ஞாயிறு, 14 ஜூன், 2026

கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் அகவை தின வாழ்த்து மடல் - சோலச்சி

     போற்றுதலுக்குரிய எங்கள் ஐயா கவிச்சுடர் அவர்களின் இனிய அகவை தினத்தில் ஐயா அவர்களை ( 14.06.2026 ) அவர்களது இல்லத்தில் சந்தித்து மகிழ்ந்தேன். 

   ஐயா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த அகவை தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.





   அகவை தினத்தில் நான் வழங்கிய வாழ்த்துப்பா மடல்.


                   வாழ்த்து மடல் 


செந்தமிழ்ச் சுடரே செழுந்தேனின் சுவையே

நந்தன தமிழின் நனிமிகு கவிதையே

சிந்தனைக் களஞ்சியமே சீர்மிகு ஓவியமே

காந்திநகரின் கனிச்சுளையே கலைமிகு காவியமே


கலைஞர் வார்த்தெடுத்த கவின்மிகு சொல்லேரே

பெரியார் பேரறிஞர் பெருமைமிகு பெருந்தலைவர்

பாட்டுச் சக்கரவர்த்தி பாவேந்தரைக் கண்டதில்லை

கூட்டுக் கலவையாய் தமிழ் உம்மைக்காட்டி மகிழ்கிறாள்


பாட்டுத் திறத்தாலே பாரை ஆளுகின்றாய்

எட்டுத்திக்கும் தமிழோசை கூட்டி மகிழ்கின்றாய்


சந்தப்பாவேந்தர் வெண்ணரசின் சங்கிலித் தொடரே

கருப்புத் தங்கம் மண்டேலா கண்டிருந்தால்

பொறுப்புடனே கட்டித் தழுவி இருப்பார்

பொறாமை கொள்ளும்படி பூமித்தாயும் மகிழ்ந்திருப்பாள்


ஒடுக்க நினைப்போரை ஓங்கி அறையும்

மிடுக்கான பேச்சு மிளிர்வதெல்லாம் தமிழ்மூச்சு

தயங்கும் மனிதருக்குள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்

தன்னிகரில்லா  பாவேந்தே தடையின்றி பேசும்

கன்னித்தமிழ் கண்டு கழனியே செழிக்கும்


சோர்வடையா உன்கண்கள் சொந்தமெல்லாம் கூட்டிவரும்

சோம்பேறி மனிதரையும் சொடக்குபோட்டு எழவைக்கும்


நரைமுடிதான் நற்றமிழின் நாடித் துடிப்பு

கறைபடியா கவிச்சுடரே கலை நிலத்தில்

உம்பிறப்பு கலைஞரின் உடன்பிறப்பில் உன்னதமே.

       - சோலச்சி

கருத்துகள் இல்லை: