வெள்ளி, 10 அக்டோபர், 2025

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - பேராசிரியர் சா.விஸ்வநாதன்

 சோலச்சியின் "ஆப்பையால ஒரு அடி" நூல் குறித்து பேராசிரியர் சா.விஸ்வநாதன்




நல் வணக்கங்கள்.

படி... படி... படி

மண்ணுக்குள் வைரம் உண்டு.

வைரத்தைச் சுற்றி ஈரம் உண்டு

மரத்திலும் வைரம் உண்டு

வைரத்தைச் சுற்றிலும் ஈரமும் உண்டு

மண்ணை வெட்டினால் வைரம் பிறக்கும்

மரத்தை வெட்டினால் ஈரமும் இறக்கும்...!

..........

படி படி படி

பலமுறை படி

பயனுள்ளதைப்

பயனுறப்படி..!

பக். 26-27.

            ......

விழிதெழு தோழா...

.........

முடியாது என்று நினைப்பது தவறு

முயலாமல் இன்னும்

முடங்கிக் கிடப்பதும் தவறு

இல்லை இல்லை இல்லை

என்ற சொல்லை மறந்தால்

தொடருமா தொல்லை தொல்லை

கால்களும் இரண்டு கைகளும் இரண்டு

பார்வையும் இங்கே பளிச்சென இருந்தும்

சாதிக்காமல் இருப்பது ஏனோ

சாதியத்தில் மூழ்கி தவிப்பது ஏனோ...!

வெறும் கோஷம் போடும்

கூட்டத்தோடு கூட்டுசேராதே

மோசம் செஞ்ச நெஞ்சத்தோடு

நேசம் கொள்ளாதே

தாழ்வு தாழ்வு தாழ்வு

இந்த மனநிலையை மாற்றினால்

வருமே உயர்வு உயர்வு உயர்வு

உலகமும் இருக்கு

உண்மையும் இருக்கு

உழைப்பும் இருக்கு

மலர்ந்திட வழியும் இருக்கு

எல்லோரும் மனிதன்தானே ஏற்றுக்கொள்ளு

உன் வாழ்வில் புனிதம் ஏற்றிச் செல்லு...!

பக்.30.

                 .....

உதிர்ந்த இலைக்கும்

ஆறுதல் சொல்கிறது

பூமி...!

பக். 93.

           .....

எங்கள் தேசத்தில்

பட்டொளி வீசி பறக்கிறது

விலைவாசி.

          ....

இனி எதை ஏற்றுவது

எதை இறக்குவது

எஞ்சியிருப்பதோ

கோவணம் !

பக்.111

               .....

'சோலச்சி' என்ற தன்  அறிவியல் ஆசிரியரின் பெயரைக் கொண்டு எழுதும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் தீ.திருப்பதி எழுதிய கவிதை நூல் தான்

"ஆப்பாயாலே ஒரு அடி "

நூலாசிரியர் சோலச்சி, பள்ளி ஆசிரியர், சமூக சேவகர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசியியர், தொழிற்சங்கவாதி என்று பன்முகங்களுக்குச் சொந்தக்காரர். எல்லா பன்முகங்களும் இவருடைய கவிதைகளில் இருக்கும்.

'ஆப்பையால் ஒரு அடி' என்ற இந்த கவிதை நூலிப் பெரிதும் சிறிதுமாக 57 கவிதைகளும், 8 கைக்கூ கவிதைகளும் உள்ளன.

இந்த நூல் எட்டாவது புத்தகத்திருவிழாவில் செங்காந்தள் சோழன் பதிப்பக அரங்கில், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் வெளியிட புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி பெற்றுக் கொண்டார். இந்த நூலுக்கான தலைப்பு "ஆத்தா எழுந்துவா "தலைப்பிலான கவிதையில் உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு இடையில் பிறந்தவன், தன் தாயிடம் ஆப்பையால் அடிவாங்குவதும், தற்போது மாண்டு கிடக்கும் தாயிடம்

"ஆத்தா.. எழுந்து வா

ஆப்பையால ஒரு அடி

நீ தந்தா போதும் 

பேராசிரியர் சா.விஸ்வநாதன் 

நிம்மதியா தூங்கி முழிப்பேன்" என்று அவன் கேட்பதுமாக இந்தக் கவிதை முடிந்திருக்கும். இந்தக் கவிதை முழுவதிலும் தன் தாயிடம் பெற்ற பாசத்தை, அன்பை, அரவணைப்பை அற்புதமாக வரைந்திருப்பார் சோலச்சி.

    இந்தக் கவிதைக்கு தன் வெளியீட்டு உரையின் மூலம் உயிர் ஊட்டினார் கவிதைப் பித்தன் . " சிறுவயதில் நானும் என் நண்பர்களும் என் தாயின் வாயில் புடைவையை போர்த்திக் கொண்டுதான் உறங்கினோம். அதில் இருந்த சுகம் எதிலும் கிடைக்கவில்லை. இன்றும் என் தாயின் புடவையை விரித்துக் கொண்டுதான் படுத்து உறங்குகிறேன். அதில் படுத்தவுடன் என்னிடம் உள்ள எல்லா மன அழுத்தங்களும் பறந்து போய் நிம்மதியாய் உறங்குகிறேன். உங்களில் யாராவது தாயின் புடவை வைத்திருந்தால், அதில் உறங்கிப் பாருங்கள் சுகம் தெரியும் என்று எதிரே நின்ற வாசகர்களிடம் சொன்னார். அவர் சொல்லிய விதம் அத்தனை அழகாக, உணர்வுபூர்வமாக இருந்தது. பின்னர் சோலச்சியோடு பேசும்போது சொன்னார் நான் இரண்டு புடவைகளை பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒன்று என் ஆசிரியை சோலச்சி அவர்கள் என் அம்மாவிற்கு கொடுத்தது. அதை அவர் கட்டாமலேயே காலமாகி விட்டார். மற்றொன்று என் தாயின் புடவை என்றார்.

நவம்பர் 25 என்ற கவிதையிலும் தான் தாயிடம் பெற்ற அரவணைப்பை உணர்வு பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் சோலச்சி

'ஆப்பையால் ஒரு அடி' கவிதை நூலில் உள்ள அத்தனை கவிதைகளும் எளிமையானவை, அறச்சிந்தனை கொண்டவை. என் போன்றவர்களால் கூட எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவை.  தாய்ப்பாசம், தந்தை நேசம், நிகழ்வில் உள்ள நம் தேசப் பிரச்சனைகள், உலகப் பிரச்சனைகள் அத்தனையும் கவிதையாக பிரவாகமெடுத்து பரவிக் கிடக்கிறது நூல் முழுவதும். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளும் உண்டு. பள்ளியில் தோன்றிய காதலும் சித்திரமாக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை பேராசிரியர். சா.விஸ்வநாதனாகிய எனக்கு சமர்ப்பித்திருக்கிறார். மிக்க நன்றி சோலச்சி.

சமூகம் வாழ நல்ல வழி சொல்லும் கவிதை நூல் இது

வாங்கி வாசியுங்கள்.

சக மனிதர்களை நேசியுங்கள்.

தற்போது புதுக்கோட்டை 8ஆவது புத்தகத்திருவிழாவில்

செங்காந்தள் சோழன் பதிப்பக அரங்கில் நூல் கிடைக்கிறது.

விலை ரூ.150/-

செங்காந்தள் பதிப்பகம்

9865780742.


கருத்துகள் இல்லை: