ஞாயிறு, 11 மே, 2025

சாதி மறுப்புத் திருமண தம்பதியர்கள் ஒன்று கூடும் மாநில மாநாடு - பாசறை முரசு

 

30.03.2025 திராவிட இயக்கப் போராளி பாசறை மு.பாலன் அவர்கள் தலைமையில் சாதி மறுப்புத் திருமண தம்பதியர்கள் ஒன்று கூடும் மாநில மாநாடு சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு மலரும் வெளியீடு செய்யப்பட்டது. மலரில் இடம்பெற்ற எனது கட்டுரை. 




சாதியற்றோரை கொண்டாடு; சமத்துவமே பண்பாடு..!

                        - சோலச்சி


 ஒருமைப்பாட்டின் அடையாளமாய் திகழும் இந்தியாவை உலகமே கொண்டாடி மகிழ்கின்றது. பெரும் மக்கள் தொகையில் உலகின் முதல் நாடாக விளங்கும் இந்நாட்டிற்கு பாரம்பரியமிக்க வரலாறு உண்டு. பலதரப்பட்ட இனங்களையும் பழமையான மொழிகளையும் கொண்டது. ஆறுகள் , பெரும் கடல்கள் , மலைகள் , பீடபூமிகள் , பள்ளத்தாக்குகள் , காடுகள் என நிறைந்து காணப்படும் பெரும் நிலப்பரப்புதான் இந்தியா. இயற்கை வளங்களாம் கனிம வளங்களும் கடல் சார் வளங்களும் குவிந்து கிடக்கின்றது. அதனால்தான், உலக நாடுகள் பெரும்பாலும் இந்தியா மீது தனிக்கவனம் செலுத்த முனைகின்றன. இயற்கை சக்தியும் மனித சக்தியும் நிறைந்து கிடந்தாலும் இந்திய விடுதலைக்குப் பின் இப்போது வரை வளரும் நாடாகவே இருப்பதுதான் நம்மை பலவாறு சிந்திக்க வைக்கிறது.

   வளர்ந்த நாடாக மாறுவதற்கு எந்த சக்தி குறிக்கே நிற்கின்றது..? உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பெரும்பாலானோர் முதன்மையாக இருந்தாலும் வறுமையும் வாழ்வியல் நோயும் மிகவும் உச்சத்தில் இருக்கின்றது. ஏழ்மையை ஒழித்து வளமையை மேலோங்க செய்ய எண்ணற்ற திட்டங்களை தீட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், திட்டங்கள் திட்டங்களோடுதான் இருக்கிறது பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. முட்டுக்கட்டைகான மூல காரணம் எது என்று தெரிந்தும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையால மறுப்பதுதான் வேதனையின் உச்சம்.

  உலகத் தமிழனை மதம் பிரிக்கிறது

  உள்ளூர் தமிழனை சாதி பிரிக்கிறது

  எல்லாத் தமிழனையும் சுயநலம் பிரிக்கிறது...! என்பார் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள். நாம் மொழியால் இனத்தால் வேறுபட்டு கிடைக்கின்றோம் என்பதை உணர்ந்தும் அதை சீர் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் வெளிச்சத்திற்கான வாய்ப்புகளே வரக்கூடாது என்று தடுப்பணைகள் போட்டு தடுத்துக் கொண்டே இருக்கின்றோம். ஒருவரை ஒருவர் சமத்துவ உணர்வோடு வாழ்ந்து விடக் கூடாது என்பதில் மத குருமார்களும் மதிப்புமிகு அரசியல் அதிபர்களும் மிக தெளிவாக உணர்ந்து காய்களை மிக நேர்த்தியாக நகர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

   மனிதனின் தோற்றமும் வளர்ச்சியையும் உற்று நோக்கினால் பிற விலங்குகளைப் போல்தான் மனிதனும் உடைகள் இன்றி ஒப்பற்ற பழக்கவழக்கங்கள் இன்றி காடுகள் மலைகளில் ஒளிந்து திரிந்து வாழ்ந்து வந்தான். சக்கரம் கண்டுபிடித்தான்; நெருப்பின் பயனை உணர்ந்தான்; நிலையான வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தான். நிலையாக ஓரிடத்தில் வாழ தொடங்கிய மனிதனிடத்தில் உடைகளை பேணுவதிலும் உணவு முறைகளை உற்பத்தி செய்வதிலுமே சிந்தனை மேலோங்கி இருந்தது. அவனிடத்தில் எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஒரே இனமாக கூடி வாழ்ந்து மகிழ்ந்தார்கள். வேறு நிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவர்களை காலம் தாழ்த்தி சேர்த்துக் கொண்டாலும் அவர்களிடத்திலும் அன்பையே செலுத்தினார்கள் என்பதுதான் உண்மை. எதற்காக காலம் தாழ்த்தி சேர்த்துக் கொண்டார்கள் என்றால் வந்தவர்களின் பழக்க வழக்கங்கள் அங்கு பூர்வீகமாக வாழ்ந்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களைப் பற்றிய முழுமையான புரிதலை உணர்ந்து கொண்ட பிறகே தங்களுடைய குழுக்களில் அவர்களை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களிடத்தில் மொழியின் வளர்ச்சி மட்டுமே மேலோங்கி இருந்தது. ஒருவரை ஒருவர் உணர்வுகளால் பகிர்ந்து கொள்வதற்கு மொழியை வளமை படுத்த முனைந்தார்கள். மொழியை வளமை படுத்த நினைத்த அவர்களிடத்தில் எவ்வித வேறுபாடுகளும் நுழையவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

   வேறு கண்டங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்களால் இந்த பெரும் நிலப்பரப்பாம் இந்திய துணைக்கண்டத்தில் எண்ணற்ற பிரிவுகள் காலூன்ற தொடங்கியது. அதில் பிழைப்பு தேடி வந்தவர்களின் நயவஞ்சக சூழ்ச்சியால் ஒற்றுமை சிதைந்து பிழைப்பு தேடி வந்தவர்கள் முதன்மையானவர்களாக தங்களை மாற்றிக் கொண்டார்கள். பூர்விகமாக வாழ்ந்த மக்களை சிதைத்து அவர்களுக்குள் பாகுபாட்டை விளைவித்து பிழைப்பு தேடி வந்த நயவஞ்சக கூட்டம் தன்னுடைய வயிறை நிரப்பி கொண்டது. ஏதும் அறியாத அப்பாவிகளாய் வாழ்ந்த மக்கள் இப்போது வரை ஏதோ ஒன்றைப் பிடித்து சுய பெருமை பேசுவதிலும் மற்றவர்களை அடக்கி ஆள்வதிலுமே தன்னை முன்னிலைப்படுத்தி பிழைப்பு தேடி வந்தவர்களுக்கு கொத்தடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொத்தடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று உலகத் தலைவர்கள் ஆபிரகாம் லிங்கன், இத்தாலியின் தந்தை கரிபாலிட்டி, லெனின், காரல் மார்க்ஸ், அம்பேத்கர், தந்தை பெரியார், ஆப்பிரிக்காவின் அறிவுச் சுடர் நெல்சன் மண்டேலா என சான்றோர் பலரும் போராடினர். ஆனால் இப்போது வரை இந்த சாதிய கொத்தடிமை முறை ஒழிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

1916 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாதிகள் என்கிற உயரிய கட்டுரையை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உலக மக்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றார். அதில் இந்தியாவில் நிகழும் சாதிய கொடுமைகளையும் சாதிய முறைகளையும் சாதி ரீதியான அச்சுறுத்தல்களையும் சாதிய வன்கொடுமைகளையும் படம்பிடித்து காட்டியிருப்பார்கள். பெரும்பாலான உலக நாடுகளில் மதத்தை வைத்து சண்டை செய்வார்கள். சில நாடுகளில் மனிதனின் நிறத்தை வைத்து சண்டை செய்வார்கள். சில நாடுகளில் நிலத்தை வைத்து சண்டையிடுவார்கள். ஆனால், இந்தியாவின் சாபக்கேடு சாதியை வைத்து சண்டையிடுவதுதான் அவமானம். வன்கொடுமைகள் மதம், இனம், நிறம் ,நிலம் என எந்த வகையில் தலை தூக்கினாலும் அவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இந்தியாவில் சாதிகள் என்கின்ற கட்டுரை இப்போது வரை பெரும் தாக்கத்தையே ஏற்படுத்துகின்றது. அந்த சாதிகளில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து கதவுகளையும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் திறந்தே வைத்திருக்கின்றார்கள்.





  திருமண சடங்குகளில் மாற்றத்தை கொண்டு வருவதில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். ஒரே இனத்திற்குள் திருமணம் முறை மாறி பரவலாக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபட விளக்குகின்றார். அப்படி விரும்பியவருடன் திருமணம் என்கிற முறை மலருமேயானால் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சமத்துவம் மேலோங்கும்.‌ சாதி, மதம் ,இனம் நிறம், நிலம் இவற்றை வைத்து வயிறு வளர்க்க வேண்டும் என நினைக்கும் அரசியலில் ஊடுருவியிருக்கும் பிழைப்பு வாதிகள் வன்முறையை தூண்டி வசதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தன்னை நம்பி வந்த மக்களை நட்டாற்றில் தள்ளி, எள்ளி நகையாடுகின்றார்கள்.

  கேள்வி கேட்காத சமுதாயம் உருப்படாது என்கின்றார் மனித குல மாமேதை சாக்ரடீஸ்; உழைக்கும் வர்க்கமே ஒன்று கூடுங்கள் என்று உரக்க அறைகூவல் விடுக்கின்றார் காரன் மார்க்ஸ்; நானே சொல்லி இருந்தாலும் உன் அறிவுக்கும் புத்திக்கும் சரி என்று தோன்றுவதை செய் என்கின்றார் தந்தை பெரியார்; அதிகாரம் கைக்கு வந்தால் மட்டுமே தலை நிமிர்ந்து வாழ முடியும் அதற்காக படி படி கல்வியால் மட்டுமே அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்கின்றார் அண்ணல் அம்பேத்கர்; கல்விதான் ஒருவனை முழு மனிதனாக மாற்றுகிறது என்கின்றார் புரட்சியாளர் சுவாமி விவேகானந்தர்.

    மதத்தாலும் சாதியாலும் எண்ணற்ற மூட நம்பிக்கைகள் வேரூன்றி நிற்கின்றது. குடி பெருமை பேசியே பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றது. சில சமூக விரோதிகள் அரசியலில் நுழைந்து அரசியல் ஆதாயத்திற்காக மதத்தையும் சாதியையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். வருங்கால சந்ததியினர் மதங்களற்றவர்களாகவும் சாதிகள் அற்றவர்களாகவும் மனித நேயத்தையும் மனிதத்தையும் கொண்டவர்களாகவும் வாழ வகை செய்ய வேண்டியது நம்முடைய கடமை. சாதி மறுப்பு திருமணம் செய்தோரின் பெயர் பட்டியல் நீளும். சாதி மறுப்பு திருமணத்தால் சமூக கட்டமைப்பு வளர்ச்சி மாறுகின்றது. மறுமலர்ச்சி மிக்க சமுதாயம் உருவாகுவதற்கு சாதி மறுப்பு திருமணம் மிகவும் துணையாக இருக்கின்றது.

    சாதிகளைத் துறந்து மதங்களை வேரறுத்து மனிதனாக வாழ வேண்டும் என்று பலரும் துணிந்து விட்டனர். ஒரே இனத்திற்குள் மணம் புரிவதை கைவிட்டு மனம் விரும்பும் ஒருவரை மணப்பதற்கு தயாராகி விட்டனர். ஆனால் அவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமத்துவத்தை கேலிக்கூத்தாக்குகிறது. 150 கோடியை மக்கள் தொகையில் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வேளையில் மனிதத்தை இழந்து வெற்று சடலமாக வாழ்வது வீண் என்பதை பலரும் உணர்ந்து விட்டனர். அப்படி வாழ துணிந்தவர்களுக்கு பாதுகாப்பு என்கின்ற மாபெரும் அரண் தேவைப்படுகின்றது.

   இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைவரையும் சமம் என்கின்றது. அனைவருக்குமான இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகின்றது; வகைப்படுத்துகின்றது. அந்த வகையில் மதத்தை துறந்தவர்களை சாதியை துறந்தவர்களை சாதிகள் அற்றவர்களாக அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களாட்சி நாடாகிய இந்திய ஒன்றியத்திற்கு இருக்கின்றது. சாதியற்றவர்களுக்கான பாதுகாப்பையும் இட ஒதுக்கீட்டையும் மாநில அரசுகள் தாமாக முன்வந்து சட்டமன்றங்களில் சட்டமாக இயற்றி அங்கீகரித்து ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.



  அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்று வையகத்து புகழ் மாணிக்கம் வள்ளலாரின் நெறி மெய்ப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. சாதிய வன்கொடுமைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் இந்தியா முழுவதும் நீண்டு கொண்டே இருக்கின்றது. சாதியற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அளிப்பதன் மூலம் கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்வதால் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் உறுதி செய்யப்படும். சாதியற்றவர்கள் பெரும்பான்மை சமூகமாக வலுப்பெறும் பொழுது சாதியையும் மதங்களையும் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருப்பவர்களின் கரங்கள் தானாக விலகிவிடும். மாறுபட்ட மண் மாறுபட்ட கலாச்சாரம் மாறுபட்ட பழக்கவழக்கம் கொண்ட இந்நாட்டில் ஒரே நாடு ஒரே மொழி என்கின்ற நயவஞ்சக சூழ்ச்சியில் மக்களை வீழ்த்த காத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் சமூக நீதியை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அயோத்திதாச பண்டிதர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் கண்ட கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றால் இக்காலத்திலேயே இந்த இட ஒதுக்கீடை சாத்தியமாக்க வேண்டியது அவசியமாகின்றது.

   தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் 69% விழுக்காடு இட ஒதுக்கீடுகளைச் சத்தியமாக்கிய இத்தமிழ் நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்யும் சாதியற்றோருக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி உலக வரலாற்றில் ஒப்பற்ற இடத்தை பிடிப்போம் என நம்புகின்றோம்.

         ************

மாநாட்டு சிறப்பு மலர் தேவைப்படுவோர் 

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 

பாசறை முரசு ஆசிரியர் மு.பாலன்

98417 81220

திங்கள், 5 மே, 2025

நாள் பூரா நானும் உன்ன பாக்கனும் - சோலச்சியின் காட்டு வெறிச்சி நூலிலிருந்து

 நாள் பூரா நானும் உன்ன பாக்கனும்

நான் சாய உன் மடியும் பூக்கனும்


உன் நீளமான கூந்தல்

என் நெற்றியிலே வருடனும்.!

உன்ன நான் முழுசா திருடனும்.!


உன் உள்ளத்துல பூத்தப் பூ

மெல்ல உதட்டோரம் சிரிக்குது.!

உரிமையோடு என் இடுப்ப

ஒரு மாதிரியா அணைக்குது.!


உன்ன நெனச்சாலே பனியாறு

எம்மனசில் ஓடுது.!

நீ நெருங்க குளிரும்

இன்னும் கொஞ்சம் கூடுது.!


வாடைக்காத்து என்ன வந்து

தொட்டது இல்ல!- உன்

ஓரப்பார்வை என் உசுர

குடையுது புள்ள.!


ராத்திரியில் நான் தூங்கமுடியல.!

காத்திருக்கும் இரு மனசும்

ஒன்னு சேர பொழுதும் விடியல.!


நீ பூத்த அந்த நாளு

இன்னும் மனசில் நிக்குது.!

நிற்காம நீ பார்த்த

அந்த பார்வை இப்பவும் சொக்குது.!


சின்ன வயசிலேயே

என் கன்னக்குழி

உன்னை கட்டி இழுத்தது.!


சின்னப் பொண்ணா நீ இருந்த

உன் மனசு

என்ன ஒதுக்கி வச்சது.!


இப்ப ரெண்டு பேரும்

தவிக்கிறோமே...

அந்த காதல்

எப்படி நுழஞ்சது.!


என்ன அறியாம உன்ன

அழைத்தேன் அன்று ;

வந்திருந்தா தவிக்காதடி

நம்ம உசுரு இன்று.!

ஒன்னுக்குள் ஒன்னாவே

நாம இருப்போம்.!


அந்த

ஊரு உலகம் பார்க்கும் போதும்

வாழ்ந்து காட்டுவோம்.!


உன்னைத் தாங்கி

நானிருக்கேன்

தனிமையிலே உன்னைப் போல.....

  • சோலச்சி

[ சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" கவிதை நூலிலிருந்து....]