன்ற பேச்சாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி, எழுத்தாளர் வம்பன் செபா, சகோதரி டெயாசிராணி அவர்கள், தமிழ் பேராசிரியர் தயாநிதி அவர்கள், கவிஞர் சிவகுமார், அருமை நண்பர் வெங்கடேஸ்வரா உதயகுமார் மற்றும் வெங்கடேஸ்வரா இராமன் அவர்கள், அருமை கவிஞர் காசாவயல் கண்ணன் அவர்கள், எழுத்தாளர் ராஜநாராயணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வீரமுத்து அவர்கள்,  பேராசிரியர் கருப்பையா அவர்கள், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் அவர்கள்,  தோழர் பாண்டியராஜன் அவர்கள் என் ஆளுமைகளின் பட்டியல் நீளும். அரங்கம் நிறைந்த காட்சி. ஆளுமைகளின் வாசிப்பின் வாழ்த்து மழையிலும் அரவணைத்து தோள் கொடுத்த பாங்கிலும் நெகிழ்ந்து போனோம். 

      முட்டிக்குறிச்சி நாவலை எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்களின் வேள்பாரி நாவலோடு ஒப்பீடு செய்து வரலாற்றோடும் வாழ்க்கையோடும்  பேசிய எழுத்தாளர் ராசி பன்னீர்செல்வன் அவர்களுக்கும், வாழ்வியலை உணர்ந்து பேசிய ஐயா சுதந்திரராசன் அவர்களுக்கும், முட்டிக்குறிச்சி நாவலில் வரும் சிலை வெட்டிச்சித்தரை குறிப்பிட்டு பேசிய எங்கள் தமிழ் செம்மல் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் , முதல் சிறுகதை நூலான முதல் பரிசு நூல் குறித்து பேசிய அருமை நண்பர் கவி முருகபாரதி அவர்களுக்கும் , சோலைச் செய்யின் வரலாற்று பின்னணியை பேசி மகிழ்ந்த ஐயா கு.மா. திருப்பதி அவர்களுக்கும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து அன்பின் தோழமைகளான ஆளுமைகளுக்கும் பேரன்பின் நன்றிகள்.

     இந்நிகழ்வை மாபெரும் விழாவாக சாத்தியமாக்கியது எங்கள் தமிழ்ச் செம்மல் தங்கம் மூர்த்தி அவர்களையே சாரும். தாய்க்கு நல்ல பெயரைத் தேடிக் கொடுப்பது பிள்ளைகளின் தலையாய கடமை.


முட்டிக்குறிச்சி நாவலை வாசிக்க வேண்டும் என எண்ணும் உன்னத உள்ளங்கள் பதிப்பகத்தாரின் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். 

எழுத்து பிரசுரம் - ஸீரோ டிகிரி 

+91 89250 61999


வாங்கி வாசித்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிட பேரன்போடு வேண்டுகின்றேன்.

நட்பின் வழியில் 

சோலச்சி 

9788210863

















1 கருத்து: