வெள்ளி, 26 ஜூலை, 2024

சோலச்சியின் காட்டு நெறிஞ்சி- பேரா சா.விஸ்வநாதன்

 🌻நல் வணக்கம்🙏



சுரண்டப்பட்டது 

மண்வளம் மட்டுமல்ல

மனித வளமும் தான்!


விழுதொன்று கண்டேன்

கவிதையில் .. பக். 22

                      ....

வீட்டு வேலையும்

விருந்தினர்

உபசரிப்பும்

காத்திருக்கிறது ...


விளம்பர

இடை வேலைக்காக....!

பக்.29.

                       .....

மரம் செழிக்க

வேரும் விழுதும் ...


மாநிலம் தலைக்க

மண்ணும் மனிதமும்...


மண் 

வளர்ச்சியின் முத்திரை!

மனிதம்

நட்பின்

விழித்திரை!

பக்.36.

              ....

தானே தலைவர் என்பார்

தர்மம் நீதி வெல்லும் என்பார்

ஓட்டைகள் ஆயிரம்

வைத்துக் கொண்டு

அங்கே ஒழுகுது

இங்கே ஒழுகுது என்பார்.

தன் ஓட்டை அடைக்க

மறந்திடுவார்!


தமிழாய்! தமிழராய் !

கவிதையில் ..

பக். 74.

                     .....

"சோலச்சி" என்ற, தன் கல்விக்கு வழிகாட்டியதோடு, வாழ்க்கைக்கும் வழிகாட்டிய ஆசிரியையின் பெயரில் இருக்கும்,திருப்பதியை கஜா புயல் நிவாரணத்தின் போது, மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மருத்துவமனையில் முதன் முதலில் சமூக சேவகராக பார்த்தது. இங்கிருந்து தான் நிவாரணப் பொருட்கள் கிராமங்களுக்குக் கொண்டு செல்லப்படும். மனிதர் மூட்டை அரிசியை அநாயசமாக தூக்கிக் கொண்டு போவார். லாரி பொருட்களை சத்தமில்லாமல் இறக்கி விடுவார்கள் சோலச்சியும், எப்போதும் புன்னகையோடு பயணிக்கும்  ஜெரால்டும். ஜெரால்டு அப்போது பள்ளி மாணவர் இப்போது பொறியாளர்.எத்தனையோ குடும்பங்களுக்கு இவர்கள் வழியே பொருட்கள் போய் சேர்ந்திருக்கிறது.

பின்னர் தான் தெரியும் சோலச்சி, புதுக்கோட்டை மாவட்ட ஒரு பின்தங்கிய கிராமப் பள்ளி ஆசிரியர் என்று.

சோலச்சி, ஆசிரியர், சமூக சேவகர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் தற்போது நாவலாசிரியர் என்று பன்முகம் கொண்டவர்.


அவரின் இந்த "காட்டு நெறிஞ்சி" கவிதைத் தொகுப்பு, சமூகம், தேசம் சார்ந்த பிரச்சினைகளை பேசும் கவிதை நூல். எல்லோருக்கும், படித்தவுடன் புரியும் எளிய கவிதைகள். 


எல்லா கவிதைகளும் சிறப்பு. அதில் இரண்டு கவிதைகள் எனக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றியது.

ஒன்று, 


உலக சிம்மாசனத்தில்

உயர்ந்த இடம்

உங்களுக்குத்தான்!


முயற்சியில்

நீங்களே 

எனக்குப் பாடம்!


 என்று,நத்தை, சிலந்தி, எறும்பு மூன்றையும் வைத்து வரைந்திருக்கும் . 'முயற்சி' கவிதை.

இரண்டாவது, சென்னை

'கூவம்' ஆற்றை வைத்து எழுதியிருக்கும்

'கண்ணீர் அஞ்சலி ' கவிதை.

1978 ல் நான் சென்னைக்கு முதலில் போன போது முகத்தில் அடித்த கூவம் 'மணம்' இந்த கவிதையைப் படித்த போது மீண்டும் முகத்தில் அடித்தது 


அம்பானி வீட்டுக்கு போகும் இந்தியப் பிரமுகர்கள் 'தராவி'க்குள் போக மாட்டார்கள்.

சென்னையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் கூவம் கரையிலும், பக்கிங்காம் கால்வாய்க் கரையிலும் நடக்க மாட்டார்கள். "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது" என்பார் காந்தி. சென்னை, மும்பையின் ஆன்மா கூவம் கரையிலும், தராவியிலும் தான் என்று சொல்லலாம். ஒரு முறை, இந்தியாவை உலக வல்லரசாக நினைப்பவர்கள் இந்த இடங்களில் வசிக்கும் மக்களைத் தரிசித்தால் இந்த தேசத்தின் நிலையை அறியலாம்.


கூவம் சிரழிக்கப்பட்டதையும்  தேசத்தின் அவலத்தையும் கூவம் வழி பேசியிருக்கிறார் சோலச்சி, கண்ணீர் அஞ்சலி கவிதையில் . கூவத்தின் வழி இப்படி தேசத்தை யாராவது பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.


வாசிக்க வேண்டிய கவிதை நூல்.


சோலச்சிக்கு ....💐💐


இனிய நந்தவனம் பதிப்பகம்,

சென்னை.

94432 84823

ரூ.110/-

பேராசிரியர் சா.விஸ்வநாதன்




செயலர்,

வாசகர் பேரவை

புதுக்கோட்டை.

வியாழன், 4 ஜூலை, 2024

சோலச்சியைப் பாராட்டி மகிழ்ந்த கவிச்சுடர்

 கவிச்சுடர் கவிதை பித்தன் என்னும் பெரும் குணக்காரர்.



அலைபேசி உரையாடல்:


அழைப்பில் பெயரைப் பார்த்ததுமே மட்டற்ற மகிழ்ச்சி.



சோலச்சி எங்க இருக்கீங்க..


ஐயா.. பள்ளிக்கூடத்துலருந்து வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கேங்கய்யா.


ம்..சரி குமரமலை கிட்ட தானே வீடு.


ஆமாங்கய்யா...


இன்னும் பத்து நிமிசத்துல நம்ம வீட்டுல இருப்பேன். பாத்து வாங்க...


இதைக் கேட்டதும் அடடா... இது என் வரம் அல்லவா... என்று பேரானந்தம் கொண்டேன்.



இன்று (04.07.2024 வியாழக்கிழமை ) மாலை 05.25க்கு எங்கள் இல்லத்திற்கு போற்றுதலுக்குரிய ஐயா கவிச்சுடர் அவர்கள் வருகை புரிந்தார்கள். 


முட்டிக்குறிச்சி நாவலுக்கு சௌமா இலக்கிய விருது கிடைத்திருப்பதை பாராட்டி பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்கள். இலக்கிய ஆளுமைகளை இருக்கும் இடம் தேடி வாழ்த்துவதில் பெரிய மனசுக்காரர். எங்கள் வீட்டில் உள்ள யாவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். எங்கள் இல்லத்தைச் சுற்றிக் காண்பித்தோம். வீட்டுக்குள் இருக்கும் சிறிய நூலகத்தையும் பார்வையிட்டார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூல்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். 

   நான் சிறுவனாக இருந்த பொழுது புல்வயல் கிராமம் நெறிகிப்பட்டிக்கு எங்கள் பெரியப்பா திரு. மாயழகு ஆசிரியர் அவர்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவார்கள். என் தாத்தா எஸ்.ஆர்.பெரியையா அவர்கள் கவிச்சுடர் அவர்கள் மீது தீராத அன்பு கொண்டவர். எங்கள் தாத்தா (அம்மாவின் அப்பா) மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றிருந்த பொழுது நேதாஜி அவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்ததாக சொல்லுவார். மேலும் புதுக்கோட்டை மகாராஜா அவர்கள் புல்வயல் கிராமத்திற்கு வந்திருந்த பொழுது கை கொடுத்து ஆங்கிலத்தில் உரையாடி இருக்கிறார். மகாராஜா வியந்து பாராட்டியதாக புல்வயல் கிராமத்தில் உள்ள மூத்தவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஐயா கவிச்சுடர் அவர்கள் நெறிகிப்பட்டிக்கு வரும் போதெல்லாம் சிறுவர்களாக இருந்த நாங்கள் ஆவலோடு பார்த்து மகிழ்வோம். ஐயா கவிச்சுடர் அவர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார் என்று அலைபேசியில் தொடர்பு கொண்டு  என் குழந்தையிடம் சொன்ன பொழுது என் மனைவி உள்பட யாரும் நம்பவே இல்லை. இன்று எங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்து எங்களை எல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.  காய்ந்து கிடந்த எங்கள் பூமியில் பசும்புற்கள் முளைத்ததாக எண்ணுகின்றேன். எங்கள் இல்லத்தில்  30 நிமிடங்களுக்கும் மேலாக  எங்களோடு கலந்துரையாடி எங்களோடு புகைப்படமெடுத்துக் கொண்டு நாங்கள் அளித்த தேநீரையும் மனநிறைவோடு அருந்தி வாழ்த்தி சென்று இருக்கும் எங்கள் ஐயா கவிச்சுடர் அவர்கள் வந்த இந்த நாள் இனியநாள் என்பேன்.


அக்கா ரமணிதேவி , அண்ணன் வைகை பிரபா,  அருமைத் தம்பி திலீபன்ராஜா போன்றோரின் உறவு முறைகளைப் பற்றியும் ஆவலோடு கேட்டறிந்து மகிழ்ந்தார்கள். 


புதுக்கோட்டை எப்போதும் பெரும் குணக்காரர்களின் கோட்டையாகவும் இருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு சாட்சி.


இடம்: சோலச்சியின் இல்லம்

திருவள்ளுவர் நகர், 

குமரமலை அருகில். 

புல்வயல் கிராமம்.




















புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாராட்டு விழாவின் தொடர் நிகழ்வு தான்  ஐயா கவிச்சுடர் அவர்களின் இன்றைய வருகை.


முட்டிக்குறிச்சி நாவல் தேவைப்படுவோர்
தொடர்பு கொள்ளவும்: ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம் +91 89250 61999